தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

யுத்தம் - பாகம் 9



கொட்டித் தீர்த்த மழையின் விளைவாய் பத்மாபூரின் முன்னிரவு குளிர்ந்திருந்தது. அதற்கு மாறாக ஆதித்ய விக்ரமரின் மனம் அனலைக் கக்கிக்கொண்டிருந்தது. நிகரற்ற அதிகாரத்தின் இருசியைக் கண்ட அவர் அதைப் பறிக்க ஒரு பகைவன் வந்ததும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. இதுவரை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி துர்காபுரியின் அரண்மனை அவர் பிடிக்குள் இருந்தது. இப்போது முளைத்திருக்கும் இந்தப் புதிய அபாயத்தை அவர் முளையிலேயே கிள்ளி ஏறிய உறுதிகொண்டார்.

எப்பொழுதும் புன்னகையும் கர்வமும் குடியிருக்கும் தன் தந்தையின் முகம் கோவத்தை வெளிப்படுத்துவதைக் கண்ட திவ்யாங்கன் குழப்பமடைந்தான். அமைதியாய் அவர் அருகில் சென்று அமர்ந்தான். அவன் ஏதும் கேட்கும் முன்னதாகவே விதுரசேனர் விடுத்த திருமணக் கோரிக்கையைக் குறித்துக் கூறினார்.

“இதில் நாம் வருந்துவதற்கு என்ன இருக்கிறது தந்தையே? மகாராணியாரும் இளவரசியும் அல்லவா இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

“இது வெறும் திருமணம் குறித்த விஷயம் அல்லவே மகனே.. இந்த நாட்டின் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப்போவது யார் என்பதையும் இது தானே தீர்மானிக்கப் போகிறது?”

“அப்படியே ஆனாலும் இதில் நாம் வருந்த என்ன இருக்கிறது தந்தையே? அரசாளும் வாரிசு யார் என்பதை அரச குடும்பம் தானே தீர்மானிக்க வேண்டும்? இளவரசியார் அமரகீர்த்தியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதைத் தடுக்க நாம் யார்?”

இவ்வாறு கூறும்போது திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. திவ்யாங்கன் ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டான் எனத் தெரிந்திருந்தாலும், இந்த வார்த்தைகளைத் தன் வாயால் வேதனையாகவே இருந்தது. அல்லது அமரகீர்த்தி ஒருவேளை சம்மதித்து விடுவானோ?

“யாரோ ஒரு வந்தேறி ஆட்சி செலுத்துவதற்காக இந்த அரியாசனத்தை இத்தனை காலம் நான் கட்டிக் காக்கவில்லை மகனே..அதில் நீ அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். அதுவே என் எண்ணம்”

தான் கேட்ட வார்த்தைகளின் வீரியம் திவ்யாங்கனை நிலைகுலையச் செய்தது. தன்னை முன்னிருத்தி இத்தனை பெரிய திட்டத்தை தன் தந்தை திட்டியிருப்பார் என திவ்யாங்கன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன அபத்தம் இது தந்தையே? என் மனதில் அவ்வாறு எந்த எண்ணமும் இல்லை. இந்த நாட்டை ஆளும் ஆசை எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது.”

“பொய்யுரைக்காதே மகனே.. இந்தத் திருமணப் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும்போது உன் முகம் வேதனையில் வாடுவதை நான் பார்த்தேன். அரசாட்சியை விடு. இளவரசியின் மீது உனக்கு ஆசையில்லை? அவளைத் திருமணம் செய்துகொள்ள நீ விரும்பவில்லை?”

“சத்தியமாக இல்லை தந்தையே”

“பின்னர் ஏன் திருமணம் குறித்த விவாதத்தின் போது வாடினாய்?”

“ஆம் தந்தையே.. அந்தத் திருமணப் பேச்சு எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அது இளவரசியைக் குறித்தல்ல. இளவரசரைக் குறித்தது.”

ஆதித்ய விக்ரமரின் முகத்தில் குழப்ப ரேகைகள் எட்டிப் பார்த்தன.

“ஆம் தந்தையே.. நான் இளவரசர் அமர்கீர்த்தியைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் மணமுடித்துக்கொள்ள என்னால் இயலாது.”

ஆதித்ய விக்ரமர் நொறுங்கிப் போனார். திவ்யாங்கனின் வார்த்தைகள் உணர்த்தியதைவிடத் தெளிவாக அவன் குரலில் இருந்த உறுதி அவன் காதலை உணர்த்தியது. கோவத்துடன் அவ்விடம் விட்டுச் சென்றுகொண்டுருந்த தன் மகனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இது வேகத்தாலோ வலிமையாலோ தீர்க்ககூடிய சிக்கலில்லை. இதைத் தந்திரத்தால் வெல்ல அவர் தீர்மானித்தார்.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

யுத்தம் - பாகம் 8

பத்மாப்பூரின் வானம் நீலத்திலிருந்து கருமைக்கு நிறம் மாறிக்கொண்டிருந்த அந்தி வேளை. விதுரசேனரின் மனம் தெளிவின் பிரகாசத்திலிருந்து குழப்பத்தின் அந்தகாரத்திற்குள் விழுந்த்கொண்டிருந்தது. மனதின் எண்ணத்தை முகத்தின் பாவத்தால் அறிந்த்கொள்ளும் மதியூகம் உள்ள அவரால், ஆதித்ய விக்ரமரின் மனதிலிருப்பவற்றைப் படிக்க முடியவில்லை. உரையாடலின் போது எதிராள் எதிர்பாராத நேரத்தில் முக்கிய முடிவுகளைக் கூறி, அவர்களின் மன ஓட்டத்தை கணிப்பது அவரின் வழக்கம். ஆனால் அதித்ய விக்ரமனிடம் இந்த வேலை செல்லுபடியாகவில்லை. அவர் உணர்ச்சிகளுக்கு மூடிபோட்டு மூடியிருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் திருமணக் கோரிக்கை உட்பட முக்கியக் காரணிகள் குறித்த மந்திரியாரின் எண்ணத்தை அவர் அறிய முடியவில்லை. குறைந்தபட்சம் அவர் இவற்றை ஒப்புக்கொள்வார அல்லது முட்டுக்கட்டை போடுவாரா என்பதே மர்மமாயிருந்தது.

இவ்வாறு அவர் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தபோது, வாட்டத்துடன் சென்ற தன் மகன் மிகுந்த குதூகலத்துடன் உள்ளே நுழைந்ததைக் கவனித்தார் விதுரசேனர். இந்த அளவுக்கு அவன் உற்சாகமடையும்படி என்ன நடந்திருக்கும் என்ற குழப்பமும் அவரின் குழப்பப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. தன்னை நோக்கித் துள்ளலுடன் வந்த மகனிடம், “என்ன மகனே! இவ்வளவு உற்சாகமாய் இருக்கிறாய்.. என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

“அதைப் பின்னர் கூறுகிறேன் தந்தையே… மந்திரியாருடன் நிகழ்ந்த சந்திப்பு எப்படி? சுமூகமாய் முடிந்ததா?”

விதுரசேனர் நிகழ்ந்த உரையாடல் முழுதையும் விரிவாகக் கூற அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், திருமண விஷயம் பற்றிக்கூறியபோது ஆத்திரமடைந்தான்.

“தந்தையே! நான் தங்களின் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் இப்படி நடந்துகொண்டீர்களே? என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் என் திருமணம் குறித்து எப்படி நீங்கள் முடிவெடுக்கலாம்? எனக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை”

“ஒரு தந்தையாக நான் செய்தது தவறுதான் மகனே... ஆனால் ஒரு தேசத்தின் அரசனாக, கூடும்ப நலத்துக்காக தேச நலத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அது இராஜநீதியாகாது. நாட்டின் நலனுக்காக இந்தத் தியாகத்தை நீ செய்தே ஆக வேண்டியிருக்கிறது”

“உங்களுக்குப் புரியவில்லை அப்பா.. என் இதயம் இப்போது என் வசம் இல்லை. என் காதல் வேறொரு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, இராஜநீதி என்ற பெயரில் ஒரு பெண்ணுக்குத் துரோகம் இழைக்க என்னால் இயலாது.”

விதுரசேனர், ஆகாயம் நொறுங்கி அவர் தலை மீது விழுந்தது போலவும், தன் காலடியில் தரைபிளந்து பாதாளத்தில் விழுந்தது போலவும் உணர்ந்தார். அவர் திகைத்து நிற்க, அமரகீர்த்தி தொடர்ந்தான்: “ஆமாம் தந்தையே! நான் மகாமந்திரியார் ஆதித்ய விக்ரமரின் புதல்வனும், துர்காபுரியின் தளபதியுமான திவ்யாங்கனைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் என்னால் மனதால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான்.

விதுரசேனர் தான் கண்ட கனவிற்குப் பல இடையூறுகள் நேரும் என்று எதிர்பார்த்திருந்தாலும், இந்த ரூபத்தில் ஒரு பிரச்சினை வரக்கூடும் என்று நினைக்கவில்லை. அவரின் மகாசாம்ராஜ்ஜியக் கனவு பொலபொலவெனத் தகர்ந்து விழுந்தது.

“எத்தனையோ எத்தர்களை சமாளித்த என்னால் இந்த ஒருவனைச் சரிகட்ட முடியாதா? கண்டிப்பாக ஒரு வழி இருக்கும்.” விதுரசேனரின் நரிப்புத்தி சிந்திக்கத் துவங்கியது. அதட்டி, மிரட்டித் தன் மகனை வழிக்குக் கொண்டுவர முடியாது. இது விவேகத்தால் சாதிக்க வேண்டிய காரியம். கார்மேகத்தைப் பிளந்து வரும் மின்னலைப் போல அவர் மனதில் ஒரு தீர்வு தென்பட்டது. சிக்கலான, ஆனால் கண்டிப்பாய் அனுகூலம் தரக்கூடிய ஒரு தீர்வு. அவர் நேரே தன் மகனைத் தேடிச் சென்றார்.

“மகனே! என் மீது கோவமா?”

அமரகீர்த்தி பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“உன் மகிழ்ச்சியும் நல்வாழ்வும்தான் எனக்கு முக்கியம் மகனே! உன் காதலுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால் உன் காதல் வெற்றியடைய வேண்டுமல்லவா?”

அமரகீர்த்தியின் கண்கள் கோவத்தையும் அதேசமயம் குழப்பத்தையும் வெளிப்படுத்தின.

“நீ சுபர்ணராஷ்டிரத்தின் இளவரசன். நம் நாட்டை ஆளப்போகிறவன். உன்னை நம்பித்தான் நம் நாட்டின் எதிர்காலமே இருக்கிறது. இல்லையா?”

“ஆமாம்”

“திவ்யாங்கன் துர்காபுரியின் தளபதி. அவன் உன்னை மணந்து உன்னுடன் – நம்முடன் – வர சம்மதிப்பானா? அவனால் உனக்காகத் தன் நாட்டைத் தியாகம் செய்ய முடியுமா?”

அமரகீர்த்தி ஏதோ சொல்லத்துவங்க, அவனைக் கையமர்த்தி, “எனக்குப் பதிலளிக்கவேண்டி இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை மகனே! இது உன்னை நீயே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. உன் காதலனைக் கேட்கவேண்டிய கேள்வி. நன்கு யோசித்து முடிவெடு.”

காரியம் கச்சிதமாய் முடிந்த்தை எண்ணி மகிழ்ந்த்தாய் விதுரசேனர். முடிவு எப்படியாயினும், அது அவருக்கு இலாபமாகவே முடியும். ஒருவேளை திவ்யாங்கன் சம்மதித்துத் தன் மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினால், துர்காபுரியின் தெய்வீகப் பாதுகாப்பு அழியும். வெளியேற மறுத்தால் அவர்கள் காதல் அழியும். எப்படியாயினும், அவர் விரும்பியது நடந்துவிடும்.
மகன் பரிசாய் அளித்த குழப்பத்திற்கு வட்டி சேர்த்து, அவனிடமே திருப்பித் தந்துவிட்டுப் போனார் விதுரசேனர். அமரகீர்த்திக்கு இன்றும் தூக்கம் முள்படுக்கையின் மீதே விதிக்கப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

வியாழன், செப்டம்பர் 12, 2013

யுத்தம் - பாகம் 7

படமெடுத்து நின்ற பாம்பைக் கண்டதும் திவ்யாங்கன் உறைந்து நின்றான். அவன் பின்னே வந்துகொண்டிருந்த அமரகீர்த்தி, இதைக் கண்டதும் திவ்யாங்கனைப் பின்னால் இழுக்க, வேகமாக ஏதோ அசைவதைக் கண்ட பாம்பு, திவ்யாங்கனைச் சீண்டப் பாய்ந்தது. ஆனால், கணப்பொழுதில், திவ்யாங்கன் விலகிட, தீண்டப்படாமல் தப்பினான். பின், அமரகீர்த்தியின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “அசையாதே, அமைதியாய் இரு” என்றான். ஓரிரு நிமிடங்களில் அந்தப் பாம்பு ஊர்ந்து மறைந்தது. அது மறைந்ததும், அமரகீர்த்தி பதற்றத்துடன், “திவ்யாங்கா! உனக்கு ஒன்றும் இல்லையே.. அந்தப் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா?” என்று கேட்டான். கேட்டவன், அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனைக் கீழே அமரச் செய்து, அவன் கால்களில் ஏதும் காயம் இருக்கிறதா என்று சோதித்தான்.

“அமரகீர்த்தி.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. விடு” என்று திவ்யாங்கன் சொன்னதைக் கூட கேட்காமல், தானே பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நல்லவேளை.. தீண்டிய காயம் ஏதும் இல்லை” என்றான் அமரகீர்த்தி.

“அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் திவ்யாங்கன்.

“இதென்ன? இப்படிப் பாம்பு எல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறதே? இதையும் கருவூலத்தில் வைத்துப் பாதுக்காக்கிறீர்களா?”

“அந்தப் பாம்புதான் கருவூலத்தைப் பாதுக்காக்கிறது. அது திருடர்களை அச்சுறுத்துவதற்காக வளர்க்கப்படும் நஞ்சு நீக்கப்பட்ட பாம்பு”

“என்னமோ.. இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்”

“நீயும்தான் அதிகம் பதற்றப்படுகிறாய். நாடாளப்போகும் இளவரசர் ஒரு பாம்பைக் கண்டு இப்படியா அஞ்சுவது?”

“அப்படியில்லை.. ”

“சரி.. என்னை யாரோ ஒரு பெண் காதலிப்பதாகக் கூறினாயே.. யாரது?”

அமரகீர்த்தி அதிர்ச்சியடைந்தான்..

“நீ சொல்லாவிட்டாலும், உன் கண்கள் காதலை சொல்லிவிட்டன. அதுவும்போக, ஒரு இராஜாங்கத்தின் இளவரசன், என் கால்களைத் தொட்டு, பரிசோதித்துப் பார்த்தாயே.. அப்போதே புரிந்துகொண்டேன். சரி, சொல். யாரந்தப் பெண்?”

அமரகீர்த்தியை வெட்கம் ஒருபுறமும், பயம் ஒருபுறமும் முற்றுகையிட்டன.

“எதற்காக அந்தப் பெண்ணைப் பற்றி இவ்வளவு சிரத்தையாய்க் கேட்கிறாய்?” என்று மங்கிய குரலில் கேட்டான்.

“முதலில் நீ அவள் யாரென்று சொல். பிறகு காரணம் சொல்கிறேன்”

“இந்நாட்டு இளவரசியைத்தான் சொன்னேன். இப்போது சொல். ஏன் இவ்வளவு பிடிவாதமாய்க் கேட்கிறாய்?”

“அவளிடம் சென்று ‘நான் ஏற்கனவே ஒரு இளவரசனைக் காதலிக்கிறேன். அதனால் நீங்கள் என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொல்லத்தான்” என்று சொல்லி, ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றான் திவ்யாங்கன்.

இவர்கள் இருவரும் இங்கு காதல் வளர்த்துக்கொண்டிருக்க, இவர்கள் தந்தைமார் இருவரும் அந்தக் காதலுக்கு வினையை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

இரண்டு கம்பீரமான, அழகிய வேலைப்பாடுடைய ஆசனங்கள் எதிரெதிரே போடப்பட்டிருக்க, அவற்றின் மத்தியில் ஒரு சிறிய வட்ட வடிவ மேசையில் மலர்க்கொத்தும் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆசனத்தில் விதுரசேனர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த மற்றொரு ஆசனத்தில் துர்காபுரியின் முதன்மை மந்திரி ஆதித்ய விக்ரமன் அமர்ந்திருந்தார். கொஞ்சம் பருத்த உடல், பகட்டான ஆடை ஆபரணங்கள், புன்னகை தவழும் அந்த முகத்தில் அறிவாற்றலும், தந்திரமும் மறைந்திருந்தன. இருவரும் ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“இளஞ்சாமை விலையேற்றம் குறித்த உங்கள் கவலை எனக்குப் புரிகிறது மந்திரியாரே.. ஆனால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் சூழலில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டின் ஒரு பாகத்தில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு தானிய உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று”

“தாங்கள் கூறுவது புரிகிறது வேந்தே.. ஆனால், ஒரேயடியாக இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்போது, அது துர்காபுரியினை வெகுவாக பாதிக்கும். சுபர்ணராஷ்டிரத்துடன் நீண்ட காலம் நட்பு நாடாக இருக்கும் எங்களுக்கு ஏற்றுமதி வரியில் விலக்கு அளித்தால் நன்றாயிருக்கும்”

“சுபர்ணராஷ்டிரம் அதன் எல்லா அண்டை நாடுகளுடனும் நல்ல நட்பையே விரும்புகிறது. நட்புறவைப் பேணி வருகிறது. இப்போது உங்களுக்கு மட்டும் வரிச்சலுகைகள் அளித்தால், மற்ற நாடுகளின் பகையை சம்பாதிக்க வேண்டி வரும். அவர்களும் வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோக, நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலில், இவ்வாறு வரிவிலக்கு அளிப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். நட்பு நாடு என்ற அடிப்படையில் மட்டும் உங்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க முடியாது அல்லவா? அதற்கு ஏதேனும் விசேஷித்த உறவு இருக்க வேண்டும்”

“விசேஷித்த உறவு என்று வேந்தர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? எனக்குப் புரியவில்லையே?”

“ஒரு திருமண பந்தம். உங்கள் இளவரசியை எங்கள் மருமகளாக ஆக்கிக்கொண்டால், இரண்டு நாடுகளின் பந்தம் இன்னும் உறுதியாகும். இரண்டு நாடுகளும் இணையும்போது எல்லாப் பிரச்சினைகளும் தீருமல்லவா?”

மகா மந்திரியாரின் முகம் ஒரு கணம் சுருங்கியது. ஒரு மிகச்சிறிய கணம். மீண்டும் அதில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “அதைப்பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லையே வேந்தே” என்றார்.

“துர்காபுரி மன்னரின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை நீங்கள்தானே ஏற்று நடத்துகிறீர்கள்? எல்லா அரச அதிகாரங்களும் உங்கள் வசம் தானே இருக்கிறது மந்திரியாரே? உங்களுக்கு இல்லாத அதிகாரமா?”

“ஆனால் ஒரு பெண் இன்னாரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் காலஞ்சென்ற வேந்தருக்குக்கூட இல்லை அரசே. இதுகுறித்து இளவரசியாரும் மகாராணியும்தான் முடிவெடுக்க வேண்டும்”

“அதுவும் சரிதான் மந்திரியாரே. அப்படியானால் நேரடியாக நானே அவர்களிடம் இதுகுறித்துப் பேசுகிறேன்”

“நல்லது வேந்தே.. தாங்கள் இதுகுறித்து மகாராணியாரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறேன். இப்போது தாங்கள் விடைகொடுத்தால், நான் கிளம்புகிறேன்”

வரும்பொழுது பால்வடிந்த மகா மந்திரி ஆதித்ய விக்ரமரின் முகம் வெளியேறும்போது நஞ்சைக் கக்கிக்கொண்டிருந்தது. அந்த நஞ்சு காவு வாங்கப் போகும் உயிர்கள் எத்தனை என்பதைக் காலம்தான் அறியும்.

(தொடரும்)

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

யுத்தம் - பாகம் 6

பத்மாபூரில் அந்தப் பிற்பகல் வேளையில், வானம் களேபரத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. அஸ்தமன இருளைப் போல கரும் மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்திருக்க, அதில், ஒளிக்கீற்றாய் மின்னல்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. இடியோசை பூமியையே அதிரச் செய்ய, மழை மட்டும் பெய்தபாடில்லை. காலையில் தெளிந்திருந்த வானம், பகலில் இருந்த வெயிலின் உக்கிரத்தால் மாலைக்குள் இப்படி ஆகியிருந்தது.

வெளியே இருக்கும் சூழலை அமரகீர்த்தியின் மனமும் பிரதிபலித்தது. காலையில் தெளிவாய், குதூகலமாய் இருந்த மனம், பின்னர் நடந்த சம்பவங்களால், மிகவும் குழம்பிப் போயிருந்தது. அவன் உள்ளத்தில் மின்னலாய்க் கேள்விகள் தோன்றி, இடியாய் அவனைக் கலங்கடித்தன. “இளவரசி திவ்யாங்கனை விரும்புகிறாளோ?” “திவ்யாங்கனும் இளவரசியை நேசிக்கிறானா?” “தந்தையார் இளவரசியை எனக்கு மணமுடிக்க எண்ணுகிறாரா?” “என் மனதிலுள்ள எண்ணத்தை தெரியப்படுத்தினால் தந்தை அதற்கு ஒப்புக்கொள்வாரா?” “ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?” இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கேள்வியின் சுழலில் சிக்கி அவனுக்கு மூச்சு முட்டியது.

“மகனே.. அமரகீர்த்தி”

அவன் திரும்பவில்லை. அவன் மனம் அங்கு இல்லையே.. விதுரசேனன் வந்து அவன் தோளைப் பற்றி உலுக்கியபின் தான் திரும்பினான்.

“மாலை மகாமந்திரியார் வருகிறார் அல்லவா.. அவரை சந்திக்க தயார்செய்துகொள்”

“இல்லை தந்தையே.. எனக்கு உடல்நிலை சௌகர்யமாய் இல்லை. அவரை நான் சந்திக்கவில்லை.. எனக்கு இலேசாக தலைவலிப்பது போல் உள்ளது.”

“சரி மகனே.. நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்”

“இல்லை அப்பா.. நான் கொஞ்சம் வெளியே சென்று உலாத்திவிட்டு வரலாம் என நினைக்கிறேன்.”

“மழை நேரம் வெளியே செல்வது நல்லதல்ல மகனே..”

“நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா”

உடன் வந்த மெய்காவல் வீரர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, அந்தப் பரந்த நகரின் வீதிகளில் தனியே செல்லலானான். மனம் இருந்த குழப்பமான நிலையில், எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், கால்போன போக்கிலே நடந்தான். எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் எதுவும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தான்.

“இளவரசே” என்று ஒரு குரல் அவனை மீண்டும் இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தது. அவன் கேட்கத் துடிக்கும் ஒரு குரல். திரும்பிப் பார்க்கும் முன்னரே, அழைத்தது திவ்யாங்கன்தான் என்று அவன் அறிவான். குரல் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தபோது, திவ்யாங்கன் ஓடாத குறையாக அவனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டான்.

“என்ன இளவரசே.. தனியாக வந்துகொண்டிருக்கிறீர்கள்”

“நான் உங்கள் பிராயத்தினந்தானே.. என்னை நீங்கள் பெயர் சொல்லியே ஒருமையிலேயே அழைக்கலாம்.. இந்த சம்பிரதாய மரியாதை எல்லாம் தேவையில்லை”

“நீங்களும் என்னை அவ்வாறே அழைப்பதானால் எனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை”

“நல்லது”

“உனக்குப் பிரச்சினையில்லை என்றால் நான் உன்னோடு துணையாக வரவா?”

“நீ எனக்குத் துணையாக வரவேண்டித் தானடா நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டு, “வந்தால் மகிழ்ச்சிதான்” என்றான்.

“எங்கள் பத்மாபூர் அழகாயிருக்கிறதா?”

“பத்மாபூரின் அழகுக்கென்ன? சொர்க்கலோகம்போல இருக்கிறது”

“ஆனால் அதன் அழகில் உன் மனம் ஈடுபடவில்லை போலிருக்கிறதே..”

“புரியவில்லை திவ்யாங்கா.. என்ன சொல்கிறாய்?”

“உன்னைப் பார்த்தால் ஏதோ தீவிரமான சிந்தனையில், கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே?”

அமரகீர்த்திக்கு அதிர்ச்சி.. “கள்ளன்.. மனதைத் திறந்து படித்துப்பார்த்தவன் போல் சொல்கிறானே” என்று நினைத்தான்.

“சொல்ல விரும்பாவிட்டால் சொல்ல வேண்டாம்” என்றான் திவ்யாங்கன்.

“எல்லாம் காதல் குழப்பம்தான் திவ்யாங்கா..”

“காதல் குழப்பமா?”

“நான் ஒருவனைக் காதலிக்கிறேன்.. ஆனால் அவன் என்னை விரும்புகிறான என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, வேறொரு பெண் வேறு அவனை விரும்புவது போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வருகிறார்களோ என்று அச்சமாயிருக்கிறது..”

“உன் மனம் கவர்ந்த அந்தக் கள்வனிடம் நேரடியாகக் கேட்டுவிட வேண்டியது தானே”

“இல்லை திவ்யாங்கா.. எனக்கு அவ்வளவு துணிவு இல்லை.. ஒருவேளை நான் கேட்டு அவன் மறுத்துவிட்டால், என்னால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாது”

“அப்படியானால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்று திவ்யாங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மழை தூற ஆரம்பித்தது.

“புதுமழையில் நனைவது உடலுக்கு நல்லதல்ல.. மழை விடும் வரை, அங்கு இருக்கலாம்” என்று ஒரு சிறிய கட்டிடத்தைக் காட்டினான் திவ்யாங்கன். இருவரும் அந்தக் கட்டிடத்தினுள் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தில் மிகவும் தீவிரமான காவல் போடப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் ஐந்தடிக்கு ஒரு வீரன் ஆயுதத்துடன் நின்றுகொண்டிருந்தான். சிறிய கட்டிடமானாலும், வலிமையான கருங்கற் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.

“இது என்ன இடம்? இங்கு ஏன் இவ்வளவு காவல் போட்டிருக்கிறது?” என்று கேட்டான் அமரகீர்த்தி.

“இது பொக்கிஷக் கருவூலம். அதனால்தான் இவ்வளவு காவல்”

“என்ன? பொக்கிஷக் கருவூலமா? இவ்வளவு சிறிய கட்டிடத்திலா?”

“பொக்கிஷம் இந்தக் கட்டிடத்தில் இல்லை.. இதன் அடியில் இருக்கும் பாதாள அறைகளில் இருக்கிறது.”

“அவ்வளவு பெரிய பாதாள அறைகளா? என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.”

“அவற்றைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டவன், அவனை அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த அறையில் நுழைந்தான்.

அந்த அறையில், நரைத்த மீசையும், தலைப்பாகையும் அணிந்த முதியவர் ஒருவர் அமர்ந்து ஏதோ குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று, “தனாதிகாரியாரே.. இவர் நம்முடைய அரச விருந்தினரான இளவரசர் அமரகீர்த்தி.. பொக்கிஷ நிலவறைகளைப் பார்க்க விரும்புகிறார். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றான்.

அவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மௌனமாக எழுந்து வேறொரு வாயில் வழியாக வெளியேறினார். திவ்யாங்கன் அமரகீர்த்தியை அழைத்துக்கொண்டு, அவர் பின்னே சென்றான். அவர் நேராக எதிரே இருந்த அறைக்குள் சென்று, இவர்கள் இருவரும் உள்ளே வரவும் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். அந்த அறையில், கதவுக்கு மேலே இருந்த சிறிய பலகணியைத் தவிர வேறு சாளரமோ துவாரங்களோ ஏதுமில்லை. அறையின் ஒரு மூலையில் ஒரு தீவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அது அந்த அறையையே கோரமாகக் காட்டியது.

தனாதிகாரி எதிரே இருந்த இரும்புக் கதவின் அருகில் சென்றார். அந்தக் கதவில், நாதாங்கியோ, சாவித் துவாரமோ இல்லை. ஒரு அழகிய கைப்பிடியுடனும் கதவு முழுவதும் அழகான பூவேலைப்பாட்டுடனும் இருந்தது. தனாதிகாரி தன் கழுத்தில் இருந்த வட்ட வடிவ பதக்கத்தைக் கழற்றினார். அந்தப் பதக்கதில் வித்தியாசமான, மிகவும் நுட்பமான ஒரு மலரின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதக்கத்தை கதவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து அழுத்த, அது திறந்துகொண்டது.

அமரகீர்த்தி அந்தக் கதவின் நுட்பமான பொறியியலில் வியந்துபோனான்.  உறைந்துபோய் நின்றிருந்த அவனை இழுத்துக்கொண்டு அந்தக் கதவைத்தாண்டி உள்ளே சென்றான். தனாதிகாரி அருகிலிருந்த ஒரு கைவிளக்கை ஒளியூட்டி, திவ்யாங்கன் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்று கதவைப் பூட்டி விட்டார்.

“இதென்ன? நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டாரே..” என்று கேட்டான் அமரகீர்த்தி.

“வருத்தப்படாதே.. என்னால் இதை உள்ளிருந்து திறக்க முடியும். வா… இப்போது பாதாள அறைக்குச் சென்று பார்க்கலாம்”

இருவரும், அங்கிருந்து கீழே சென்ற படிக்கட்டுகளில் இறங்கி பாதாள அறைக்குச் சென்றனர். அங்கு, தங்கக்கட்டிகள், நாணயங்கள், வெள்ளிக்காசுகள் என குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இளவரசனை அவை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் நாட்டுக் கருவூலத்துடன் ஒப்பிட்டால், இங்குள்ள தங்கத்தின் அளவு தூசுக்குச் சமானம்.. அவனை வியக்கச் செய்தது, தரைக்கடியில் இவ்வளவு பெரிய அறையைக் கச்சிதமாகக் கட்டிய அவர்கள் கட்டிட வல்லமையே..

அவன் ஆச்சரியத்தில் நின்றிருக்க, “கீழுள்ள அடுத்த தளத்திற்குச் செல்லலாமா?” என்று கேட்டான் திவ்யாங்கன்.

“என்ன? இதற்குக் கீழ் இன்னொரு தளமும் இருக்கிறதா?”

“இருக்கின்றனவா என்று கேட்க வேண்டும் இளவரசர் அவர்களே..” என்று கிண்டலுடன் கூறினான் திவ்யாங்கன். பின் அவனை அழைத்துக்கொண்டு அதன் கீழிருந்த இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அழகிய வேலைப்பாடுள்ள கலைப் பொருட்களும், இரத்தினங்களும் இருந்தன. அதைச் சுற்றிப் பார்த்த பின், இறுதியாக அதற்குக் கீழே இருந்த மூன்றாம் தளத்திற்குச் சென்றனர். அங்கு அவன் கண்டவை புத்தகங்கள்!

செப்பேடுகள், காகிதச் சுருள்கள், ஓலைச் சுவடிகள் எனப் பலவிதமான வடிவங்களில் அங்கு புத்தகங்கள் இருந்தன. அத்தனையும், வரிசையாக வகைவாரியாக அலமாரிகளில் அடுக்கப்பட்டு, குறியிடப்பட்டிருந்தன.

“இவைதான் நாங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்.. வரலாறு, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு வகையான புத்தகங்களின் மூலப் பிரதிகள் இங்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட புத்தகங்களை நாடெங்கிலும் இருக்கும் நூலகங்களில் வைத்துள்ளோம்.” என்றான் திவ்யாங்கன்.

துர்காபுரியினரின் இந்தக் கொள்கை, புத்தகங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தி எல்லாம் அமரகீர்த்தியை மிகவும் வியக்கச் செய்தன. சிறிய நாடாக இருந்தாலும் அவர்கள் இவ்வளவு முன்னேறியிருப்பது இதனால்தான் என்று நினைத்துக்கொண்டான்.

சிறிது நேரம் அங்கிருந்த புத்தகங்களை பார்வையிட்ட பின் இருவரும் திரும்பலாம் என்று எண்ணினர். படிக்கட்டுகளில் ஏறி, ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, அங்கு நின்றுகொண்டிருந்தது, எட்டடி நீளத்தில், பளபளப்பாக, ஒரு பாம்பு!
(தொடரும்)

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

யுத்தம் - பாகம் 5

பத்மாபூரின் சரபேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. விதுரசேனரும், அமரகீர்த்தியும் மட்டும் அர்த்தமண்டபத்தில் நின்றிருக்க, திவ்யாங்கனும், மற்ற வீரர்களும் ஆஸ்தான மண்டபத்தில் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாவரும் வழக்கம்போல ஆஸ்தான மண்டபத்தில் நின்று தரிசனம் செய்துகொண்டிருந்தனர். விதுரசேனர் உள்ளிருந்த கருவறையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அமரகீர்த்தியின் கவனமோ, வெளியே இருந்தது.
அந்நேரத்தில் இருவர் கவனத்தையும் கவரும்படிக்கு இராஜ அடையாளங்கள் தரித்த இரண்டு பெண்கள் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தனர். தேவ கன்னிகை மண்ணில் வந்தாற்போல அழகான யுவதியும், அவளின் தாயும். அவர்களின் பின்னே உள்ளே வந்த திவ்யாங்கன், “வேந்தே, துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் வந்துள்ளனர்” என்று விளக்கினான். விதுரசேனர் மரியாதை நிமித்தம் புன்னகைக்க, மகாராணியாரும், புன்னகையோ என்று சந்தேகிக்கும்படி ஒரு பாவனை செய்துவிட்டு, கருவறை நோக்கித் திரும்பிக்கொண்டார்.

விதுரசேனர் தரிசனம் செய்து முடித்துவிட்டபடியால், “மகனே.. வெளியேறலாமா?” என்றார். அதற்குத்தான் காத்திருந்தவனாய் உடனே “சரி தந்தையே..” என்று கூறிவிட்டு வெளியே வந்தான். இருவரும் பிரகாரத்தை சுற்றிவிட்டு, மகா மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு சிறிது தூரத்தில் திவ்யாங்கனும் அவன் வீரர்களும் நின்று காவல்புரிந்தனர். விதுரசேனர் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் வண்ண ஓவியங்களும் நிறைந்த அந்த மண்டபத்தின் அழகை இரசித்துக்கொண்டிருக்க, இளவரசர் இரசனை வேறு விதமாய் இருந்தது.

அந்நேரத்தில், துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் அவர்களை நோக்கி வர, இருவரும் எழுந்து நின்றனர். மகாராணி நீலாம்பாள் விதுரசேனரிடம் வந்து, “வேந்தர் எம்மை மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு தரிசிக்க இருப்பதை நாங்கள் அறியவில்லை. தினமும் சரபேஸ்வர மூர்த்தியை தரிசிப்பது எங்கள் வழக்கம். அதன்படியே இங்கு வந்தோம். சன்னிதியில் வைத்து ஒருவருக்கு மரியாதை செய்வது தெய்வநிந்தனை. ஆதலால்தான் என்னால் ஏதும் கூறவில்லை. தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

“அதனால் என்ன மகாராணியாரே.. நாங்கள் ஏதும் தவறாக நினைக்கவில்லை.” என்றார் விதுரசேனர்.

“நல்லது வேந்தே.. உங்கள் உறைவிடம் சௌகர்யமாக இருக்கிறதா?”

“சௌகர்யத்திற்கு என்ன குறைச்சல் மகாராணியாரே.. துர்காபுரியின் விருந்தோம்பல்பற்றி உலகமே அறியுமே..”

“அது எங்கள் பாக்கியம் அரசே.. நாங்கள் இப்போது விடைபெறுகிறோம்”

அந்தப் பெண்டிர் இருவரும் வாயிலை நோக்கிச் சென்றனர். செல்லும்போது இளவரசி தன் மிரட்சியான கயல் விழிகளினால் திவ்யாங்கனை ஓரப்பார்வை ஒன்று பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள். திவ்யாங்கன் அதை கவனிக்கவில்லை. ஆனால் அமரகீர்த்தி கவனித்துவிட்டான். அவன் உள்ளம் கொதித்தது. இளவரசியின் மீது வேறுப்படைந்தான்.

அவர்கள் இருவரும் கண்ணைவிட்டு மறைந்ததும், “ஏன் தந்தையே.. நாம் இங்கு தரிசிக்க வருவதுகூட தெரியாது என்று கூறுகின்றனரே.. இந்த தேசத்தின் மகாராணிக்குத் தெரியாமலா ஏற்பாடு செய்திருப்பார்கள்?” என்றான் அமரகீர்த்தி.

“அவர் பெயரளவுக்குதான் மகாராணி.. அவரிடம் எந்த அதிகாரமும் பொறுப்பும் இல்லை. மன்னர் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பு முழுதும் மகாமந்திரியாரிடம்தான் இருக்கிறது. காலஞ்சென்ற மன்னருக்கு ஆண்வாரிசு இல்லையாதலால் இளவரசிக்குத் திருமணம் ஆகும்வரை ஆட்சி, அதிகாரம் முழுதும் மகாமந்திரியார் வசம்தான்.” என்று கூறியவர், இரகசியமான குரலில், “அவர் மகாராணியை மதிப்பதில்லை என்றும், எந்த விவகாரத்திலும் மகாராணியின் கருத்தைக் கேட்கவோ ஆலோசிக்கவோ மாட்டார் என்றும் கூறுகிறார்கள்” என்றார்.

“அவ்வளவு செருக்குள்ள மனிதரா அவர்?” என்று இளவரசன் கோவத்துடன் கேட்க, அவனை அமைதியாயிருக்க சைகை காட்டிய மன்னர், சன்னமான குரலில், “தனயன் முன்பாகவே தகப்பனைப் பற்றிக் குறைவாய்ப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? அமைதியாய்ப் பேசு மகனே” என்றார்.

இளவரசன் குழப்பமாய்ப் பார்க்கவும், “ஆம் மகனே.. மகாமந்திரியாரின் புதல்வன்தான் தளபதி திவ்யாங்கன்” என்றார்.

சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு, “இளவரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மகனே?” என்று கேட்டார் விதுரசேனர்.

“அடக்கமான பெண். நல்ல குணவதியாய்த் தெரிகிறாள். புத்திசாலியாகவும் இருப்பாள் என்று தோன்றுகிறது”

“அவளை அடையப்போகும் வாலிபன் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?”

“கண்டிப்பாக தந்தையே.. “ என்று கூறியவன், சில கணங்களுக்குப் பின்தான் தன் தந்தையின் மனதிலிருந்த கணக்கைப் புரிந்துகொண்டான். “போரை இப்படியா முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?” என்று நினைத்து அதிர்ச்சியுடன் அவன் நின்றிருக்க, “சரி மகனே.. கிளம்பலாம்.. “ என்று சொல்லி அவர் முன்னே செல்லலானார்.
(தொடரும்)

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

யுத்தம் - பாகம் 4

துர்காபுரியின் மிகப் பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் அரச விருந்தினரின் பட்டாளம் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இளவரசன் அமரகீர்த்தியால் அந்த சாலையின் நேர்த்தியான வடிவமைப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இரதமும், புரவியும் விரைந்து செல்வதற்கேற்ற கற்தளம் அமைக்கப்பட்ட சாலை, இரண்டு காதத்திற்கு ஒரு பயணியர் சத்திரம், ஐந்து காதத்திற்கு ஒரு சோதனைச்சாவடி, ஆங்காங்கே காவலர்கள் என மிக பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு என்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரப் பயணிகளின் வசதிக்காக என சீரான இடைவெளியில் விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

துர்காபுரியின் தலைநகர் நோக்கிய இரண்டு நாள் பயணம் விதுரசேனனுக்கும் அமரகீர்த்திக்கும் எவ்வித சிரமமும் இன்றி இருந்தது. ஒரு சிறிய பட்டாளத்துடன் பிரயாணிப்பதால் இத்தனை தாமதம். இல்லையேல் ஒரு பகலில் கூட இந்த தூரத்தைக் கடந்திருக்கலாம். இன்னும் ஒரு நாழிகையில் பத்மாபூருக்குள் நுழைந்துவிடலாம்.

பத்மாபூர் – துர்காபுரியின் தலைநகர். தாமரை போன்ற இதழமைப்புடைய கோட்டைச்சுவரும், அடுக்கடுக்கான கோட்டையின் உட்பிரிவுகளும் கொண்டதால் இந்தப் பெயர் பெற்றது இந்த ஊர். மூன்று அடுக்குகள் கொண்ட அந்தக் கட்ட்மைப்பின் வெளி அடுக்கில் சுற்றுச்சுவரைப் பாதுகாக்கும் படைவீரர்களின் இல்லங்களும், குதிரை, யானை உள்ளிட்ட படை விலங்குகளும், அதைப் பராமரிக்கும் பணியாளர்களின் இல்லங்களும் இருந்தன. மிகப்பெரியதான நடு அடுக்கில் அரச மாளிகை உட்பட மற்ற அனைவரின் உறைவிடம், அங்காடிகள் எல்லாம் இருந்தன. இவற்றின் மையத்தில் இருந்த உள்ளடுக்கில் மிகப் பிரம்மாண்டமான சரபேஸ்வரர் கோயிலும், போர்க்கால உறைவிடம், தானியக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு, கருவூலம் ஆகியவையும் இருந்தன. ஒவ்வொரு அடுக்கும் வலிமையான சுற்றுச் சுவர் மற்றும் பலமான கதவுகளுடன் முந்தைய அடுக்கை விட உயரத்திலும் இருந்தது. ஒருவேளை ஒரு வெளி அடுக்கை தாக்கும் படைகள் கைப்பற்றிவிட்டால்கூட, உள்ளடுக்குக்குப் பின்வாங்கி, அங்கிருந்து அம்பு உள்ளிட்ட எய்தல் வகை ஆயுதங்களால் தாக்கவும், நிலைகளைக் கண்காணிக்கவும் முடியும்.

கோட்டை வாயிலை அடைந்த அமரகீர்த்தி அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தான். வீரசேனனைப் பார்த்து, “தந்தையே.. யாழிகளின் பாதுகாப்பு இல்லாவிடினும்கூட இந்தக் கோட்டையைக் கைப்பற்றுவது மிக கடினமான காரியமாயிருக்கும்போல இருக்கிறதே” என்றான். அவர் சிறிதாய் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு முன்னேறினார்.

கோட்டை வாயிலில் இவர்களை வரவேற்க ஒரு சிறிய பட்டாளம் நின்றுகொண்டு இருந்தது. முன் வரிசையில் ஒரு வீரன் தாம்பாளத்தில் பரிவட்டத் துண்டையும் மலர் மாலையையும் வைத்திருந்தான். அவன் அருகில், கழுத்தில் இரத்தின ஆரமும், இடையில் உடைவாளும் தரித்த ஒரு யுவன் நின்றுகொண்டிருந்தான். அந்த யுவன் துர்காபுரியின் தலைமைத் தளபதி, திவ்யாங்கன். கற்சிலைக்கு உயிர்வந்தாற்போல கட்டான உடல், வீரத்தை வெளிப்படுத்தும் மிடுக்குடன், புன்னகை சிந்தும் முகத்துடன் இருந்தான். ஆனால் புன்னகை சிந்தியது அவன் இதழ்கள் இல்லை. கண்களால் புன்னகைத்தான்.

விதுரசேனனும், அமரகீர்த்தியும் குதிரையில் இருந்து இறங்கி திவ்யாங்கனை நோக்கி வந்தனர். திவ்யாங்கன் அந்தப் பரிவட்டத்தை எடுத்து விதுரசேனனின் தலையில் அணிவித்தான். பின்பு அந்த மலர் மாலையை எடுத்து அமரகீர்த்தியின் கழுத்தில் சூட்டினான். அவ்வளவு நெருக்கத்தில் புன்னகைக்கும் அந்தக் கண்களின் பிரகாசம் தாங்காமல், அமரகீர்த்தி சட்டென குனிந்துகொள்ள, திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. இருந்தும் சமாளித்துக்கொண்டு, “பத்மாபூரிற்கு வருகை தந்தமைக்கு நன்றி வேந்தே.. உங்கள் வருகை இரு தேசத்திற்கும் நல்வரவாகுக.. உங்களுக்கான ஜாகை தயாராக உள்ளது. தாங்கள் தயைகூர்ந்து என்னைப் பின்தொடர்ந்து வரவும்” என்று சொல்லிவிட்டு, கோட்டையின் உள்ளே செல்லலானான்.

விதுரசேனர் மீண்டும் குதிரையில் ஏறினார். ஆனால் அமரகீர்த்தி நின்ற இடத்திலேயே உறைந்து சிலையாகி இருந்தான். விதுரசேனர் அழைக்கவும், கனவில் இருந்து விழித்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் குதிரையில் ஏறினான். அவன் என்ன கனாக் கண்டானோ?

விருந்தினர் அவர்களின் மாளிகைக்குச் சென்றடைந்ததும், திவ்யாங்கன், “வேந்தே.. உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே பொழுது சாய்ந்துவிட்டதால், தாங்கள் இளைப்பறுங்கள். நீங்கள் விரும்பினால், நாளை காலை மகாமந்திரியாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

“மிக்க மகிழ்ச்சி தளபதியாரே.. ஆனால் நான் நாளை சரபேஸ்வரர் பூசையைக் காண விழைகிறேன். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? மந்திரியாருக்கு சம்மதமானால், அவரை நாளை மாலை சந்திப்பதாகக் கூறவும்” என்றார் வீரசேனன்.

“அப்படியே ஆகட்டும் வேந்தே.. தங்கள் விருப்பப்படியே ஏற்பாடு செய்கிறேன். அதோடு, மன்னர் என்னை திவ்யாங்கன் என்று பெயரிட்டே அழைக்கலாம்”

“இல்லை தளபதியாரே.. தங்கள் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறதல்லவா..”

“எப்படியோ.. தங்கள் சித்தம் வேந்தே.. இப்போது தாங்கள் அனுமதித்தால் நான் வெளியேறுகிறேன்”

“நல்லது தளபதியாரே.. சென்று வாருங்கள்”

செல்லும் முன் அமரசேனனைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன் இளவரசே..” என்று சொல்லி புன்னகைத்தான். பின்பு வாயிலை நோக்கிச் சென்றான்.

இளவரசனின் மனம் ஏனோ “திவ்யாங்கா.. போகாதே..” என்று அலறியது. ஆனால் அவன் வாயிலிருந்து ஒலி ஏதும் எழ மாட்டேன் என்றது.. வாயிலை அடைந்த திவ்யாங்கன், இளவரசனின் மனவொலியைக் கேட்டவன் போல, பின்னால் திரும்பி அவனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, பதிலாக அமரகீர்த்தியின் தூக்கத்தை அள்ளிக்கொண்டு சென்றான்.
(தொடரும்)

புதன், ஆகஸ்ட் 14, 2013

யுத்தம் - பாகம் 3

சூரியன் ஸ்ரீதுவாரிடம் பிரிவுபச்சாரம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், விதுரசேனனும், அமரகீர்த்தியும் ஒரு சிறிய பரிவாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அரச அடையாளங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய மெய்க்காவல் வீரர்கள் மட்டும் பின்தொடர, அந்த செல்வநகரின் ஆடம்பரமான வீதிகளின் அழகையும் பிரம்மாண்டத்தையும் இரசித்தவாறே சென்றனர்.

அவர்கள் சென்ற வீதி, அதைவிட அகலமான ஒரு இராஜவீதியில் சென்று முடிந்தது. அந்தத் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி நிமிர்ந்து பார்த்த அமரகீர்த்தி, தான் கண்ட காட்சியால் ஒரு நிமிடம் உறைந்து நின்றுவிட்டான்.

அவன் முன்னே, ஒரு நூறடி தூரத்தில், அவன் இதுநாள் வரை கதைகளில் மட்டுமே கேட்டறிந்த யாழிக் கோயில் இருந்தது. செவிவழிக் கதைகளாக இதுவரை இக்கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறான். அவற்றை எல்லாம் கட்டுக்கதை என்று நம்பிவந்தான். ஆனால், கதைகளில் கேட்டதைவிட இந்தக் கோயில் பன்மடங்கு அழகாக இருந்தது.

அதை நேரில் பார்க்க இயலாத வாசகர்களுக்காக, அதைப்பற்றி நான் கூறுகிறேன். அது ஒரு வட்ட வடிவமான கோயில். வட்டத்தின் விளிம்பில், சீரான இடைவெளியில், பன்னிரண்டு தூண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பன்னிரண்டு அடி உயரமுள்ள தங்கத் தூண்கள். அந்தத் தூண்கள் முழுவதும், மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளாலும், விலையுயர்ந்த இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கலையம்சம் பொருந்திய மொட்டைத் தூண்கள். ஆம். அந்தக் கோயிலுக்குக் கூரை இல்லை.

அந்த வட்டவடிவ தரை முழுதும் பொன்னாலும் மணிகளாலும் வேயப்பட்டிருந்தது. ஒரு அரைவட்டப் பகுதி சமதளமாய், வழிபடுப்வர்கள் நிற்பதற்கேற்ப அமைந்திருந்தது. மற்றோரு பகுதி, பன்னிரு படிகள் கொண்ட உயர்த்தப்பட்ட மேடையாக இருந்தது. சிறிதும் பெரிதுமான நூற்றுக்கணக்கான சுடர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மண்ணில் இறங்கி வந்த தேவலோகம் போல காட்சியளித்தது.

“அப்பா.. நான் காண்பது உண்மைதானா? இது யாழிக்கோயிலா? அப்படியானால்..” என்று அமரகீர்த்தி கேட்டுக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த விதுரசேனன், “அடடா.. பூஜை நேரமாகிவிட்டது போல இருக்கிறதே.. வேகமாக நட.. போகலாம்” என்று சொல்லிக்கொண்டே ஓடாத குறையாக நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர வேண்டி இளவரசனும் விரைந்து செல்ல வேண்டியிருந்தது.

இருவரும் அந்தத் தங்கத் தூண்களைத் தாண்டி கோவிலின் உள்ளே நுழைந்தனர். கோயிலினுள் மிகக் குறைந்த கூட்டமே இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, இது ஆயிரம் வருடங்களாக நடைபெறும் வழக்கமான ஒரு சடங்கு. ஆனால் இளவரசன் இவற்றை எல்லாம் அதிசயமாகப் பார்த்தான். அவன் இதுவரை கட்டுக்கதை என்று நம்பிவந்தது இப்போது அவன் கண்முன்னே நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

சூரியன் மெல்ல தொடுவானத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. பீடத்தில் நின்றிருந்த தலைமை அறங்காவலர், மேற்கு திசையை நோக்கி, எதையோ எதிர்நோக்கிக் காத்திருப்பவர் போல இருந்தது. எனவே இளவரசனும் அந்த திசையை நோக்கலானான். அங்கே, ஒரு வளர்ந்த யானையை விடப் பெரிய உடலையும், அதற்கேற்ற சிறகுகளும் உடையதாய், வானை ஆக்கிரமித்தபடி பறந்துவந்தது அந்தப் பறவை. அந்தக் கோயிலை நோக்கிவந்து, அந்த பீடத்தில் நின்றது. பதினாறு அடி மதிக்கத்தக்க உயரமும், சிங்கம் போன்ற உடலமைப்பும், முதுகில் மிகப்பெரிய சிறகுகளும் கொண்ட, ஒரு யாழி!

அதை வரவேற்பவரைப்போல, அந்தத் தலைமை அறங்காவலர் சிரம் தாழ்த்த, அந்த யாழியும் பதிலுக்கும் சிரம் தாழ்த்தியது. பிறகு, தலைமை அறங்காவலர், கட்டியம் கூறுபவர் போல பெரிய குரலெடுத்து, “துர்காபுரி தேசத்தின் அறத்தையும் தர்மத்தையும் கண்காணிக்கும் நான், இந்நாட்டு மக்கள் யாவரும் அமைதியும் வளமும் பெற்று வாழ எல்லா பிரயத்தனமும் செய்யப்படுவதாயும், இவ்விடம் வாழ இயலாதாகி எல்லைவிட்டு வெளியேறிய ஜீவன் ஏதுமில்லை என்றும் உறுதியளிக்கிறேன். மகா சரபேஸ்வரமூர்த்தியின் ஆணைப்படி, இத்தேச எல்லையை அத்துமீறிக் கடந்தவன் எவனோ, அவன் உடலை உடனே ஒப்படைக்கவேண்டி, யாழிகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் உங்களிடம் கோருகிறேன்.” என்று, காலம் காலமாக உச்சரிக்கப்படும் அந்த வாக்கியங்களைக் கூறினார்.

சில கணங்கள் அமைதிக்குப்பின், ஒரு அழகிய மலர்மாலையை அந்த யாழிக்கு சூட்டி, “மகா சரபேஸ்வர மூர்த்தியின் திருவருளால், துர்காபுரியின் அமைதி மீண்டும் காக்கப்பட்டது. நன்றி” என்று கூறவும், அந்த யாழி ஒரு பெருந்தாவலில் வானை மீண்டும் ஆக்கிரமித்து, அந்தக் கோயிலை ஒருமுறை வட்டமிட்டு, பின் தான் வந்த திசையிலேயே சென்றது.

அமரகீர்த்தி அந்த யாழி சென்ற திசையை மெய்மறந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் அப்போதுதான் எதிர்பாராமல் அறையப்பட்டவன் போல அதிர்ச்சியுடன் இருந்தது. “என்ன மகனே.. உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்ற விதுரசேனனின் குரல்தான் அவனை இந்த உலகத்துக்கு இழுத்துவந்தது. “இல்லை அப்பா.. இந்த.. ” என்று எதோ சொல்லவந்த அமரகீர்த்தியை, கையமர்த்தி, “எதுவாகினும், நம் உறைவிடம் சென்று பேசலாம்.. இப்போது அமைதியாக இரு” என்று கூறினார். இருவரும் அவர்கள் தங்கியிருந்த அரசினர் மாளிகைக்கு சென்றனர்.

ஓய்வறையில் நுழைந்தும் “தந்தையே.. நான் கண்டது உண்மைதானா? உண்மையிலேயே ஒரு யாழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஒரு யாழி இல்லை.. துர்காபுரியின் மேற்கே உள்ள வனத்தில் நூற்றுக்கணக்கான யாழிகள் இருப்பதாகக் கூறுவர்” என்றார் விதுரசேனன்.

“நாம் அந்தக் காட்டைக் கடந்து தானே வந்தோம்? அங்கு இவ்வளவி பெரிய பட்சிகள் இருப்பதற்கான அறிகுறியேதும் காணப்படவில்லையே?”

“இவை தெய்வீக சக்தி கொண்ட உயிரினங்கள்.. துர்காபுரி மக்களே இந்த பூஜை தவிர்த்து மற்ற சமயங்களில் இவற்றைப் பார்த்த்தில்லை. இவை அஷ்டமா சித்திகளும் அமையப்பெற்றவை. அவற்றால் கண்ணில் படாமல் மறையவோ, உருமாறவோ முடியும். மின்னல் வேகத்தில் பறக்க முடியும். கண்ணால் பார்த்தே மனிதர்களைக் கொல்ல முடியும்.. அவற்றின் ஆற்றல் அளப்பரியது”

“இவை ஏன் துர்காபுரியைக் காவல் காக்கின்றன? நிஜமாகவே சரபேஸ்வரர் அளித்த வரத்தால்தானா?”

“அப்படித்தான் தெரிகிறது. தெளிவான காரணத்தைக் கூற துர்காபுரி மக்களால் கூட முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் முந்தைய நிகழ்வல்லவா?”

“அப்படி என்னதான் வரம் கொடுத்தாராம்?”

“இன்னாட்டுப் பிரஜை ஒருவன் வாழ வழியின்றி வெளியாறதபடி இவர்கள் பார்த்துக்கொள்ளும்வரை, அந்நியன் எவனும் அத்துமீறி நுழையாமல் யாழிகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவே. இப்போது சொல் மகனே, நம்மிடம் இருக்கும் இருபத்தி நான்கு இலட்சம் வீரர்களும் இந்த யாழிகளுக்கு ஈடாகுமா?”

“ஆனால் இவ்வளவு பிரயத்தனம் செய்து இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் என்ன தந்தையே?”

“இந்நாட்டின் அமைவிடம் மிக சிறப்பானது. மிகப் பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடம், கடல்வாணிக வழித்தடத்தில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் இன்னாட்டு மக்கள் நாட்டின் எல்லையைத் தாண்டுவது பாவம் என்று கருதுவதால், துறைமுகம், கப்பல் போக்குவரத்து என எதற்கும் அனுமதிக்கவில்லை. இந்த நாடு மட்டும் நம்வசம் வந்தால், நம் நாட்டின் வளமும் பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்”

“என்னவோ அப்பா.. எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது”

“ஒரு குழப்பமும் வேண்டாம் மகனே.. நீ சென்று உணவருந்திவிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளை மீண்டும் பிரயாணத்தைத் துவங்க வேண்டுமல்லவா?”

மறுநாள் துர்காபுரியின் தலைநகருக்கு பயணப்பட வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய, இளவரசன் வெளியேறினான். அந்தப் பயணம் துவங்கும்வரை நாமும் சிறிது காத்திருப்போம்.
(தொடரும்)

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

துன்பச்சுற்றுலா - பாகம் 1

1

மஞ்சள் வெயில் வீசும் மாலை வேளையில், பசுமையான மரங்களால் சூழப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டிடம் “கிளிநொச்சி விண்கல நிலையம்” என்ற நியான் பெயர்ப்பலகையைத் தாங்கி நின்றது. காத்திருப்போர் அறையின் பாலிமர் நாற்காலியில் கண்கள் நிறைய தேடலுடன் உள்ளே வரும் அனைவரையும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் இந்த யுவனின் பெயர் “விஜய்”. அந்த அறை முழுவதும் பயணிகளால் நிரம்பியிருக்கிறது. அவன் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போன்ற வஸ்துவை ஓரக் கண்ணால் பார்த்தான். ஏவலுக்குக் காத்திருக்கும் காவலாளி போல உடனே அது ஒரு பீப் ஒலியை வெளியிட்டு பின் “நேரம் மாலை 5 மணி 42 நிமிடம். தேதி ஜூன் 13, 1992” என இயந்திரக் குரலில் கூறியது. வெறுப்புடன் வாசலை நோக்கியவன் முகம், உள்ளே நுழைந்த ஒரு இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் சட்டென பிரகாசமாகியது. ஆனால், மலர்ச்சியை மறைத்துக்கொண்டு பொய்யான கோவத்தை ஒட்டிக்கொண்டான். அந்த இளைஞன் நேராக இவனை நோக்கி வர, விஜய் அவனிடம் “எப்பயாவது சொன்ன நேரத்துக்கு வரியா? சோம்பேறி!” என்று கூறி செல்லமாக தலையில் ஒரு குட்டு வைத்தான். வந்தவனும் “சாரி டா.. அதான் ஷட்டில் (Shuttle : விண்கலம்) புறப்படும் முன்னே வந்துட்டேன் இல்ல” என்று சிணுங்கினான். இந்த புதுமுகத்தை இப்போது அறிமுகம் செய்யலாம்.. இவன் பெயர் விக்னேஷ். செல்லமாக விக்கி. கொஞ்சம் பழைய பெயராகத் தோன்றினால் மன்னியுங்கள்.. விஜயும் விக்கியும் “மிதக்கும் சொர்க்கம்” எனும் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு சுற்றுலா செல்ல வந்திருக்கின்றனர். இரண்டு ‘அழகான’ இளைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் ஏதேனும் காதல் கிசுகிசுவைப் பரப்பி விட வேண்டாம். அவர்கள் நண்பர்களாகத்தான் வந்திருக்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்.. ஏதோ அறிவிப்பு வருகிறது. என்னவெறு கேட்போம்..

“ஒன்றுபட்ட தமிழ்த்தேசத்தின் கிளிநொச்சி விண்கல ஏவுதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. மிதக்கும் சொர்க்கம் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு செல்லும் பயணிகள் நுழைவாயில் 12 வழியாக பாதுகாப்பு சோதனைக்குச் செல்லவும். நன்றி”.

இதோ, நம் நாயகர்கள் நுழைவாயிலை நோக்கிச் செல்கிறார்கள். நாமும் அவர்களைத் தொடர்ந்து செல்வோம். வாருங்கள்…

2

காற்றைக் கிழித்து சீறிச் சென்ற விண்கலத்தை விட அதிக வேகமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது விஜயின் மனம். விண்வெளிப் பயணத்திற்காய் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்டு இருக்கும் அவன், தன் மனதையும் ஒரு கூண்டுக்குள் அடைத்து வெளிப்படுத்தாமல் வைத்து இருந்தான். பொங்கும் நீரூற்றாய் காதல் பெருகும்போது சிறைப்படுத்தும் கூண்டுகள் கொள்ளுமா? இந்தச் சுற்றுலா முடியும் முன்னர் தன் மனதை விக்கியிடம் வெளிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தான்.

அவன் மனம் திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில், “உங்கள் பிரயாணம் இனிதே முடிந்தது. “மிதக்கும் சொர்க்கம்” உங்களை வரவேற்கிறது. நல்வரவு” என ஒலித்தது. விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையவும், பாதுகாப்புக்கான கண்ணாடிக் கூண்டுகள் திறந்தன. நம் நாயகன் மனதைச் சிறைப்படுத்திய கண்ணாடிக் கூண்டும் விலகும் என நம்புவோம். அதுவரை மௌனமாக அவர்களைப் பின்தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை இதோ, அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைகின்றனர். நாமும் செல்வோம்..

விஜயும், விக்கியும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர். பிரம்மாண்டமான, அழகாக வடிவமைக்கப்பட்ட அறை. இருவரும் உடுப்புகளை மாற்றிக்கொண்டு படுக்கைக்குச் சென்றனர். பிரயாணம் அவர்களை மிகவும் களைப்படையச் செய்திருக்கவேண்டும். விஜய் படுத்தவுடன் உறங்கிப்போனான். ஆனால் விக்னேஷ் தூங்கவில்லை. அவன் மனதிலும் ஒரு புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் விஜயின் முகத்தை உற்றுப்பார்த்தவன், அவன் தூங்கிவிட்டான் என உறுதிசெய்துகொண்டான். விஜயின் கலைந்த சிகையைக் கோதிவிட்டு, “நீ என்னைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும் டா.. நீயா சொல்லனும் என்று இத்தனை நாள் எதிர்பார்த்தேன். என்னை ஏன் இப்படி காக்க வைக்கிற? இந்த டூர் முடிஞ்சு நாம திரும்பப் போறதுக்குள்ள நீ சொல்லலனா நான் உன்னைவிட்டு ஒரேடியா விலகிடுவேன்” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டான். சிறிது நேரத்தில் அவனும் தூங்கிவிட்டான்.

அவர்கள் இருவர் மனதிலும் வீசிய புயலைவிட பெரிய புயல் ஒன்று வெளியில் வீசப்போவது தெரியாமல், இருவரும் நாளைய நாளின் கொண்டாடங்களைத் தூக்கத்திலும் கனவாய்க் கண்டனர். மன்னித்துவிடுங்கள் நாயகர்களே.. உங்கள் கொண்டாட்டங்கள் கனவாகவே முடியப் போகின்றன..

3

“விக்கி! எழுந்திரு.. நேரம் ஆச்சு” என்று உசுப்பினான் விஜய். “அதுக்குள்ள விடுஞ்சுடுச்சா டா?” என்று சிணுங்கினான் விக்னேஷ். “டேய் இது உன் வீட்டு பெட்ரூம் இல்லை டா.. இங்க பகலும் கிடையாது, இரவும் கிடையாது. இப்படி தூங்கவா 36000 கிலோமீட்டர் பிரயாணம் பண்ணி வந்த? எந்திரிச்சு கிளம்பு” என்று கிண்டல் செய்துகொண்டே குளியலறைக்குள் சென்றான்.

இருவரும் களைப்பு நீங்கி தங்களை சுத்தம் செய்துகொண்டு உணவு விடுதிக்கு வந்தனர். அவர்களை நோக்கி வந்த இயந்திர மேசைப்பணியாள் ( Robowaitress) உணவு வகைகளைப் பட்டியலிட்டது.  அவர்கள் உணவைத் தேர்வு செய்து கூறவும் சமையல் கூடத்திற்குச் சென்று எடுத்துவந்தது. இருவரும் நிதானமாக உணவை உண்டு முடித்தனர். இறுதியாக குளிர்பானம் கொண்டுவரக் கட்டளையிட்டனர்.  ஆளுக்கொரு புட்டி தான்.. ஒரே புட்டியில் இரண்டு குழல் போட்டு குடிக்கும் பழக்கம் 22 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து போயிருந்தது.

அந்த இயந்திரப் பணியாள் குளிர்பான புட்டிகளை ஒரு தட்டில் வைத்து ஏந்தி அவர்களை நோக்கி வந்தது. அப்போது திடீரென அங்கிருந்த எல்லா விளக்குகளும் அணைந்தன. மின்சாதனங்கள் இயங்காமல் நின்றன. குளிர்பானத்தைக் கொண்டுவந்த இயந்திரன் அவர்கள் மேசையில் மோதி தட்டைத் தவறவிட்டது. சுமார் ஒரு நிமிட குழப்பத்திற்குப் பிறகு மீண்டும் மின்சக்தி சீரடைந்தது. அனைத்தும் எப்போதும் போல் இயங்க ஆரம்பித்தன.

“இங்க ஏதோ தப்பா இருக்கு” என்றான் விஜய்.

“ஏன் அப்படி நினைக்கற? எலக்ட்ரிக் சிஸ்டம்ல ஏதும் ஃபால்ட் வந்திருக்கும். அதான் பவர் போய்ட்டு வந்திருக்கு. இது சாதாரண விஷயம் தான?” என்று கேட்டான் விக்னேஷ்.

“பவர் ஃபால்ட்னா இந்த ரோபோ ஏன் தவறா இயங்கனும்? அது பேட்டரியில் தான் இயங்குது. அதுக்கு கண்களும் கிடையாது. ப்ராக்சிமிட்டி சென்சார் (Proximity sensor: அருகாமை உணர்வி) மட்டும்தான் உண்டு. அது ஏன் வந்து மோதனும்?” என்று கூறினான் விஜய்

“நீ என்ன டா சொல்ல வர்ர? எனக்கு ஒன்னும் புரியல” – இது விக்னேஷ்.

“நீ என்ன நினைக்கற மித்ரா?” என்று தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம் போன்ற வஸ்துவிடம் கேட்டான் விஜய். அது சிறிது மௌனத்திற்குப் பிறகு, தன் ஹோலோகிராம் திரையில் ஒரு ஆச்சரியக்குறியையும், பின் ஒரு கேள்விக்குறியையும், சில பீப் ஒலிகளையும் ஏற்படுத்தியது. இந்த மித்ரா ஒரு மின்னணுக் காரியதரிசி. விஜயின் சொந்தத் தயாரிப்பு.

விக்னேஷ் பொறுமை இழ்ந்தவனாய் “இங்க என்ன நடக்குது? தெளிவா சொல்லு டா? என்றான். அதற்கு விஜய் கூறிய பதில்:

“இந்த ஒட்டுமொத்த விண்வெளி நிலையமும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial intelligence-AI) மூலமா தான் இயங்குது. அதை இயக்குற கம்ப்யூட்டர் கோர் இந்த விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில இருக்கு. அதை நெருங்குறது கூட அவ்வளவு சுலபம் இல்ல. அதைச் சுற்றி நிறைய பாதுகாப்பு சாதனங்களும், அத்துமீறி நுழைபவர்களை பிடிக்கும் பொறிகளும் இருக்கு. அதன் மையப் பகுதியில கணிணியில் கோளாறு ஏற்பட்டா சரிசெய்யவும், அவசர உபயோகத்துக்கும் மேனுவல் ஓவர்ரைட் பேனல் (Manual Override Panel) இருக்கு”

“இப்ப என்ன சொல்ல வர்ர? புரியும்படி சொல்லு டா”

“ஏ.ஐ (AI) ஒழுங்கா இயங்கிட்டு இருக்கும்போது அந்த அறைக்குள்ள யாரும் நுழைய முடியாது. அதனால அதை யாரோ ஹேக் (Hack) பண்ணி நிறுத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அந்த கட்டுப்பாட்டு அறைக்குள்ள நுழைஞ்சு மீண்டும் மேனுவலா ஆன் பண்ணி இருக்காங்க.”


“உனக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரியும்?”

“நான் ஒரு ஏ.ஐ. டிசைன் என்ஜினியர் டா.. இத தெரிஞ்சுக்க வேண்டியது என் தொழில்”

“நீ ஓவரா கற்பனை பண்ற. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. நிஜமாவே சிஸ்டம்ல எதும் ஃபால்ட் இருக்கும். அதான் இப்படி நடந்து இருக்கு”

“கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுடும்”

இருவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர். அப்போது திடீர் என எச்சரிக்கை சங்கு (siren) ஒலித்தது. சிவப்பு நிற ஒளிவிளக்குகள் நடைபாதையைக் கலவரமாக்கின. ஒலிப்பெருக்கியில் இருந்து “அபாயம்! பயணிகள் அனைவரும் உடனே மாநாட்டு அறைக்கு (Conference hall) செல்லவும்” என்ற அறிவிப்பு தொடர்ச்சியாக ஒலித்தது.

“பார்த்தயா டா.. நிஜமாவே ஏதோ பிரச்சனை. வா, உடனே கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போகனும்” என்றான் விக்னேஷ்.

“ஆபத்துனா எமர்ஜென்ஸி ரூமுக்கோ ஷட்டிலுக்கோ போவாங்களா? இல்ல கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போவாங்களா?” என்று கேட்டான் விஜய்.

இந்தக் கேள்வி விக்னேஷை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. “அப்ப இதுக்கு என்னடா அர்த்தம்? எதுக்குக்காக இப்படி பண்ணனும்?” என்று கேட்டான்.

“நாம இப்ப பணையக் கைதிகள் டா.. உன்னோட கேப்டிவ்ஸ (captives: பணையக் கைதி) சொகுசா ஏ.சி. ரூம்ல படுத்து தூங்க விடுவயா? இல்ல உன் கண்காணிப்புல வெச்சு இருப்பயா?” என்று கேட்டான் விஜய்.

விக்னேஷுக்கு நிலைமை புரிந்தது. “இப்ப என்னடா பண்ணலாம்? ரூமுக்கு போய் ஒளிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

“ரூமுக்குப் போனா ஒளிஞ்சுக்க முடியாது. எல்லா ரூம்லயும் ரகசிய கேமிரா இருக்கு. நம்மை சுலபமா கண்டுபிடிச்சுடுவாங்க.”

“அப்ப என்ன தான் செய்யலாம்?”

“இங்க கேமிரா இல்லாத இடம் பாத்ரூம் மட்டும்தான். ஆனா அங்கயும் மைக் இருக்கும். நாம இப்ப பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கப் போறோம். ஆனா எந்தவித சப்தமும் செய்துட கூடாது. ஜாக்கிரதையா வா” என்றான் விக்னேஷ்.

இருவரும் மிக கவனமாக அடிவைத்து அந்த மறைவிடத்துக்குள் நுழைந்தனர்.

4

    “தேசிய விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம்” என்ற பெயர்ப்பலகையைத் தாங்கி மகேந்திரகிரி  மலையின் அடிவாரத்தில் அந்த மலைகளின் கம்பீரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு நின்ற அக்கட்டிடத்தினுள் எப்போதும் போல் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மையப்பகுதியில் இருந்தபெரிய ஆறையில் “பா. அநிருத்தன், தலைமை ஆணையர்” என்று பொறிக்கப்பட்ட கண்ணாடி மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த மத்திம வயதுடைய அந்த நபர், அடுத்த நிமிடம் தாக்கக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் அமைதியாய் கோப்புகளை வாசித்துத் திருத்தங்கள் செய்துகொண்டிருந்தார். அப்போது சிறிய பீப் ஒலியுடன் அவர் எதிரே இருந்த கணிணித்திரை “புதிய மின்னஞ்சல் வந்திருக்கிறது” என்று பெட்டிச்செய்தி காட்டியது. அந்த அதிர்ச்சியான செய்தியை அவர் எந்த சலனமும் இல்லாமல் வாசித்து முடித்தார். தன் மேஜையில் “தலைமைப் பாதுகாப்பு அதிகாரி” என்று எழுதியிருந்த கட்டத்தில் விரலால் ஒற்றி “மிஸ்டர் அருள்மொழி, உடனே என் அறைக்கு வாங்க” என்று அழைத்தார். “இதோ வருகிறேன் சார்” என்று ஒலிப்பெருக்கியில் மறுமொழி வந்தது.

இரண்டு நிமிடம் கரைந்த பின் அருள்மொழி வந்தார். அநிருத்தன் மௌனமாக கணிணித்திரையைத் திருப்பி அந்த மின்னஞ்சலைக் காட்டினார். மின்னஞ்சலை வாசிக்க வாசிக்க அருள்மொழியின் முகத்தில் அதிர்ச்சி குடிகொண்டது. அந்த ஏ.சி. அறையிலும் பலமாக வியர்த்துக்கொட்டியது.

“பதற்றப்படாதீங்க அருள்மொழி, நிதானம் இழக்கறது தான் தோல்வியோட ஆரம்பம்” என்றார் அநிருத்தன். “இப்ப என்ன சார் பண்ணலாம்?” என அருள்மொழி கேட்கும்போது, கணிணித்திரையில் “அவசர செய்தி” என்று தொடர்ச்சியான பீப் ஒலியுடன் பெட்டிச்செய்தி வந்தது. கணிணித்திரையை தன் பக்கம் திருப்பி அஞ்சலைத்  வாசித்த அநிருத்தன், கேலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். “லேட் நியூஸ் அருள்மொழி” என்றார்.

“புரியல சார்” என்றார் அருள்மொழி

“இன்னைக்குக் காலையில விண்வெளிக் கடுஞ்சிறைக்கு ஆட்களையும் பொருட்களையும் கொண்டுபோற ஷட்டில் ஆப்பரேட்டர் ஒருத்தர் அவர் வீட்டுல பிணமா கண்டுபிடக்கப்பட்டிருக்கார்.  ஆனால் ரெக்கார்ட் படி அவர் நேற்று மாலை கிளம்புன ஷட்டில விண்வெளிச் சிறைக்கு ஓட்டிட்டு போனதா இருக்கு.”


“அவரக் கொன்னுட்டு ஆள்மாறாட்டம் பண்ணி ஷட்டில கடத்தி இருக்காங்க”

“ஆமாம் அருள்மொழி. அதுமட்டும் இல்ல. அந்த ஷட்டில் இன்னைக்கு அதிகாலை விண்வெளிச் சிறையில் இருந்து கிளம்பி இருக்கு. அது கிளம்பின் பின் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் மூன்று பேர் காணாம போனத கண்டுபிடிச்சு இருக்காங்க. அதோட, அந்த ஷட்டில் நேராக பூமிக்கு வராம ஒரு விண்வெளி கேளிக்கைப் பூங்காவில டாக் (dock) ஆகியிருக்கு”

“அவ்வளவு பாதுகாபான சிறையில இருந்து எப்படி சார் அவங்க தப்பிச்சாங்க?”

“அவங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட உணவில் ஏதோ மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கு. அதை சாப்பிட்ட காவலாளிகள், கைதிகள் எல்லாரும் மயங்கிட்டாங்க. தப்பிச்சுப் போன தீவிரவாதிகள் உட்பட. ஷட்டிலைக் கடத்தின அந்த ஆசாமி சிறைக் கண்காணிப்பாளரோட அக்செஸ் கார்டை எடுத்து கைதிகள் அறைக்குள் நுழைஞ்சு இருக்கான். அந்த மூன்று தீவிரவாதிகளுக்கும் மயக்கம் தெளிய மருந்து கொடுத்து கூட்டிட்டுபோனது சிறைக் கேமிராவில பதிவாகி இருக்கு”

“யாரு சார் அந்த தீவிரவாதிங்க?”

“அவங்க பேர் உதய், மனோ, சிபி. அவங்க மூன்று பேரும் டோவப் (TOWaB : Take Our Waters Back) தீவிரவாத இயக்கத்த சேர்ந்தவங்க. உதயும் மனோவும் நம்ம இராணுவ ஆராய்ச்சிக் கூடத்த உளவு பார்த்ததுக்காக கைது செய்யப்பட்டாங்க. சிபி நம்ம ரோபோட் இராணுவத்தோட கன்ட்ரோல்ஸ ரிமோட் ஹேக் (Remote Hacking – இணையம் மூலம் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துதல்) செய்ய முயற்சி பண்ணினவன். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவனை நம்ம கமேண்டோ வீரர்களும் விமானப் படையும் சேர்ந்து அதிரடித் தாக்குதல் நடத்தி கைது பண்ணிக் கொண்டுவந்தாங்க. இதனால இரண்டு நாட்டுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலையே வந்தது. அவன் செய்த சைபர் அட்டாக் (cyber-attack) சர்வதேச நீதிமன்றத்துல நிரூபனமானதால அவங்க அமைதியாகிட்டாங்க. ரொம்ப ஆபத்தானவன்”

“இப்ப என்ன பண்ணனும் சார்?”

“முதல்ல இந்த விஷயத்த பி.எம். கிட்ட சொல்லனும்”

“பி.எம். சென்னைல இல்ல சார். வெளிநாட்டு பயணத்துல இருக்காரு”

“தெரியும். அவரோட பெர்சனல் மெயிலுக்கு தகவல ஃபார்வேர்ட் பண்ணனும். அவர் அங்கிருந்தே பார்த்துக்குவார்”

தகவலை அனுப்பிய சில நிமிடங்களில் பி.எம்.மிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. குரலில் கொஞ்சம் கூட அச்சமோ பதற்றமோ இல்லாமல்  பேசி முடித்தார் அநிருத்தன்.

“பி.எம். என்ன சார் சொன்னார்? அவங்க டிமாண்ட்ஸ ஒத்துக்கற மாதிரி எதும் சொல்லிடலயே?” என்று கேட்டார் அருள்மொழி

“அது எப்படி ஒத்துக்க முடியும் அருள்மோழி? அவங்க பணமோ டைட்டானியமோ கேட்கல. அவங்க கேட்டது நம்ம ரோபோ இராணுவத்தோட பாசிட்ரான் மூளையின் (Positron brain: இயந்திர மனிதர்களை இயக்கும் செயற்கை மூளை ) டெக்னாலஜிய. அதக் கொடுத்தா நம்ம ஒட்டுமொத்த இராணுவத்தையே அவங்க கையில குடுக்கற மாதிரி. அத கண்டிப்பா தர முடியாது.”

“அப்ப நீங்க என்ன செய்யலாம் என்று முடிவு பண்ணியிருக்கீங்க சார்?”

“நான் முடிவு பண்ணல. பி.எம். முடிவு பண்ணிட்டார்”

5

கதையை மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு, இந்த டோவப் (TOWaB) அமைப்பின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.. அந்த வரலாற்றை அறிய நாம் 70 வருடங்கள் பின்னோக்கிப் போக வேண்டும். 70 வருடங்களுக்கு முன்பு, தமிழ்த் தேசம் என்ற ஒன்று இருக்கவில்லை. தமிழ்மண் இரண்டாகப் பிரிவுபட்டு இரண்டு நாடுகளின் அங்கமாக இருந்தது. இரண்டு நாடுகளும் தமிழ்பேசும் மக்களை வஞ்சித்தன. மறைமுகமாகவும் நேரடியாகவும் அவர்களை அழிக்க நினைத்தன. இதை உணர்ந்துகொண்ட தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நாடுகள் அந்தப் போராட்டங்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.

இதற்கிடையில், அப்போதைய தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அங்கு புதிதாகப் பொறுப்பேற்ற மாகாண அரசு, தங்களை முழுமையான சுதந்திர நாடாக அறிவித்தது. தமிழகத்தின் வரி வருவாய் முழுவதையும் அந்தப் புதிய அரசே கைப்பற்றிக்கொள்ள, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு சந்தித்தது. அதனால் முழு இராணுவ பலம் கொண்டு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. எனவே மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது. தமிழகம் தனி நாடாக மாற மக்கள் முடிவெடுத்தனர்.


ஆனால் அப்போதும் தமிழகத்தை வஞ்சிக்க அந்த அரசு நினைத்தது. தமிழகத்தின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப இராணுவத் தளவாடங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஆனால் இராணுவத்தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டது. தமிழ்கத்தின் புவியியல் எல்லைக்குள் இருந்த கட்டமைப்புகள் தமிழகத்தின் உடமைகளாயின. ஆனால், அவற்றின் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

பிரிவினை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அந்நாட்டுப் பிரதமர், தமிழ்மக்கள் முட்டாள்தனமான முடிவு எடுத்துவிட்டதாகச் சாடினார். அந்நாட்டு ஊடகங்கள் தமிழகம் 100 வருடங்கள் பின்தங்கிவிட்டதாகக் கிண்டல் செய்தன. ஆனால் தமிழ்த்தேசத்திற்குப் பிரதமராகப் பொறுப்பேற்றவர், இதைச் சவாலாக எடுத்துக்கொண்டார். அதை எப்போதும் நினைவில் கொள்ள, அவர் அதுவரை பின்பற்றப்பட்ட கிரிகோரியன் நாள்காட்டி முறையை தமிழ்த்தேச நாள்காட்டி முறைக்கு மாற்றினார். 2021 CE (Common Era) ஆம் வருடம் 1921 TE (Tamil Era) ஆனது. (முதல் அத்தியாயத்தில் கூட இது 1992 ஆம் வருடம் எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். அது நம்முடைய கணக்கின்படி 2092 CE)

ஆனால் உண்மை நிலவரம் வேறு விதமாக இருந்தது. தமிழகம் மாநிலமாக இருந்தபோது அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) பங்கு 16 %. ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒட்டுமொத்த வருவாயில் 4%. அத்தனை காலம் தமிழகத்தை வஞ்சித்ததன் பலனை அவர்கள் அனுபவித்தனர். பிரிவினைக்குப் பின் வருவாய் பெருமளவு குறைந்தது. ஆனால் பொறுப்புகள் (Liabilities) குறிப்பிடும் அளவுக்குக் குறையவில்லை. இதனால் அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அதேநேரம் தமிழத்தேசியம் வலுவான நிதிநிலையை அடைந்தது. பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கான தொழில்நுட்பங்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். வீழ்ந்துகொண்டிருந்த தன் அண்டை நாட்டின் அயல்வர்த்தகங்களைக் கைப்பற்றினர். சர்வதேச அரங்கில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாய் தமிழ்த்தேசம் உருவானது. காசுள்ளவன் சொல்தான் சபை ஏறும் என்பதற்கேற்ப அவர்கள் சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் காரணியாக மாறினர். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கடல்கடந்து இருக்கும் தன் தமிழ் உறவுகளை மீட்டனர். அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டு ஆழிசூழ் தீவில் கண்ணீர்சூழ் வாழ்க்கை நடத்திய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இரண்டாகப் பிளந்துகிடந்த தமிழ்தேசம் ஒன்றாக இணைந்தது.

இச்சூழலில், அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்த்தேசத்தின் அண்டை நாடாகவும் சண்டை நாடாகவும் இருந்த அந்தப் பரந்த தேசத்தின் அரசு மீண்டும் ஒரு தவறான முடிவு எடுத்தது.  தமிழ்த்தேசத்தின் நதிநீர்ப் பங்கீட்டை இரத்து செய்தது. ஒரு துளி நீர்கூடத் தர முடியாது என அறிவித்தது. அவர்களின் திட்டம் தமிழ்த்தேசத்தைப் போரைத் துவக்கும் சூழலுக்குத் தள்ளி, எல்லைதாண்டிய அத்துமீறல் என்று முத்திரையிட்டு, அதன்மூலம்  சர்வதேசப் பொருளாதாரத் தடை ஏற்படுத்துவது.

தமிழ்த்தேசம் சுமூகமாகப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது. ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே, போருக்குத் தயாரானது. ஆனால் அதனிடம் மற்ற நாட்டினர் அறியாத ஒரு இரகசிய பலம் இருந்தது. அது அவர்களின் இயந்திர மனிதர்கள் படை (Robot Army). அதுவரை வேறு எந்த நாட்டிடமும் சுயமாக இயங்கக் கூடிய ஒரு இயந்திரப் படை இல்லை. எனவே அதுகுறித்த எந்த சர்வதேச விதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதுவரை எல்லைதாண்டிய அத்துமீறல் என்பது மனிதர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டைத் தாண்டி ஊடுறுவுவது என்றே இருந்தது. எனவே தமிழ்த்தேசம் இயந்திரப் படையைக் கொண்டு தாக்கியபோது அவர்களால் சர்வதேச உதவியை நாட முடியவில்லை.

தமிழ்த்தேசத்தின் இயந்திரப் படைகள் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருமுனைத்தாக்குதலில் ஈடுபட்டன. வடக்குப் பிரிவு வேகமாக முன்னேறி பெங்களூரு நகரத்தைக் கைப்பற்றியது. மேற்கில் இன்னும் பலவீனமாக இருந்த எதிரிப் படையைத் தோற்கடித்து மலபார் கடற்கரை வரை முன்னேறினர். கிட்டத்தட்ட மூன்று இலட்சம் வீரர்கள் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் ஒரு வீரர் கூட கொல்லப்படவில்லை. இயந்திரப்படைகள் மயக்க மருந்துத் தோட்டாக்களை (Tranquilizing darts) மட்டுமே பயன்படுத்தின.

வெறும் இரண்டு நாட்களே நீடித்த இந்தப்போரின் முடிவில், தக்காணப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களும், மிகப்பெரும் நிலப்பரப்பும் இயந்திரப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தனக்குச் சொந்தமில்லாத நிலப்பரப்பை தமிழ்த்தேசம் திரும்ப ஒப்படைத்தது. ஆனால் நதிகள், அணைகள் மட்டும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. தேச எல்லையைத் திருத்தியமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அவர்களுக்கு உரிமையான நீரின் பங்கைத் தரவும் தமிழ்த்தேசம் முன்வந்தது.

ஆனால் போரின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள இயலாத அவர்கள், தமிழ்த்தேசம் அவர்களை நியாயமற்ற முறையில் ஏமாற்றி போரில் வென்றதாகக் கருதினர். எனவே தாங்களும் விஷமமான முறையில் பதிலடி கொடுக்க எண்ணினர். அவர்களுடைய உளவுப் பிரிவின் உதவியுடன், போரில் இழந்த நீர்வளத்தைத் திரும்பபெற, ஒரு தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்புதான் இந்த டோவப். இது வரை அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தாக்குதல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே இந்தத் தாக்குதலையும் முறியடிப்பார்கள் என் நம்புவோம். அடுத்த அத்தியாயத்தில், நாம் அபாயத்தில் விட்டுவந்த நாயகர்களின் நிலை என்ன ஆயிற்று என்று பார்க்கலாம்..

(தொடரும்)

துன்பச்சுற்றுலா - பாகம் 2

6

நம் நாயகர்கள் இருவரையும் ஆபத்தில் விடிவிட்டு நாம் மிக நீண்ட நேரம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். அவர்களுக்கு என்னவாயிற்றோ? காமிராவின் கண்களுக்குப் படாமலிருக்கக் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்த நம் நாயகர்கள் என்ன ஆனார்கள் என்று போய்ப் பார்க்கலாம்…

சப்தம் எழும்பாமல் அடிமேல் அடிவத்து உள்ளே நுழைந்தான் விஜய். அவனைப் பின்தொடர்ந்தான் விக்னேஷ். அவர்கள் உள்ளே நுழையவும் மித்ரா அதன் திரையில் ஒரு சிறிய அம்புக்குறியைக் காட்டியது. அது சுட்டிய திசையில் சென்ற விஜய், சுவற்றில் ஒரு இடத்தில் சென்று விரலால் மெல்ல அழுத்தினான். அந்த இடத்தில் குறுந்தட்டு இயக்கி (CD player) திறப்பதுபோலச் சதுரமாக ஒரு சிறிய பெட்டி வெளிவந்தது. அதை எடுத்து தரையில் ஓங்கி அடிக்க அது சிதறுகாய் போல உடைந்து தெரித்தது.

பதறிய விக்னேஷ், சப்தம் செய்யாதே என்பது போல சைகை காட்டினான். லேசாக சிரித்த விஜய், “பயப்படாத டா.. நான் இப்ப உடைச்சது தான் இந்த அறையில் எழும் ஒலிகளை கண்காணிக்கற கருவி. இனிமே பிரச்சனை இல்ல” என்றான்.

“சரி டா.. ஆனால் நாம இப்படியே எவ்ளோ நேரம் இருக்க முடியும்? அடுத்து என்ன பண்ணலாம்” என்று கேட்டான். அதற்கு விஜய் பதில் கூறும் முன், அங்கிருந்த ஒலிப்பெருக்கிகள் ஒலித்தன.

“மனோ, உதய்! கவனியுங்க.. புலி கூப்பிடுது.. ரவி புலியோட பேசப்போறான். எல்லோரும் கேட்கட்டும். ஸ்பீக்கர்ல ரிலே பண்ணறேன்” என்று அந்தக் குரல் கூறியது. புலி தமிழ்த்தேசத்தின் பிரதமருக்கு அவர்கள் வைத்த பட்டப்பெயர்.

 சிறிது நேரத்தில் ரவியுடைய குரல் ஒலிப்பெருக்கியில் வந்தது. ரவிதான் இந்தக் குழுவுக்குத் தலைவன். சரித்திரத்தின் முதல் விண்கலக் கடத்தலை நிகழ்த்திய சாதனையாளன்.

“சொல்லுங்க பி.எம். சார்… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”

“தீவிரவாதிக்ளோட அச்சுறுத்தலுக்கு எப்பவும் தமிழ்த்தேசியம் அடிபணியாது. உங்கள் நிபந்தனைகளை நிறைவேத்த முடியாது.”

“200 வருஷமா ஒரே வசனத்தை மாத்தாம பேசறீங்களே சார்.. ஒருவேளை உங்களுக்கு தாக்கிக் கைப்பற்றும் (Boarding and Capturing) கமாண்டோக்களைக்  கொண்டு எங்களைப் பிடிக்கற எண்ணம் இருந்தா அதைக் கைவிட்டுடுங்க.. அது நடக்காது. இந்த விண்வெளி நிலையம் முழுக்க எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கு. இதுக்குள்ள வெளி ஆட்கள் யாரும் எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது. இதை உங்க ஆட்கள் சொல்லியிருப்பாங்க..  எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர உங்களுக்கு வேற வழி இல்ல”

“உங்கள் கோரிக்கைகளை நிறைவேத்துறது என் நாட்டையே அழிக்கறதுக்கு சமம். அது கண்டிப்பா நடக்காது”

“இப்படி விவாதம் பண்ணிட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல. உங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் தரேன். அதுக்குள்ள அந்த இராணுவத் தொழில்நுட்பத்தை ஒப்படைக்கலைனா அடுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு உயிர் போகும்”

“அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு நான் 1 மணி நேரம் தர்ரேன். சரணடையறதுக்கு. சரணடையலைனா ஒரு மணி நேர முடிவில அந்த விண்வெளி நிலையத்தை நோக்கி எங்கள் மோதி அழிக்கும் தானியங்கி விமானம் (Kamikaze Drone  )  கிளம்பும். இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க”

அத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த விண்வெளி நிலையத்திலிருந்த தீவிரவாதிகள், பயணிகள், நம் நாயகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“அப்ப இன்னும் 1 மணி நேரத்துக்குள்ள நாம எப்படியாவது தப்பிக்கணும் டா” என்றான் விக்னேஷ்.

“எப்ப இருந்து டா இவ்வளவு சுயநலவாதியா ஆன? நாம இந்த விண்வெளி நிலையத்தில இருக்கற எல்லோரையும் காப்பாத்த முயற்சி செய்வோம்” என்றான் விஜய்.

“நம்மால முடியுமா டா?”

“முயற்சி செய்வோம். நம்மால முடியும் நம்பு. நம்பிக்கைதான் வெற்றிக்கு முதல்படி”

“தத்துவம் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா நாம இத எப்படி செய்யப் போறோம்?”

“பொறு. சொல்ரேன்”

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் அதே நேரம், கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்த ரவி, சிபியிடம் “புலி பேசுனத மறுபடியும் பிளே பண்ணு” என்று கேட்டான்.

“இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க” என்று ஒலித்தது.

“மனோ மொத்தம் 236 கைதிகள் இருக்கறதாத் தான் சொன்னான். பட்டியலைச் சரிபார்த்து சொல்லு” என்றான் ரவி. சிபியும் கணிணித் திரையில் பார்த்து, “238 பயணிகள் இருக்கறதா இங்கயும் பதிவாகி இருக்கு. இரு. யார் அந்த இரண்டு பேர்னு கண்டுபிடிச்சு சொல்ரேன்” என்றான்.

கான்ஃபரன்ஸ் அறையின் காமிராப் பதிவுகளை எடுத்த சிபி, முக ஒப்பறியும் அமைப்பின் (Face Recognition System) மூலம் ஆய்ந்தான். சில நொடிகளில் அது விஜய்யையும், விக்னேஷையும் காட்டிக்கொடுத்தது.

“இந்த இரண்டு பேரைத் தான் காணல” திரையில் அவர்கள் நிழற்படத்தைக் காட்டினான் சிபி.

“எங்க ஒளிஞ்சு இருக்காங்க? கண்டுபிடிச்சயா?” என்றான் ரவி

“அவங்க எந்த கேமிராவிலும் தெரியல. ஒருவேளை பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சு இருக்கலாம்”

“பதிவான வீடியோல கடைசியா எங்க இருக்காங்கனு பாரு”

ஓரிரு நிமிடங்களில் அதைக் கண்டுபிடித்தான் சிபி.

“கடைசியா 12 ஆம் பகுதியில் இருக்கும் பாத்ரூமுக்குள்ள போறது பதிவாகி இருக்கு.”

“அவங்க விவரங்கள உதய்க்கு அனுப்பு.“

7

“மித்ரா! இந்த விண்வெளி நிலையத்தோட வயர்லெஸ் கண்காணிப்புக் காமிரா கனெக்ஷன் எல்லாம் என்க்ரிப்ட்(Encrypt : மறைமொழியாக்கம் ) செய்யப்பட்டிருக்கா?” என்று தன் மின்னணுக் காரியதரிசியிடம் கேட்டான். அது ஒரு பெருக்கல் குறியைக் காட்டியது. “முழு இயங்குநிலைக்கு மாறு” என்று கட்டளையிட, “இயங்குநிலை மாற்றப்பட்டது” என்று பதிலளித்தது. “சரி. அந்த என்கிரிப்ஷன்?” என்று விஜய் கேட்க, “எதுவும் இல்லை. ப்ளைன் ஆகத்தான் இருக்கிறது” என்று பதிலளித்தது.

விக்கி மிக ஆச்சரியமாக, “இது பேசுமா டா?” என்று கேட்டான்.

“பாடவே செய்வேன். என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டது மித்ரா.

“இவ்ளோ நேரம் அது பேசிக் மோடில் இருந்தது டா. இது பெரிய வாயாடி. பாக்கத்தான போற..” என்றான் விஜய். விக்கி வாய்பிளந்து நின்றான்.

“நீங்க பாக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு” என்று அறிவித்துவிட்டு, மித்ரா தன் திரையில் ஒரு காணோளியைக் காட்டியது. அதில் ஒரு நபர் கையில் லேசர் துப்பாக்கியுடன் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். “பெயர் உதய். டோவப் தீவிரவாதி.” என்றும் அறிவித்தது.

விக்கி ஆச்சரியத்தில் உறைந்து போனான். “உயிரோட இருந்தா பின்னால ஆச்சரியப்பட்டுக்கலாம். இப்ப வர்றவன கவனிக்கணும்.” என்றான் விஜய்.

“சரி என்ன பண்ணலாம்?”

“ஏன் எப்பவும் என்னயே கேக்குற? ஆக்ஷன் எல்லாம் உனக்குத்தான் நல்லா வரும் நீயே இத சமாளி.”

“ஆக்ஷனா? அது நல்லா வரும்.. நீ எங்கயாச்சும் பாதுகாப்பா போய் ஒளிஞ்சுக்க. இத நான் பாத்துக்கறேன்.”

“அவன் கைல துப்பாக்கி இருக்கு. வீரத்த கொஞ்சம் கட்டுப்படுத்திக்க.”

“எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ வேகமா பொய் ஒளிஞ்சுக்க.”

“பேசுனது போதும். அவன் வந்துட்டான். போய் ஒளிஞ்சுக்குங்க.” இடைமறித்தது மித்ரா.

சில நொடிகளில் உதய் உள்ளே நுழைந்தான். “நீங்க இரண்டு பெரும் இங்கதான் ஒளிஞ்சு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். வெளிய வாங்க.”

எந்த சலனமும் இல்லை.

“ஒழுங்கா வெளிய வாங்க. நானா கண்டுபிடிச்சா உடனே கொன்னுடுவேன்.”

“வர்றோம். சுட்டுடாத” என்று கேட்டது விஜயின் குரல். விஜய், விக்கி இருவரும் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்தனர். துப்பாக்கி அவர்கள் மார்பைக் குறிபார்த்துக்கொண்டிருந்தது. மெல்ல உதயை நோக்கி வந்தனர். அவர்கள் அவனை நெருங்கவும், வாசலில் இருந்து அதிகாரமாக ஒரு குரல் “உதய்” என அழைத்தது. இருவர் முகத்திலும் அதிர்ச்சி.. என்ன என்பது போல உதய் திரும்பிப் பார்த்தான்.

அவ்வளவுதான்..  ஒரே நொடியில் விக்கியின் கால்கள் காற்றில் சுழன்றன. துப்பாக்கி எகிறிப் பறந்தது. அடுத்த உதை உதயின் தலையில் விழ, அவன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தான்.

“இவனை என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் விக்கி.


“அவன் இங்கதான் வந்தான்னு இவன் கூட்டாளிகளுக்குத் தெரியும். வேற எங்கயாச்சும் ஒளிச்சு வைக்கணும்.”

“எங்க?”

“இரு வர்றேன்”

நேராக வாசல் அருகில் சென்றவன், நிலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த மித்ராவை எடுத்து கைகளில் மாட்டிக்கொண்டான்.

“எப்படி.. சரியான நேரத்தில குரல் கொடுத்தேனா”


“கரக்டா செய்த மித்ரா.. இப்ப நம்ம இந்த காமிராவ எல்லாம் குருடாக்கணும்.”

“அத எல்லாம் ஆப் பண்ணிட்டா நம்மள கண்டுபிடிச்சுடுவாங்களே”

“ஆப் பண்ணாத. இந்த நிமிஷம் நடக்கற வீடியோவையே லூப் பண்ணிக்கிட்டு இரு”

“பண்ணிட்டேன்”

“குட் மித்ரா.. அப்படியே இவன் மயங்கிக் கிடக்குறத ஒரு போட்டோ எடு” என்று கூறி கையை தரையில் கிடக்கும் உதயை நோக்கி நீட்டினான். “ம்ம். எடுத்தாச்சு.” என்றது மித்ரா.

“சரி விக்கி.. வா. இவன தூக்கிட்டுப் போய் வேற எதாச்சும் ஒரு ரூம்ல போடணும். அந்த லேசர் துப்பாக்கியையும் எடுத்துக்க. தேவைப்படும்”

இருவரும் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.

__________

கன்ட்ரோல் ரூமில் இருந்த ரவியும் சிபியும் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் நின்றனர். அவர்கள் முன்னிருந்த எல்லாத் திரையிலும் மயங்கிக் கிடக்கும் உதயின் நிழற்படம் பளிச்சிட்டது.

“அவங்க சாதரணமான ஆட்கள் இல்லை. உடனே மனோவுக்கு எச்சரிக்கை அனுப்பு. கன்ட்ரோல் எல்லாத்தையும் சரிபண்ணி அவங்க எங்கன்னு கண்டுபிடி” என்றான் ரவி.

சிபி கான்ஃபரன்ஸ் ரூமின் ஒளிப்பெருக்கிகளை ஆன் செய்து, “மனோ! உடனடியா ரிப்ளை பண்ணு. அவசரம்.” என்றான். உடன் காமிரா திரைகள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பின. காமிராவின் முன் விக்கியும் விஜயும் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர்.

விக்கி காமிராவை நோக்கி, “மனோ இப்ப பேசும் நிலைல இல்லை. உங்களுக்கு என்ன வேணும்?” என்றான். அவன் பின்னால் மனோ பிணமாகக் கிடந்தான்.

8

கான்பிரன்ஸ் ரூமில் மனோ பிணமாகக் கிடப்பதைப் பார்த்து சிபியும் ரவியும் மிகவும் குழம்பிப் போயினர்.. நமக்கும் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா? கொஞ்சம் பின்னோக்கி செல்லலாம்..

மயக்கத்தில் இருந்த உதயை வேறொரு அறையில் வைத்து பூட்டிய பின், இருவரும் நேரே கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றனர். ரகசியமாக அறையின் உள்ளே நுழைந்தவர்கள், மனோ சுதாரிக்கும் முன் அவனை சுட்டு வீழ்த்தினர். அதன்பின் விஜய், தன ஏற்கனவே வைத்திருந்த, உதய் மயக்கத்திலிருக்கும் நிழற்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினான். அதைப் பார்த்தபின்தான் சிபியும் மனோவும் மனோவை அழைத்தனர். சரி.. இப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

சிபியும் ரவியும் மனோவின் உடலைப் பார்த்திருப்பார்கள் என்று உறுதியானவுடன் விஜய் அந்த அறையின் எல்லா காமிராவையும்,ஒலிவாங்கியையும்(mic) உடைத்தான்.

“என்னடா பண்ணற? இப்ப எதுக்கு அவங்கள உசுப்பேத்தி விடற” என்று கேட்டான் விக்கி. அந்த அறையில் இருந்த பயணிகள் எல்லோரும் குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பத்தான் வெளிய வருவாங்க.. நம்மால அவங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் ரூமுக்குள்ள வெச்சு  ஒண்ணா சமாளிக்க முடியாது. கன்ட்ரோல்ஸ்ல எதாச்சும் பண்ணி இந்த விண்வெளி நிலையத்தையே அழிச்சுடுவாங்க. அதான் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க இப்படி பண்ணினேன். இப்ப அவங்களில் ஒருத்தன் மட்டும் இங்க வருவான்” என்றான் விஜய்..

“அப்ப அவன நம்ம சுட்டுட்டு அடுத்தவன கவனிச்சுக்கலாம்னு சொல்றியா?”

“அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இன்னும் 20 நிமிஷத்தில இந்த இடத்த அழிக்க ட்ரோன (drone) அனுப்பிடுவாங்க. 25 ஆவது நிமிசத்தில இந்த இடமே இருக்காது”

“அப்ப ஷட்டில்ல ஏறி தப்பிச்சு போயிடலாம்”

“முடியாது. ஷட்டில கன்ட்ரோல் ரூமில இருந்துதான் எஜெக்ட்(eject) பண்ணனும்.”

“அப்ப என்னதான் பண்ணறது”

“நான் கன்ட்ரோல் ரூமுக்கு போறேன். நீ இவங்க எல்லோரையும் ஷட்டிலுக்கு கூட்டிட்டு போ”

“சரி”

“போகும்போது இந்த டோர் பேனல உடைச்சுடு. வீடியோவைப் பாத்துட்டு அவன் நேரா இங்கதான் வருவான். டோரை உள்ளிருந்து திறக்க முடியாது. உள்ளேயே மாட்டிக்குவான். இந்தா இத வெச்சிக்க. இது ஷட்டில திறந்து உள்ள போக உதவி செய்யும்” என்று சொல்லி மித்ராவைக் கழற்றிக் கொடுத்தான். அது அவன் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என அப்போது அவனுக்குத் தெரியாது.

“கவனமா இரு டா.. உள்ள ஒருத்தன் இருப்பான்ல. இதையும் கொண்டு போ” என்று மனோவின் துப்பாக்கியை எடுத்தது கொடுத்தான் விக்கி.

“நீயும் பத்திரம் டா” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விஜய். ஏற்கனவே எல்லா காமிராவையும் செயலிழக்க செய்திருந்தாலும் நேர்வழியாக கன்ட்ரோல் ரூமை நோக்கி சென்றால் எதிரே வருபவனிடம் சிக்க நேரிடும் என எதிர்திசையில் சுற்றிக்கொண்டு சென்றான்.

கன்ட்ரோல் ரூமின் வாசலை அடைந்தான். அந்த அறையில் நுழைய கடவுச்சொல்லை(passsword) பதிவு செய்ய வேண்டும். ஆனால் அங்கு நான்கு விசைப்பலகைகள் இருந்தன. தவறான கடவுச்சொல்லை தந்தாலோ அல்லது தவறான விசைப்பலகையில் விசையை(key) அழுத்தினாலோ தரை திறந்து அடியில் இருக்கும் காப்பறையில் விழ நேரிடும் என அவன் அறிவான். ஏற்கனவே கடவுச்சொல்லையும் சரியான விசைப்பலகை எது என்பதையும் மித்ரா மூலம் கேட்டுத் தெரிந்துவைத்து இருந்தான். அதை உள்ளிட்டு, உள்ளே நுழைந்தான். அங்கு சிபி மிகத் தீவிரமாக காமிராவின் கட்டுப்பாடுகளை திரும்பக்கொண்டுவர கணினியுடன் போராடிக்கொண்டிருந்தான். எனவே விஜய் வந்தததை கவனிக்கவில்லை. விஜய் எளிதாக சிபியை சுட்டு வீழ்த்தினான். எல்லாம் எளிதாக முடிந்தது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

கதவை மீண்டும் மூடிவிட்டு சென்று கணினியில் அமர்ந்தவன், காமிராக்களை மீண்டும் இயங்கச் செய்தான். பின் ஷட்டிலை எஜெக்ட் செய்யும் வேலைகளில் இறங்கினான். சிறிது நேரம் சென்று, வாசலை நோக்கி யாரோ வருவதை காமிரா திரையில் கவனித்தான். விக்கிதான் தன்னைத் தேடி வந்திருப்பான் என்று நினைத்து திரையை உற்று கவனித்தான். ஆம். விக்கிதான் வந்து நின்றிருந்தான். ஆனால் தனியாக இல்லை.

9

கான்பிரன்ஸ் அறைக்கு பணயக் கைதிகளைத் தேடிச் சென்ற ரவியைக் கொஞ்சம் தேடிச் செல்வோம்.. மனோ கொல்லப்பட்டதைப் பார்த்து கோவத்துடன் அவர்களைத் தேடிச் சென்றவன் அந்த அறையில் யாருமே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அறை முழுவதும் சுற்றித் தேடியவன், யாரும் ஒளிந்திருக்கவில்லை என உறுதி செய்துகொண்டு, வெளியேறச் சென்றான். அப்போதுதான் கவனித்தான்.. அந்தத் தானியங்கிக் கதவைத் திறக்கும் விசை (button) சிதைக்கப்பட்டிருந்தது. அவனை உள்ளேயே அடைத்துவைக்க நம் நாயகர்கள் செய்த வேலை என்பதை நாம் அறிவோம்.. அனால், தாளை நீக்கித்தான் கதவைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவர்களுக்குத் தோன்றவில்லை.. தன் லேசர் துப்பாக்கியால் கதவின் தாளைச் சுட, அது தெறித்துத் திறந்தது.

அனைவரும் தப்பித்து எங்கு செல்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். நேரே விண்கலத்தை நோக்கிச் சென்றான்.. கவனமாக, முயலைக் குறிவைக்கும் நரியைப் போல, பதுங்கி மறைந்து சென்றான்..  ஷட்டிலின் வாயிலில், விக்கி நின்றுகொண்டு இருந்தான். ஒவ்வொருவராக ஷட்டிலினுள் செல்ல உதவிக்கொண்டு இருந்தான். இன்னும் நான்கு பேர் தான் ஷட்டிலில் ஏற வேண்டும். அனைவரும் உள்ளே நுழையும் வரை காத்திருந்த ரவி, தனியாக விஜய் வருவதற்காக நின்றிருந்த விக்கியின் பின்புறமாக சென்று, அவன் முதுகில் துப்பாக்கியை அழுத்தி, கைகளை மேலே தூக்கக் கட்டளையிட்டான். பின்பு, நாயகன் முதுகில் வில்லன் துப்பாக்கியை வைத்தவுடன் என்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் நடந்தன. நாயகன் துப்பாக்கியைத் தட்டிவிட்டு வில்லனைத் தாக்குதைத் தவிர. ஷட்டிலின் கதவைப் பூட்டி, பயணிகளை உள்ளே அடைத்தான். விஜய் எங்கு இருப்பான் என்று ரவிக்குத் தெரியும். விக்கி இல்லாமல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விஜயை வெளியே கொண்டுவர முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். விக்கியைக் கூட்டிக்கொண்டு, மன்னிக்கவும், இழுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான்..

கட்டுப்பாட்டு அறையில் ஷட்டிலை அனுப்பும் வேலைகளில் இருந்த விஜய், காமிராவில் ரவி விக்கியை துப்பாக்கி முனையில் அழைத்து வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தான். முதல் முறையாக அவன் திட்டம் தோல்வி அடைந்தது. விக்கி இப்படி சிக்குவான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், அப்படியே உறைந்து நின்றான்.


கட்டுப்பாட்டு அறையின் வாசலை அடைந்த ரவி, கதவைத் திறப்பதற்கான கடவுச்சொல்லை விசைப்பலகையில் உள்ளிடச் சென்றான். ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்குத் தான் விக்கி காத்திருந்தான். அருகில் இருந்த மற்றொரு விசைப்பலகையில் அவன் விசையை அழுத்தினான். தவறான விசைகளை அழுத்தினால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமே.. தரை திறந்து, அதன் அடியில் இருந்த காப்பறையில் அவர்கள் இருவரும் விழுந்தனர். மேலே கதவு மீண்டும் மூடிக்கொள்ள, அவர்கள் அந்தப் அறையில் சிறை வைக்கப்பட்டனர்.

கோவத்தின் உச்சத்தில் இருந்த ரவி, விக்கியின் வயிற்றில் ஓங்கி உதைக்க, அவன் வலுவிழந்து தரையில் சரிந்தான். மற்றொரு சமயமாக இருந்தால் இந்நேரம் விக்கியின் உயிர் போயிருக்கும். ஆனால், இப்போது விக்கிதான் ரவியும் துருப்புச்சீட்டு. அவனை வைத்துத்தான் ரவி தப்பிக்க வேண்டும். அந்த அறையிலும் காமிராவும் ஒலிவாங்கியும் இருக்கும் என அவனுக்குத் தெரியும். காமிராவைப் பார்த்து, “ஒழுங்கா கதவைத் திற.. இல்லைனா உன் நண்பன் இங்கயே உயிரை விட்டுடுவான்” என்று கத்தினான். அவன் பின்னால் தரையில் விழுந்து கிடந்த விக்கி, “வேண்டாம் விஜய்.. கதவத் திறக்காத.. எல்லா பயணிகளும் ஷட்டில்ல ஏறிட்டாங்க. நீயும் தப்பிச்சு போய்டு. என்னைப் பத்திக் கவலைப்படாத” என்றான். அவன் வயிற்றில் மீண்டும் ஓர் உதய் விழ, மயக்கமடைந்தான். இதையெல்லாம் காமிராவில் பார்த்த விஜய், ஒரு முடிவுக்கு வந்தான்.

ஷட்டிலைத் தொடர்புகொண்டு, ஷட்டில் ஆப்பரேட்டரிடம்( shuttle operator) அதை இயக்கி தப்பிக்குமாறு  கூறிவிட்டு, ஷட்டிலை எஜெக்ட்(eject) செய்தான். பின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்டு, ஷட்டிலில் பயணிகள் தப்பி வரும் விவரத்தைக் கூறிவிட்டு, திட்டமிட்டபடி, டிரோன்(drone) மூலம் அந்த விண்வெளி நிலையத்தை அழிக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வின்கலத்தைத் தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோக்கள் (boarding அண்ட் capturing commandos) வரும்வரை காத்திருக்கக் கூறினர்.

பின்பு, காப்ப்பரையின் ஒலிப்பெருக்கிகளை இயக்கி, “ரவி, அந்த ஷட்டில் தப்பிச்சுப் போயாச்சு. இனிமே நீ ஒன்னும் பண்ண முடியாது. காமன்டோஸ் வந்துட்டு இருக்காங்க. நீ தப்பிக்க வழியே இல்லை” என்றான்.

ரவி இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தான். கோவத்தில் விக்கியை சுட்டுக்கொல்ல எத்தனித்தான்.. அப்போதுதான் அவனுக்கு அது நினைவுக்கு வந்தது.. காமிராவை நோக்கி, “இல்லை.. நான் தப்பிக்க முடியும். நான் வந்த ஷட்டில் (சிறையில் இருந்து கைதிகளை தப்புவித்த விண்கலம்) இருக்கு. நான் அதுல தப்பிக்க உதவி பண்ணினா உன் நண்பன் பிழைப்பான். நீ உதவலைனா , நான் எப்படியும் சாக வேண்டியதுதான்.அதனால உன் நண்பனையும் கொன்னுடுவேன்” என்றான்.

விஜய் குழப்பமடைந்தான். ரவியைத் தப்பிக்கச் செய்வது கொஞ்சம் ஆபத்தான காரியம்தான். ஆனால் அவனால் எப்படியும் அந்த விண்கலத்தில் ஏறி தப்பிச் செல்ல முடியாது. தரையிறங்கும் முன்னர் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் ரவியின் மனதிலிருந்த திட்டங்களை விஜய் அறிந்திருக்கவில்லை..
10

மகேந்திரகிரியில் உள்ள தேசிய விண்வெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம், வழக்கத்தை மீறி இன்னும் அதிகப் பரபரப்பாகக் காணப்பட்டது. அனைவரும் எதோ உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்போல உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர். காரணம், “மிதக்கும் சொர்க்கத்தில்” இருந்த பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விண்கலம் ஏறி திரும்ப வருகின்றனர் என்று விஜய் அனுப்பிய செய்தி. எல்லோரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்தாலும், ஒருவர் மட்டும் அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர் தலைமை ஆணையர் அநிருத்தன். எதோ ஓர் முடிவுக்கு வந்தவராக,  தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அருள்மொழியை தன் அறைக்கு வருமாறு தகவல் அனுப்பினார்.

“வணக்கம் சார்..” என்று சொல்லியவாறே உள்ளே நுழைந்தார் அருள்மொழி. அனிருத்தனின் முகவாட்டத்தைக் கவனித்தவர், “என்ன சார், மறுபடியும் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரச்சனையே இன்னும் முடியலை அருள்மொழி.. ஆதாரமில்லாத அந்தத் தகவலை நம்ப  முடியாது. இதுவும் அந்தத் தீவிரவாதிகளோட சதியா இருக்கலாம்”

“நானும் அதை நம்பலை சார்.. தரையிறங்கற விண்கலத்தை மட்டக்களப்பில் உள்ள இராணுவ தளத்தில் இறக்கனும்னு உத்தரவு அனுப்பியாச்சு.. மட்டக்களப்பில் கமாண்டோக்கள் தயாரா இருக்காங்க.. விமானப் படையும் தயாரா இருக்கு.. திட்டமிட்ட பாதையில் இருந்து விண்கலம் மாறி, வேற திசைல போச்சுன்னா, அதைத் தாக்கவும் உத்தரவு கொடுத்திருக்கேன்..”

“நல்லது அருள்மொழி.. பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்காவா பண்ணி இருக்கிங்க.. ஆனா, டிரோன்ஸயும் தயாரா வெச்சிக்கோங்க.. எந்த நேரத்திலும் அதை செலுத்தத் தயார்பண்ணி வையுங்க..”

“சரி சார்”

“தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோ படை என்ன ஆச்சு?”

“10 நிமிடத்துக்கு முன்னாலத்தான் அவங்க விண்கலம் புறப்பட்டு இருக்கு.. இன்னும் 20 நிமிஷத்துல மிதக்கும் சொர்க்கத்த அடைஞ்சுடுவாங்க சார்..”

“நல்லது அருள்மொழி.. கவனமா இருங்க.. முடிஞ்சவரை அந்தத் தீவிரவாதிகளை உயிரோட பிடிக்க முயற்சி பண்ணனும்..”

“சரி சார்”

இவர்கள் இப்படித் திட்டம் போட்டுக்கொண்டு இருக்க, அங்கே ரவியின் திட்டங்களோ கொடூரமானதாக இருந்தது.

கட்டுப்பாட்டு அறையினுள் கையும் காலும் கட்டப்பட்டு தரையில் மயங்கிக் கிடந்தான் விக்கி..

“உன்னால தப்பிக்க முடியாது.. அந்த விண்கலதில் போய் நீ தரையிரங்கறதுக்குள்ள அதை தாக்கி அழிச்சுடுவாங்க.. பேசாம சரணடைஞ்சுடு” என்றான் விஜய்.

“கண்டிப்பா அவங்களால நான் போற விண்கலத்தத் தாக்க முடியாது. ஏன்னா நான் விண்கலத்த என் நாட்டுல தரையிறக்கப் போறேன்.. அதையும் மீறி அவங்க என் நாட்டு வான் எல்லைல நுழைஞ்சு தாக்குனா அதையே காரணமா வெச்சு உங்க நாட்டு மேல பொருளாதாரத் தடை கொண்டு வந்துடுவாங்க.. எப்படி ஆனாலும் எனக்கு சந்தோசம் தான்..” என்றான் ரவி.

ரவி சொல்வதும் ஒருவகையில் உண்மைதான்.. அவன் எதிரி நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் பிறகு எதுவும் செய்ய முடியாது.. விண்கலத்தை அழிப்பதாக இருந்தால் உயர் காற்று மண்டலத்திலேயே (Upper Atmosphere) அழித்தால்தான் உண்டு.. அதற்கு விஜயும் மனதுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான்.

“என்ன? எங்க நாட்டு எல்லைக்குள்ள நுழைஞ்சாதான.. அதுக்குள்ளே தகவல் சொல்லி என்னை போட்டுதள்ளிடலாம்னு யோசிக்கிறியா?” என்றான் ரவி.. விஜய்க்கு இதயமே நின்றுபோனது.. இந்த பாதகன் மனதுள் நினைத்ததை அப்படியே சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டே, இல்லை என்று தலையை ஆட்டினான்.

“நீ அப்பட்டித்தான் யோசிப்பன்னு எனக்குத் தெரியும்.. அதுக்கும் என்கிட்ட ஒரு ஏற்பாடு இருக்கு. இதோ இவன என்னோட அழைச்சுட்டு போறேன்.. ஷட்டில் கிளம்பத் தேவையான கட்டளைகளை கணினிக்கு கோடு. நான் பத்திரமா போய்ச் சேர்ந்ததும் இவன பத்திரமா திருப்பி அனுப்புறேன்” என்று விக்கியைக் கைகாட்டினான் ரவி.

விஜய்க்கு உலகமே காலடியில் நொறுங்கியதுபோல் இருந்தது. தான் உயிருடன் இருக்கும்போது விக்கியை அவனால் பலிகொடுக்க முடியாது.

“நீ என்ன அரிச்சந்திரனா? நீ கண்டிப்பா அவனத் திருப்பி அனுப்ப மாட்ட. உன்ன நம்ப முடியாது” என்றான் விஜய்.

“என்ன நம்பறதத் தவிர உனக்கு வேற வழி இல்லை”

“வேற வழி இருக்கு. நீ கிளம்பின பிறகு நான் எங்க நாட்டுக்கு தகவல் கொடுத்துடுவேன்னு தான விக்கிய கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. விக்கி வேண்டாம். நானே உன்கூட வர்றேன்”

“நீ என்கூட வந்துட்டா அப்புறம் ஷட்டில யார் எஜெக்ட் பண்ணுவா?”

“டைம் படி எல்லாம் தான நடக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறேன்.. விக்கி இப்படியே இருக்கட்டும். கமாண்டோஸ் வந்து அவன விடுவிச்சுக்குவாங்க. அதுக்குள்ளே நம்ம உன் நாட்டு வான் எல்லைக்குள்ள போய்டலாம்.”

ரவிக்கு விஜய் சொல்வது சரி என்றுதான் பட்டது. விஜயை இங்கு விட்டால் அவன் விக்கி இறந்தாலும் பரவாயில்லை என்று தகவல் சொல்லிவிடுவானோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் சரி என்று நினைத்தான். இருந்தாலும் இதில் ஏதும் சதி இருக்குமோ என சந்தேகப்பட்டான். மயக்கம் தெளிந்தாலும் விக்கியால் இயங்க முடியாதபடிக்கு கட்டப்பட்டிருக்கிறான். எனவே அவன் பிரச்சனை இல்லை.. எதாவது செய்வதானால் விஜய்தான் செய்ய முடியும். எனவே விஜயை அழைத்துசெல்லத் தீர்மானித்தான்.

“சரி.. நீ என்கூட வா.. ஷட்டில் எஜெக்ட் பண்ண வேண்டிய கமாண்ட்ஸ் எல்லாம் கொடு” என்றான் ரவி.

விஜய் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.. விசைப்பலகையில் புயலென இயங்கி விண்கலம் கிளம்பத் தேவையான கட்டளைகளைக் கொடுத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஷட்டிலில் போய் ஆட்டோமேடிக் எஜெக்சன் மோடை ஆன் பண்ணினாத் தான் நான் இங்க டைமர செட் பண்ண முடியும். நான் போய் அத ஆன் பண்ணிட்டு வரேன். இரு” என்றான் விஜய். ரவியும் ஷட்டிலை இயக்கும் பயிற்சி பெற்றவன்தான் என்பதால் இது உண்மைதான் என அவனுக்குத் தெரியும். எனவே, “வேண்டாம். நானே போய் ஆன் பண்ணிட்டு வரேன். நீ மற்ற வேலைகளை பாரு” என்று சொல்லிவிட்டு ஷட்டிலை நோக்கிச் சென்றான் ரவி.

அவன் கண்களை விட்டு மறந்ததும் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பின்வரும் செய்தியை தட்டச்சு செய்தான்:

தலைமை விண்வெளி பாதுகாப்பு அதிகாரிக்கு,
தீவிரவாதக் கூட்டத்தின் தலைவன் ரவி, விண்வெளி சிறையில் இருந்து தப்பப் பயன்படுத்திய விண்கலத்தில் தப்பி அவன் நாட்டுக்குள் சென்றுவிட திட்டமிட்டுள்ளான்.. அவன் அந்நாட்டு வான் எல்லைக்குள் நுழையும் முன் வின்கலத்தைத் தாக்கி அழிக்கவும்

விஜய்

கடிதத்தை மீண்டும் வாசித்து சரிபார்த்துவிட்டு அனுப்பினான். மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை உறுதி செய்துகொண்டு, அது அனுப்பப்பட்டதற்கான பதிவை அழித்து, அஞ்சல் பெட்டியை மூடினான். பின்பு மயங்கியிருந்த விக்கியின் அருகில் சென்று அமர்ந்து, “இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள எப்படியாவது சொல்லனும்னு இருந்தேன். இப்ப சொல்லிடுறேன்.. விக்கி.. ஐ லவ் யூ டா..” என்று சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டான்.. பின்பு, தன் கண்களின் ஓரத்தில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஷட்டில் செலுத்தப்பட வேண்டிய வேலைகளை கவனித்தான். எல்லாம் முடியவும், ரவி திரும்ப வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஷட்டிலை நோக்கச் சென்றனர்.
அது ஒரு சிறிய ரக விண்கலம். எனவே அதை இயக்க ஒரே ஒரு ஷட்டில் ஆபரேட்டர் போதுமானது. காக்பிட்டில் (cockpit) ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்கும். சிறைக்குக் கைதிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுசெல்ல வடிவமைக்கப்பட்டது என்பதால், ஷட்டிலில் இருக்கும் கைதிகள் ஆப்பரேட்டரைத் தாக்கி ஷட்டிலைக் கைப்பற்றாமல் இருக்க, இரண்டு பகுதிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியான வெளி வாயில்களுடன் இருக்கும். அதன் பயணிகள் வாயில் வழியாக விஜயை உள்ளே அனுப்பி பூட்டிவிட்டு, முன்பிருந்த ஆபரேட்டருக்கான வாயில் வழியாக ரவி உள்ளே நுழைந்தான். பயணிகள் வாயில், வெளிப்புறத்தில் இருந்தோ, அல்லது ஆபரேட்டர் கட்டளையின் மூலமோ மட்டும்தான் திறக்கும். உள்புறத்தில் இருந்து திறக்க முடியாது. கைதிகளை கொண்டுசெல்வதால் இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் அதில் இருந்தது. எனவே, ரவி தைரியமாக இருந்தான்.

ஷட்டில் எஜெக்ட் செய்யப்படுவதற்கான கவுண்ட்-டவுனை துவக்கினான் ரவி. இன்னும் 5 நிமிடத்தில் புறப்படும் என்று கணினித் திரை காட்டியது. 4 நிமிடம்.... 3 நிமிடம்....2 நிமிடம்....1 நிமிடம்.... என நேரம் ஓடியது.. இன்னும் 40 வினாடிகள் என்று திரையில் ஓடிக்கொண்டிருந்த போது, அதை மிக ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்த ரவி, திரையின் ஓரத்தில், பயணிகள் வாயில் திறப்பதைக் குறிக்கும் குறியீடு ஒளிர்வதை கவனிக்கவில்லை..

பின்புறம், பயணிகள் வாயில் திறப்பதைப் பார்த்த விஜய், மிகவும் குழப்பமடைந்தான். எதோ பிரச்சனையாக இருக்கும் என நினைத்து வெளியே வந்தான். அவன் வெளியேறவும் மீண்டும் அந்தக் கதவு மூடிக்கொண்டது. அடுத்த 10 வினாடிகளில் விண்கலம் எஜெக்ட் ஆனது. அது எப்படி நடந்தது? நமக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று பார்ப்போம்..

விஜயும் ரவியும் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியரவும், மித்ரா விக்கியை மயக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஷட்டிலை திறக்க முன்பு விஜய் மித்ராவை விக்கியிடம் தந்தது நினைவிருக்கலாம். மித்ரா திருடப்பட்டால், அதை அணிபவனை செயலிழக்கச் செய்ய, ஒரு மின்னதிர்ச்சி தரும் அமைப்பு இருந்தது. இப்போது விக்கியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர, அந்த மின்னதிர்ச்சியை சிறிய அளவில் மித்ரா பயன்படுத்தியது. விக்கி பதறி எழுந்தான். மித்ரா நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியது.

விக்கி கட்டுகளை அவிழ்த்துகொள்ள முன்றான்.. முடியவில்லை.அவன் கட்டுகளை விடுவிப்பதற்குள் ஷட்டில் புறப்பட்டுவிடும் போல இருந்தது.

“ஷட்டில புறப்படாம நிறுத்து மித்ரா” என்றான் விக்கி.

“என்னால முடியல.. என்னால தடுக்க முடியாதபடிக்கு விஜய் அதை லாக் பண்ணியிருக்கான்”

“நான் அந்த ரவிகிட்ட பேசணும்.. அதாச்சும் முடியுமா?”

“இல்லை. அதுவும் முடியாது”

விக்கி யோசித்தான்.. எதுவும் புலப்படவில்லை.. “இப்ப அவன எப்படி வெளிய கொண்டுவர?”

“கதவைத் திறந்துதான்”

“ஜோக் அடிக்க இதுவா நேரம் மித்ரா?” என்று கோபித்தவன், உடனே பிரகாசமானான்.. “கரெக்ட்.. கதவைத் திறக்கனும். மித்ரா, அந்த ஷட்டில் டோர..” என்று விக்கி முடிப்பதற்குள், “திறந்துட்டேன்” என்றது மித்ரா. விஜய் கதவைத் தண்டி வெளியேறியதை காமிராவில் பார்த்ததும் மீண்டும் கதவை மூடியது. இது எதுவும் தெரியாத ரவி, எஜெக்ட் ஆனதும் விண்கலத்தை கிளப்பிக்கொண்டு ‘போய்ச்சேர்ந்தான்’. அவன் நிலை என்ன ஆகி இருக்கும் என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அதுபோக, பிற்பாடு நம் நாயகர்களால் துவக்கத்தில் அடைத்துவைக்கப்பட்ட உதய், கமாண்டோக்களால் கைதுசெய்யப்பட்டு, சர்வதேசே நீதிமன்றத்தில் ஆஜராகி, அவன் நாட்டு உளவுத்துறைக்கும் இந்த தாக்குதலுக்கும் இருந்த தொடர்பை ஒப்புக்கொள்ள, அந்த நாட்டின் மீது பொருளாதார, தொழில்நுட்ப தடைகள் கொண்டுவரப்பட்டது தனிக்கதை. இப்போது நாம் ஷட்டிலில் இருந்து வெளியே வந்த விஜய் என்ன செய்தான் என்பதைக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

விஜய் ஓடிச்சென்று விக்கியின் கட்டுகளை விடுவித்தான். கட்டுகள் விடுபட்டதும் விஜயின் கன்னம் பழுக்க ஓர் அறை விட்டான் விக்கி..

“ஏன்டா இப்படி பண்ணின? எண்ணக் காப்பாத்த முயற்சி பண்ணாத.. தப்பிச்சு போய்டுன்னு சொன்னேன் இல்லை.. அந்த தீவிரவாதி தப்பி அவன் நாட்டுக்கு போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்றான் விக்கி. விஜய் பேசவில்லை. தலைகுனிந்து மௌனமாயிருந்தான். விக்கி அவனை நெருங்கி வந்தான். அவன் தாடையை விரல்களால் உயர்த்தி, அவன் கண்களைப் பார்த்தான்..

“நான் மயங்கியிருந்தப்ப என்கிட்ட எதோ சொன்னியாமே.. மித்ரா சொல்லுச்சு”

“அது வந்து....”

“அத நீ சொல்ல மாட்டியான்னு தான் நான் இத்தன நாளா காத்துட்டு இருக்கேன்.. என் கண்களைப் பார்த்து சொல்லு”

“விக்கி.. ஐ லவ் ....”

அந்த வார்த்தைகளை விஜய் முடிக்கும்வரை விக்கி காத்திருக்கவில்லை.. அதற்குள் அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்..

--முற்றும்--

Web Analytics