புதன், ஆகஸ்ட் 14, 2013

யுத்தம் - பாகம் 3

சூரியன் ஸ்ரீதுவாரிடம் பிரிவுபச்சாரம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், விதுரசேனனும், அமரகீர்த்தியும் ஒரு சிறிய பரிவாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அரச அடையாளங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய மெய்க்காவல் வீரர்கள் மட்டும் பின்தொடர, அந்த செல்வநகரின் ஆடம்பரமான வீதிகளின் அழகையும் பிரம்மாண்டத்தையும் இரசித்தவாறே சென்றனர்.

அவர்கள் சென்ற வீதி, அதைவிட அகலமான ஒரு இராஜவீதியில் சென்று முடிந்தது. அந்தத் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி நிமிர்ந்து பார்த்த அமரகீர்த்தி, தான் கண்ட காட்சியால் ஒரு நிமிடம் உறைந்து நின்றுவிட்டான்.

அவன் முன்னே, ஒரு நூறடி தூரத்தில், அவன் இதுநாள் வரை கதைகளில் மட்டுமே கேட்டறிந்த யாழிக் கோயில் இருந்தது. செவிவழிக் கதைகளாக இதுவரை இக்கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறான். அவற்றை எல்லாம் கட்டுக்கதை என்று நம்பிவந்தான். ஆனால், கதைகளில் கேட்டதைவிட இந்தக் கோயில் பன்மடங்கு அழகாக இருந்தது.

அதை நேரில் பார்க்க இயலாத வாசகர்களுக்காக, அதைப்பற்றி நான் கூறுகிறேன். அது ஒரு வட்ட வடிவமான கோயில். வட்டத்தின் விளிம்பில், சீரான இடைவெளியில், பன்னிரண்டு தூண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பன்னிரண்டு அடி உயரமுள்ள தங்கத் தூண்கள். அந்தத் தூண்கள் முழுவதும், மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளாலும், விலையுயர்ந்த இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கலையம்சம் பொருந்திய மொட்டைத் தூண்கள். ஆம். அந்தக் கோயிலுக்குக் கூரை இல்லை.

அந்த வட்டவடிவ தரை முழுதும் பொன்னாலும் மணிகளாலும் வேயப்பட்டிருந்தது. ஒரு அரைவட்டப் பகுதி சமதளமாய், வழிபடுப்வர்கள் நிற்பதற்கேற்ப அமைந்திருந்தது. மற்றோரு பகுதி, பன்னிரு படிகள் கொண்ட உயர்த்தப்பட்ட மேடையாக இருந்தது. சிறிதும் பெரிதுமான நூற்றுக்கணக்கான சுடர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மண்ணில் இறங்கி வந்த தேவலோகம் போல காட்சியளித்தது.

“அப்பா.. நான் காண்பது உண்மைதானா? இது யாழிக்கோயிலா? அப்படியானால்..” என்று அமரகீர்த்தி கேட்டுக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த விதுரசேனன், “அடடா.. பூஜை நேரமாகிவிட்டது போல இருக்கிறதே.. வேகமாக நட.. போகலாம்” என்று சொல்லிக்கொண்டே ஓடாத குறையாக நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர வேண்டி இளவரசனும் விரைந்து செல்ல வேண்டியிருந்தது.

இருவரும் அந்தத் தங்கத் தூண்களைத் தாண்டி கோவிலின் உள்ளே நுழைந்தனர். கோயிலினுள் மிகக் குறைந்த கூட்டமே இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, இது ஆயிரம் வருடங்களாக நடைபெறும் வழக்கமான ஒரு சடங்கு. ஆனால் இளவரசன் இவற்றை எல்லாம் அதிசயமாகப் பார்த்தான். அவன் இதுவரை கட்டுக்கதை என்று நம்பிவந்தது இப்போது அவன் கண்முன்னே நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

சூரியன் மெல்ல தொடுவானத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. பீடத்தில் நின்றிருந்த தலைமை அறங்காவலர், மேற்கு திசையை நோக்கி, எதையோ எதிர்நோக்கிக் காத்திருப்பவர் போல இருந்தது. எனவே இளவரசனும் அந்த திசையை நோக்கலானான். அங்கே, ஒரு வளர்ந்த யானையை விடப் பெரிய உடலையும், அதற்கேற்ற சிறகுகளும் உடையதாய், வானை ஆக்கிரமித்தபடி பறந்துவந்தது அந்தப் பறவை. அந்தக் கோயிலை நோக்கிவந்து, அந்த பீடத்தில் நின்றது. பதினாறு அடி மதிக்கத்தக்க உயரமும், சிங்கம் போன்ற உடலமைப்பும், முதுகில் மிகப்பெரிய சிறகுகளும் கொண்ட, ஒரு யாழி!

அதை வரவேற்பவரைப்போல, அந்தத் தலைமை அறங்காவலர் சிரம் தாழ்த்த, அந்த யாழியும் பதிலுக்கும் சிரம் தாழ்த்தியது. பிறகு, தலைமை அறங்காவலர், கட்டியம் கூறுபவர் போல பெரிய குரலெடுத்து, “துர்காபுரி தேசத்தின் அறத்தையும் தர்மத்தையும் கண்காணிக்கும் நான், இந்நாட்டு மக்கள் யாவரும் அமைதியும் வளமும் பெற்று வாழ எல்லா பிரயத்தனமும் செய்யப்படுவதாயும், இவ்விடம் வாழ இயலாதாகி எல்லைவிட்டு வெளியேறிய ஜீவன் ஏதுமில்லை என்றும் உறுதியளிக்கிறேன். மகா சரபேஸ்வரமூர்த்தியின் ஆணைப்படி, இத்தேச எல்லையை அத்துமீறிக் கடந்தவன் எவனோ, அவன் உடலை உடனே ஒப்படைக்கவேண்டி, யாழிகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் உங்களிடம் கோருகிறேன்.” என்று, காலம் காலமாக உச்சரிக்கப்படும் அந்த வாக்கியங்களைக் கூறினார்.

சில கணங்கள் அமைதிக்குப்பின், ஒரு அழகிய மலர்மாலையை அந்த யாழிக்கு சூட்டி, “மகா சரபேஸ்வர மூர்த்தியின் திருவருளால், துர்காபுரியின் அமைதி மீண்டும் காக்கப்பட்டது. நன்றி” என்று கூறவும், அந்த யாழி ஒரு பெருந்தாவலில் வானை மீண்டும் ஆக்கிரமித்து, அந்தக் கோயிலை ஒருமுறை வட்டமிட்டு, பின் தான் வந்த திசையிலேயே சென்றது.

அமரகீர்த்தி அந்த யாழி சென்ற திசையை மெய்மறந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் அப்போதுதான் எதிர்பாராமல் அறையப்பட்டவன் போல அதிர்ச்சியுடன் இருந்தது. “என்ன மகனே.. உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்ற விதுரசேனனின் குரல்தான் அவனை இந்த உலகத்துக்கு இழுத்துவந்தது. “இல்லை அப்பா.. இந்த.. ” என்று எதோ சொல்லவந்த அமரகீர்த்தியை, கையமர்த்தி, “எதுவாகினும், நம் உறைவிடம் சென்று பேசலாம்.. இப்போது அமைதியாக இரு” என்று கூறினார். இருவரும் அவர்கள் தங்கியிருந்த அரசினர் மாளிகைக்கு சென்றனர்.

ஓய்வறையில் நுழைந்தும் “தந்தையே.. நான் கண்டது உண்மைதானா? உண்மையிலேயே ஒரு யாழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஒரு யாழி இல்லை.. துர்காபுரியின் மேற்கே உள்ள வனத்தில் நூற்றுக்கணக்கான யாழிகள் இருப்பதாகக் கூறுவர்” என்றார் விதுரசேனன்.

“நாம் அந்தக் காட்டைக் கடந்து தானே வந்தோம்? அங்கு இவ்வளவி பெரிய பட்சிகள் இருப்பதற்கான அறிகுறியேதும் காணப்படவில்லையே?”

“இவை தெய்வீக சக்தி கொண்ட உயிரினங்கள்.. துர்காபுரி மக்களே இந்த பூஜை தவிர்த்து மற்ற சமயங்களில் இவற்றைப் பார்த்த்தில்லை. இவை அஷ்டமா சித்திகளும் அமையப்பெற்றவை. அவற்றால் கண்ணில் படாமல் மறையவோ, உருமாறவோ முடியும். மின்னல் வேகத்தில் பறக்க முடியும். கண்ணால் பார்த்தே மனிதர்களைக் கொல்ல முடியும்.. அவற்றின் ஆற்றல் அளப்பரியது”

“இவை ஏன் துர்காபுரியைக் காவல் காக்கின்றன? நிஜமாகவே சரபேஸ்வரர் அளித்த வரத்தால்தானா?”

“அப்படித்தான் தெரிகிறது. தெளிவான காரணத்தைக் கூற துர்காபுரி மக்களால் கூட முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் முந்தைய நிகழ்வல்லவா?”

“அப்படி என்னதான் வரம் கொடுத்தாராம்?”

“இன்னாட்டுப் பிரஜை ஒருவன் வாழ வழியின்றி வெளியாறதபடி இவர்கள் பார்த்துக்கொள்ளும்வரை, அந்நியன் எவனும் அத்துமீறி நுழையாமல் யாழிகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவே. இப்போது சொல் மகனே, நம்மிடம் இருக்கும் இருபத்தி நான்கு இலட்சம் வீரர்களும் இந்த யாழிகளுக்கு ஈடாகுமா?”

“ஆனால் இவ்வளவு பிரயத்தனம் செய்து இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் என்ன தந்தையே?”

“இந்நாட்டின் அமைவிடம் மிக சிறப்பானது. மிகப் பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடம், கடல்வாணிக வழித்தடத்தில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் இன்னாட்டு மக்கள் நாட்டின் எல்லையைத் தாண்டுவது பாவம் என்று கருதுவதால், துறைமுகம், கப்பல் போக்குவரத்து என எதற்கும் அனுமதிக்கவில்லை. இந்த நாடு மட்டும் நம்வசம் வந்தால், நம் நாட்டின் வளமும் பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்”

“என்னவோ அப்பா.. எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது”

“ஒரு குழப்பமும் வேண்டாம் மகனே.. நீ சென்று உணவருந்திவிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளை மீண்டும் பிரயாணத்தைத் துவங்க வேண்டுமல்லவா?”

மறுநாள் துர்காபுரியின் தலைநகருக்கு பயணப்பட வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய, இளவரசன் வெளியேறினான். அந்தப் பயணம் துவங்கும்வரை நாமும் சிறிது காத்திருப்போம்.
(தொடரும்)

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

துன்பச்சுற்றுலா - பாகம் 1

1

மஞ்சள் வெயில் வீசும் மாலை வேளையில், பசுமையான மரங்களால் சூழப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டிடம் “கிளிநொச்சி விண்கல நிலையம்” என்ற நியான் பெயர்ப்பலகையைத் தாங்கி நின்றது. காத்திருப்போர் அறையின் பாலிமர் நாற்காலியில் கண்கள் நிறைய தேடலுடன் உள்ளே வரும் அனைவரையும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் இந்த யுவனின் பெயர் “விஜய்”. அந்த அறை முழுவதும் பயணிகளால் நிரம்பியிருக்கிறது. அவன் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போன்ற வஸ்துவை ஓரக் கண்ணால் பார்த்தான். ஏவலுக்குக் காத்திருக்கும் காவலாளி போல உடனே அது ஒரு பீப் ஒலியை வெளியிட்டு பின் “நேரம் மாலை 5 மணி 42 நிமிடம். தேதி ஜூன் 13, 1992” என இயந்திரக் குரலில் கூறியது. வெறுப்புடன் வாசலை நோக்கியவன் முகம், உள்ளே நுழைந்த ஒரு இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் சட்டென பிரகாசமாகியது. ஆனால், மலர்ச்சியை மறைத்துக்கொண்டு பொய்யான கோவத்தை ஒட்டிக்கொண்டான். அந்த இளைஞன் நேராக இவனை நோக்கி வர, விஜய் அவனிடம் “எப்பயாவது சொன்ன நேரத்துக்கு வரியா? சோம்பேறி!” என்று கூறி செல்லமாக தலையில் ஒரு குட்டு வைத்தான். வந்தவனும் “சாரி டா.. அதான் ஷட்டில் (Shuttle : விண்கலம்) புறப்படும் முன்னே வந்துட்டேன் இல்ல” என்று சிணுங்கினான். இந்த புதுமுகத்தை இப்போது அறிமுகம் செய்யலாம்.. இவன் பெயர் விக்னேஷ். செல்லமாக விக்கி. கொஞ்சம் பழைய பெயராகத் தோன்றினால் மன்னியுங்கள்.. விஜயும் விக்கியும் “மிதக்கும் சொர்க்கம்” எனும் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு சுற்றுலா செல்ல வந்திருக்கின்றனர். இரண்டு ‘அழகான’ இளைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் ஏதேனும் காதல் கிசுகிசுவைப் பரப்பி விட வேண்டாம். அவர்கள் நண்பர்களாகத்தான் வந்திருக்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்.. ஏதோ அறிவிப்பு வருகிறது. என்னவெறு கேட்போம்..

“ஒன்றுபட்ட தமிழ்த்தேசத்தின் கிளிநொச்சி விண்கல ஏவுதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. மிதக்கும் சொர்க்கம் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு செல்லும் பயணிகள் நுழைவாயில் 12 வழியாக பாதுகாப்பு சோதனைக்குச் செல்லவும். நன்றி”.

இதோ, நம் நாயகர்கள் நுழைவாயிலை நோக்கிச் செல்கிறார்கள். நாமும் அவர்களைத் தொடர்ந்து செல்வோம். வாருங்கள்…

2

காற்றைக் கிழித்து சீறிச் சென்ற விண்கலத்தை விட அதிக வேகமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது விஜயின் மனம். விண்வெளிப் பயணத்திற்காய் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்டு இருக்கும் அவன், தன் மனதையும் ஒரு கூண்டுக்குள் அடைத்து வெளிப்படுத்தாமல் வைத்து இருந்தான். பொங்கும் நீரூற்றாய் காதல் பெருகும்போது சிறைப்படுத்தும் கூண்டுகள் கொள்ளுமா? இந்தச் சுற்றுலா முடியும் முன்னர் தன் மனதை விக்கியிடம் வெளிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தான்.

அவன் மனம் திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில், “உங்கள் பிரயாணம் இனிதே முடிந்தது. “மிதக்கும் சொர்க்கம்” உங்களை வரவேற்கிறது. நல்வரவு” என ஒலித்தது. விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையவும், பாதுகாப்புக்கான கண்ணாடிக் கூண்டுகள் திறந்தன. நம் நாயகன் மனதைச் சிறைப்படுத்திய கண்ணாடிக் கூண்டும் விலகும் என நம்புவோம். அதுவரை மௌனமாக அவர்களைப் பின்தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை இதோ, அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைகின்றனர். நாமும் செல்வோம்..

விஜயும், விக்கியும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர். பிரம்மாண்டமான, அழகாக வடிவமைக்கப்பட்ட அறை. இருவரும் உடுப்புகளை மாற்றிக்கொண்டு படுக்கைக்குச் சென்றனர். பிரயாணம் அவர்களை மிகவும் களைப்படையச் செய்திருக்கவேண்டும். விஜய் படுத்தவுடன் உறங்கிப்போனான். ஆனால் விக்னேஷ் தூங்கவில்லை. அவன் மனதிலும் ஒரு புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் விஜயின் முகத்தை உற்றுப்பார்த்தவன், அவன் தூங்கிவிட்டான் என உறுதிசெய்துகொண்டான். விஜயின் கலைந்த சிகையைக் கோதிவிட்டு, “நீ என்னைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும் டா.. நீயா சொல்லனும் என்று இத்தனை நாள் எதிர்பார்த்தேன். என்னை ஏன் இப்படி காக்க வைக்கிற? இந்த டூர் முடிஞ்சு நாம திரும்பப் போறதுக்குள்ள நீ சொல்லலனா நான் உன்னைவிட்டு ஒரேடியா விலகிடுவேன்” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டான். சிறிது நேரத்தில் அவனும் தூங்கிவிட்டான்.

அவர்கள் இருவர் மனதிலும் வீசிய புயலைவிட பெரிய புயல் ஒன்று வெளியில் வீசப்போவது தெரியாமல், இருவரும் நாளைய நாளின் கொண்டாடங்களைத் தூக்கத்திலும் கனவாய்க் கண்டனர். மன்னித்துவிடுங்கள் நாயகர்களே.. உங்கள் கொண்டாட்டங்கள் கனவாகவே முடியப் போகின்றன..

3

“விக்கி! எழுந்திரு.. நேரம் ஆச்சு” என்று உசுப்பினான் விஜய். “அதுக்குள்ள விடுஞ்சுடுச்சா டா?” என்று சிணுங்கினான் விக்னேஷ். “டேய் இது உன் வீட்டு பெட்ரூம் இல்லை டா.. இங்க பகலும் கிடையாது, இரவும் கிடையாது. இப்படி தூங்கவா 36000 கிலோமீட்டர் பிரயாணம் பண்ணி வந்த? எந்திரிச்சு கிளம்பு” என்று கிண்டல் செய்துகொண்டே குளியலறைக்குள் சென்றான்.

இருவரும் களைப்பு நீங்கி தங்களை சுத்தம் செய்துகொண்டு உணவு விடுதிக்கு வந்தனர். அவர்களை நோக்கி வந்த இயந்திர மேசைப்பணியாள் ( Robowaitress) உணவு வகைகளைப் பட்டியலிட்டது.  அவர்கள் உணவைத் தேர்வு செய்து கூறவும் சமையல் கூடத்திற்குச் சென்று எடுத்துவந்தது. இருவரும் நிதானமாக உணவை உண்டு முடித்தனர். இறுதியாக குளிர்பானம் கொண்டுவரக் கட்டளையிட்டனர்.  ஆளுக்கொரு புட்டி தான்.. ஒரே புட்டியில் இரண்டு குழல் போட்டு குடிக்கும் பழக்கம் 22 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து போயிருந்தது.

அந்த இயந்திரப் பணியாள் குளிர்பான புட்டிகளை ஒரு தட்டில் வைத்து ஏந்தி அவர்களை நோக்கி வந்தது. அப்போது திடீரென அங்கிருந்த எல்லா விளக்குகளும் அணைந்தன. மின்சாதனங்கள் இயங்காமல் நின்றன. குளிர்பானத்தைக் கொண்டுவந்த இயந்திரன் அவர்கள் மேசையில் மோதி தட்டைத் தவறவிட்டது. சுமார் ஒரு நிமிட குழப்பத்திற்குப் பிறகு மீண்டும் மின்சக்தி சீரடைந்தது. அனைத்தும் எப்போதும் போல் இயங்க ஆரம்பித்தன.

“இங்க ஏதோ தப்பா இருக்கு” என்றான் விஜய்.

“ஏன் அப்படி நினைக்கற? எலக்ட்ரிக் சிஸ்டம்ல ஏதும் ஃபால்ட் வந்திருக்கும். அதான் பவர் போய்ட்டு வந்திருக்கு. இது சாதாரண விஷயம் தான?” என்று கேட்டான் விக்னேஷ்.

“பவர் ஃபால்ட்னா இந்த ரோபோ ஏன் தவறா இயங்கனும்? அது பேட்டரியில் தான் இயங்குது. அதுக்கு கண்களும் கிடையாது. ப்ராக்சிமிட்டி சென்சார் (Proximity sensor: அருகாமை உணர்வி) மட்டும்தான் உண்டு. அது ஏன் வந்து மோதனும்?” என்று கூறினான் விஜய்

“நீ என்ன டா சொல்ல வர்ர? எனக்கு ஒன்னும் புரியல” – இது விக்னேஷ்.

“நீ என்ன நினைக்கற மித்ரா?” என்று தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம் போன்ற வஸ்துவிடம் கேட்டான் விஜய். அது சிறிது மௌனத்திற்குப் பிறகு, தன் ஹோலோகிராம் திரையில் ஒரு ஆச்சரியக்குறியையும், பின் ஒரு கேள்விக்குறியையும், சில பீப் ஒலிகளையும் ஏற்படுத்தியது. இந்த மித்ரா ஒரு மின்னணுக் காரியதரிசி. விஜயின் சொந்தத் தயாரிப்பு.

விக்னேஷ் பொறுமை இழ்ந்தவனாய் “இங்க என்ன நடக்குது? தெளிவா சொல்லு டா? என்றான். அதற்கு விஜய் கூறிய பதில்:

“இந்த ஒட்டுமொத்த விண்வெளி நிலையமும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial intelligence-AI) மூலமா தான் இயங்குது. அதை இயக்குற கம்ப்யூட்டர் கோர் இந்த விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில இருக்கு. அதை நெருங்குறது கூட அவ்வளவு சுலபம் இல்ல. அதைச் சுற்றி நிறைய பாதுகாப்பு சாதனங்களும், அத்துமீறி நுழைபவர்களை பிடிக்கும் பொறிகளும் இருக்கு. அதன் மையப் பகுதியில கணிணியில் கோளாறு ஏற்பட்டா சரிசெய்யவும், அவசர உபயோகத்துக்கும் மேனுவல் ஓவர்ரைட் பேனல் (Manual Override Panel) இருக்கு”

“இப்ப என்ன சொல்ல வர்ர? புரியும்படி சொல்லு டா”

“ஏ.ஐ (AI) ஒழுங்கா இயங்கிட்டு இருக்கும்போது அந்த அறைக்குள்ள யாரும் நுழைய முடியாது. அதனால அதை யாரோ ஹேக் (Hack) பண்ணி நிறுத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அந்த கட்டுப்பாட்டு அறைக்குள்ள நுழைஞ்சு மீண்டும் மேனுவலா ஆன் பண்ணி இருக்காங்க.”


“உனக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரியும்?”

“நான் ஒரு ஏ.ஐ. டிசைன் என்ஜினியர் டா.. இத தெரிஞ்சுக்க வேண்டியது என் தொழில்”

“நீ ஓவரா கற்பனை பண்ற. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. நிஜமாவே சிஸ்டம்ல எதும் ஃபால்ட் இருக்கும். அதான் இப்படி நடந்து இருக்கு”

“கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுடும்”

இருவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர். அப்போது திடீர் என எச்சரிக்கை சங்கு (siren) ஒலித்தது. சிவப்பு நிற ஒளிவிளக்குகள் நடைபாதையைக் கலவரமாக்கின. ஒலிப்பெருக்கியில் இருந்து “அபாயம்! பயணிகள் அனைவரும் உடனே மாநாட்டு அறைக்கு (Conference hall) செல்லவும்” என்ற அறிவிப்பு தொடர்ச்சியாக ஒலித்தது.

“பார்த்தயா டா.. நிஜமாவே ஏதோ பிரச்சனை. வா, உடனே கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போகனும்” என்றான் விக்னேஷ்.

“ஆபத்துனா எமர்ஜென்ஸி ரூமுக்கோ ஷட்டிலுக்கோ போவாங்களா? இல்ல கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போவாங்களா?” என்று கேட்டான் விஜய்.

இந்தக் கேள்வி விக்னேஷை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. “அப்ப இதுக்கு என்னடா அர்த்தம்? எதுக்குக்காக இப்படி பண்ணனும்?” என்று கேட்டான்.

“நாம இப்ப பணையக் கைதிகள் டா.. உன்னோட கேப்டிவ்ஸ (captives: பணையக் கைதி) சொகுசா ஏ.சி. ரூம்ல படுத்து தூங்க விடுவயா? இல்ல உன் கண்காணிப்புல வெச்சு இருப்பயா?” என்று கேட்டான் விஜய்.

விக்னேஷுக்கு நிலைமை புரிந்தது. “இப்ப என்னடா பண்ணலாம்? ரூமுக்கு போய் ஒளிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

“ரூமுக்குப் போனா ஒளிஞ்சுக்க முடியாது. எல்லா ரூம்லயும் ரகசிய கேமிரா இருக்கு. நம்மை சுலபமா கண்டுபிடிச்சுடுவாங்க.”

“அப்ப என்ன தான் செய்யலாம்?”

“இங்க கேமிரா இல்லாத இடம் பாத்ரூம் மட்டும்தான். ஆனா அங்கயும் மைக் இருக்கும். நாம இப்ப பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கப் போறோம். ஆனா எந்தவித சப்தமும் செய்துட கூடாது. ஜாக்கிரதையா வா” என்றான் விக்னேஷ்.

இருவரும் மிக கவனமாக அடிவைத்து அந்த மறைவிடத்துக்குள் நுழைந்தனர்.

4

    “தேசிய விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம்” என்ற பெயர்ப்பலகையைத் தாங்கி மகேந்திரகிரி  மலையின் அடிவாரத்தில் அந்த மலைகளின் கம்பீரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு நின்ற அக்கட்டிடத்தினுள் எப்போதும் போல் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மையப்பகுதியில் இருந்தபெரிய ஆறையில் “பா. அநிருத்தன், தலைமை ஆணையர்” என்று பொறிக்கப்பட்ட கண்ணாடி மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த மத்திம வயதுடைய அந்த நபர், அடுத்த நிமிடம் தாக்கக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் அமைதியாய் கோப்புகளை வாசித்துத் திருத்தங்கள் செய்துகொண்டிருந்தார். அப்போது சிறிய பீப் ஒலியுடன் அவர் எதிரே இருந்த கணிணித்திரை “புதிய மின்னஞ்சல் வந்திருக்கிறது” என்று பெட்டிச்செய்தி காட்டியது. அந்த அதிர்ச்சியான செய்தியை அவர் எந்த சலனமும் இல்லாமல் வாசித்து முடித்தார். தன் மேஜையில் “தலைமைப் பாதுகாப்பு அதிகாரி” என்று எழுதியிருந்த கட்டத்தில் விரலால் ஒற்றி “மிஸ்டர் அருள்மொழி, உடனே என் அறைக்கு வாங்க” என்று அழைத்தார். “இதோ வருகிறேன் சார்” என்று ஒலிப்பெருக்கியில் மறுமொழி வந்தது.

இரண்டு நிமிடம் கரைந்த பின் அருள்மொழி வந்தார். அநிருத்தன் மௌனமாக கணிணித்திரையைத் திருப்பி அந்த மின்னஞ்சலைக் காட்டினார். மின்னஞ்சலை வாசிக்க வாசிக்க அருள்மொழியின் முகத்தில் அதிர்ச்சி குடிகொண்டது. அந்த ஏ.சி. அறையிலும் பலமாக வியர்த்துக்கொட்டியது.

“பதற்றப்படாதீங்க அருள்மொழி, நிதானம் இழக்கறது தான் தோல்வியோட ஆரம்பம்” என்றார் அநிருத்தன். “இப்ப என்ன சார் பண்ணலாம்?” என அருள்மொழி கேட்கும்போது, கணிணித்திரையில் “அவசர செய்தி” என்று தொடர்ச்சியான பீப் ஒலியுடன் பெட்டிச்செய்தி வந்தது. கணிணித்திரையை தன் பக்கம் திருப்பி அஞ்சலைத்  வாசித்த அநிருத்தன், கேலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். “லேட் நியூஸ் அருள்மொழி” என்றார்.

“புரியல சார்” என்றார் அருள்மொழி

“இன்னைக்குக் காலையில விண்வெளிக் கடுஞ்சிறைக்கு ஆட்களையும் பொருட்களையும் கொண்டுபோற ஷட்டில் ஆப்பரேட்டர் ஒருத்தர் அவர் வீட்டுல பிணமா கண்டுபிடக்கப்பட்டிருக்கார்.  ஆனால் ரெக்கார்ட் படி அவர் நேற்று மாலை கிளம்புன ஷட்டில விண்வெளிச் சிறைக்கு ஓட்டிட்டு போனதா இருக்கு.”


“அவரக் கொன்னுட்டு ஆள்மாறாட்டம் பண்ணி ஷட்டில கடத்தி இருக்காங்க”

“ஆமாம் அருள்மொழி. அதுமட்டும் இல்ல. அந்த ஷட்டில் இன்னைக்கு அதிகாலை விண்வெளிச் சிறையில் இருந்து கிளம்பி இருக்கு. அது கிளம்பின் பின் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் மூன்று பேர் காணாம போனத கண்டுபிடிச்சு இருக்காங்க. அதோட, அந்த ஷட்டில் நேராக பூமிக்கு வராம ஒரு விண்வெளி கேளிக்கைப் பூங்காவில டாக் (dock) ஆகியிருக்கு”

“அவ்வளவு பாதுகாபான சிறையில இருந்து எப்படி சார் அவங்க தப்பிச்சாங்க?”

“அவங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட உணவில் ஏதோ மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கு. அதை சாப்பிட்ட காவலாளிகள், கைதிகள் எல்லாரும் மயங்கிட்டாங்க. தப்பிச்சுப் போன தீவிரவாதிகள் உட்பட. ஷட்டிலைக் கடத்தின அந்த ஆசாமி சிறைக் கண்காணிப்பாளரோட அக்செஸ் கார்டை எடுத்து கைதிகள் அறைக்குள் நுழைஞ்சு இருக்கான். அந்த மூன்று தீவிரவாதிகளுக்கும் மயக்கம் தெளிய மருந்து கொடுத்து கூட்டிட்டுபோனது சிறைக் கேமிராவில பதிவாகி இருக்கு”

“யாரு சார் அந்த தீவிரவாதிங்க?”

“அவங்க பேர் உதய், மனோ, சிபி. அவங்க மூன்று பேரும் டோவப் (TOWaB : Take Our Waters Back) தீவிரவாத இயக்கத்த சேர்ந்தவங்க. உதயும் மனோவும் நம்ம இராணுவ ஆராய்ச்சிக் கூடத்த உளவு பார்த்ததுக்காக கைது செய்யப்பட்டாங்க. சிபி நம்ம ரோபோட் இராணுவத்தோட கன்ட்ரோல்ஸ ரிமோட் ஹேக் (Remote Hacking – இணையம் மூலம் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துதல்) செய்ய முயற்சி பண்ணினவன். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவனை நம்ம கமேண்டோ வீரர்களும் விமானப் படையும் சேர்ந்து அதிரடித் தாக்குதல் நடத்தி கைது பண்ணிக் கொண்டுவந்தாங்க. இதனால இரண்டு நாட்டுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலையே வந்தது. அவன் செய்த சைபர் அட்டாக் (cyber-attack) சர்வதேச நீதிமன்றத்துல நிரூபனமானதால அவங்க அமைதியாகிட்டாங்க. ரொம்ப ஆபத்தானவன்”

“இப்ப என்ன பண்ணனும் சார்?”

“முதல்ல இந்த விஷயத்த பி.எம். கிட்ட சொல்லனும்”

“பி.எம். சென்னைல இல்ல சார். வெளிநாட்டு பயணத்துல இருக்காரு”

“தெரியும். அவரோட பெர்சனல் மெயிலுக்கு தகவல ஃபார்வேர்ட் பண்ணனும். அவர் அங்கிருந்தே பார்த்துக்குவார்”

தகவலை அனுப்பிய சில நிமிடங்களில் பி.எம்.மிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. குரலில் கொஞ்சம் கூட அச்சமோ பதற்றமோ இல்லாமல்  பேசி முடித்தார் அநிருத்தன்.

“பி.எம். என்ன சார் சொன்னார்? அவங்க டிமாண்ட்ஸ ஒத்துக்கற மாதிரி எதும் சொல்லிடலயே?” என்று கேட்டார் அருள்மொழி

“அது எப்படி ஒத்துக்க முடியும் அருள்மோழி? அவங்க பணமோ டைட்டானியமோ கேட்கல. அவங்க கேட்டது நம்ம ரோபோ இராணுவத்தோட பாசிட்ரான் மூளையின் (Positron brain: இயந்திர மனிதர்களை இயக்கும் செயற்கை மூளை ) டெக்னாலஜிய. அதக் கொடுத்தா நம்ம ஒட்டுமொத்த இராணுவத்தையே அவங்க கையில குடுக்கற மாதிரி. அத கண்டிப்பா தர முடியாது.”

“அப்ப நீங்க என்ன செய்யலாம் என்று முடிவு பண்ணியிருக்கீங்க சார்?”

“நான் முடிவு பண்ணல. பி.எம். முடிவு பண்ணிட்டார்”

5

கதையை மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு, இந்த டோவப் (TOWaB) அமைப்பின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.. அந்த வரலாற்றை அறிய நாம் 70 வருடங்கள் பின்னோக்கிப் போக வேண்டும். 70 வருடங்களுக்கு முன்பு, தமிழ்த் தேசம் என்ற ஒன்று இருக்கவில்லை. தமிழ்மண் இரண்டாகப் பிரிவுபட்டு இரண்டு நாடுகளின் அங்கமாக இருந்தது. இரண்டு நாடுகளும் தமிழ்பேசும் மக்களை வஞ்சித்தன. மறைமுகமாகவும் நேரடியாகவும் அவர்களை அழிக்க நினைத்தன. இதை உணர்ந்துகொண்ட தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நாடுகள் அந்தப் போராட்டங்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.

இதற்கிடையில், அப்போதைய தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அங்கு புதிதாகப் பொறுப்பேற்ற மாகாண அரசு, தங்களை முழுமையான சுதந்திர நாடாக அறிவித்தது. தமிழகத்தின் வரி வருவாய் முழுவதையும் அந்தப் புதிய அரசே கைப்பற்றிக்கொள்ள, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு சந்தித்தது. அதனால் முழு இராணுவ பலம் கொண்டு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. எனவே மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது. தமிழகம் தனி நாடாக மாற மக்கள் முடிவெடுத்தனர்.


ஆனால் அப்போதும் தமிழகத்தை வஞ்சிக்க அந்த அரசு நினைத்தது. தமிழகத்தின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப இராணுவத் தளவாடங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஆனால் இராணுவத்தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டது. தமிழ்கத்தின் புவியியல் எல்லைக்குள் இருந்த கட்டமைப்புகள் தமிழகத்தின் உடமைகளாயின. ஆனால், அவற்றின் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

பிரிவினை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அந்நாட்டுப் பிரதமர், தமிழ்மக்கள் முட்டாள்தனமான முடிவு எடுத்துவிட்டதாகச் சாடினார். அந்நாட்டு ஊடகங்கள் தமிழகம் 100 வருடங்கள் பின்தங்கிவிட்டதாகக் கிண்டல் செய்தன. ஆனால் தமிழ்த்தேசத்திற்குப் பிரதமராகப் பொறுப்பேற்றவர், இதைச் சவாலாக எடுத்துக்கொண்டார். அதை எப்போதும் நினைவில் கொள்ள, அவர் அதுவரை பின்பற்றப்பட்ட கிரிகோரியன் நாள்காட்டி முறையை தமிழ்த்தேச நாள்காட்டி முறைக்கு மாற்றினார். 2021 CE (Common Era) ஆம் வருடம் 1921 TE (Tamil Era) ஆனது. (முதல் அத்தியாயத்தில் கூட இது 1992 ஆம் வருடம் எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். அது நம்முடைய கணக்கின்படி 2092 CE)

ஆனால் உண்மை நிலவரம் வேறு விதமாக இருந்தது. தமிழகம் மாநிலமாக இருந்தபோது அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) பங்கு 16 %. ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒட்டுமொத்த வருவாயில் 4%. அத்தனை காலம் தமிழகத்தை வஞ்சித்ததன் பலனை அவர்கள் அனுபவித்தனர். பிரிவினைக்குப் பின் வருவாய் பெருமளவு குறைந்தது. ஆனால் பொறுப்புகள் (Liabilities) குறிப்பிடும் அளவுக்குக் குறையவில்லை. இதனால் அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அதேநேரம் தமிழத்தேசியம் வலுவான நிதிநிலையை அடைந்தது. பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கான தொழில்நுட்பங்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். வீழ்ந்துகொண்டிருந்த தன் அண்டை நாட்டின் அயல்வர்த்தகங்களைக் கைப்பற்றினர். சர்வதேச அரங்கில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாய் தமிழ்த்தேசம் உருவானது. காசுள்ளவன் சொல்தான் சபை ஏறும் என்பதற்கேற்ப அவர்கள் சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் காரணியாக மாறினர். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கடல்கடந்து இருக்கும் தன் தமிழ் உறவுகளை மீட்டனர். அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டு ஆழிசூழ் தீவில் கண்ணீர்சூழ் வாழ்க்கை நடத்திய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இரண்டாகப் பிளந்துகிடந்த தமிழ்தேசம் ஒன்றாக இணைந்தது.

இச்சூழலில், அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்த்தேசத்தின் அண்டை நாடாகவும் சண்டை நாடாகவும் இருந்த அந்தப் பரந்த தேசத்தின் அரசு மீண்டும் ஒரு தவறான முடிவு எடுத்தது.  தமிழ்த்தேசத்தின் நதிநீர்ப் பங்கீட்டை இரத்து செய்தது. ஒரு துளி நீர்கூடத் தர முடியாது என அறிவித்தது. அவர்களின் திட்டம் தமிழ்த்தேசத்தைப் போரைத் துவக்கும் சூழலுக்குத் தள்ளி, எல்லைதாண்டிய அத்துமீறல் என்று முத்திரையிட்டு, அதன்மூலம்  சர்வதேசப் பொருளாதாரத் தடை ஏற்படுத்துவது.

தமிழ்த்தேசம் சுமூகமாகப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது. ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே, போருக்குத் தயாரானது. ஆனால் அதனிடம் மற்ற நாட்டினர் அறியாத ஒரு இரகசிய பலம் இருந்தது. அது அவர்களின் இயந்திர மனிதர்கள் படை (Robot Army). அதுவரை வேறு எந்த நாட்டிடமும் சுயமாக இயங்கக் கூடிய ஒரு இயந்திரப் படை இல்லை. எனவே அதுகுறித்த எந்த சர்வதேச விதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதுவரை எல்லைதாண்டிய அத்துமீறல் என்பது மனிதர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டைத் தாண்டி ஊடுறுவுவது என்றே இருந்தது. எனவே தமிழ்த்தேசம் இயந்திரப் படையைக் கொண்டு தாக்கியபோது அவர்களால் சர்வதேச உதவியை நாட முடியவில்லை.

தமிழ்த்தேசத்தின் இயந்திரப் படைகள் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருமுனைத்தாக்குதலில் ஈடுபட்டன. வடக்குப் பிரிவு வேகமாக முன்னேறி பெங்களூரு நகரத்தைக் கைப்பற்றியது. மேற்கில் இன்னும் பலவீனமாக இருந்த எதிரிப் படையைத் தோற்கடித்து மலபார் கடற்கரை வரை முன்னேறினர். கிட்டத்தட்ட மூன்று இலட்சம் வீரர்கள் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் ஒரு வீரர் கூட கொல்லப்படவில்லை. இயந்திரப்படைகள் மயக்க மருந்துத் தோட்டாக்களை (Tranquilizing darts) மட்டுமே பயன்படுத்தின.

வெறும் இரண்டு நாட்களே நீடித்த இந்தப்போரின் முடிவில், தக்காணப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களும், மிகப்பெரும் நிலப்பரப்பும் இயந்திரப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தனக்குச் சொந்தமில்லாத நிலப்பரப்பை தமிழ்த்தேசம் திரும்ப ஒப்படைத்தது. ஆனால் நதிகள், அணைகள் மட்டும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. தேச எல்லையைத் திருத்தியமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அவர்களுக்கு உரிமையான நீரின் பங்கைத் தரவும் தமிழ்த்தேசம் முன்வந்தது.

ஆனால் போரின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள இயலாத அவர்கள், தமிழ்த்தேசம் அவர்களை நியாயமற்ற முறையில் ஏமாற்றி போரில் வென்றதாகக் கருதினர். எனவே தாங்களும் விஷமமான முறையில் பதிலடி கொடுக்க எண்ணினர். அவர்களுடைய உளவுப் பிரிவின் உதவியுடன், போரில் இழந்த நீர்வளத்தைத் திரும்பபெற, ஒரு தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்புதான் இந்த டோவப். இது வரை அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தாக்குதல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே இந்தத் தாக்குதலையும் முறியடிப்பார்கள் என் நம்புவோம். அடுத்த அத்தியாயத்தில், நாம் அபாயத்தில் விட்டுவந்த நாயகர்களின் நிலை என்ன ஆயிற்று என்று பார்க்கலாம்..

(தொடரும்)

துன்பச்சுற்றுலா - பாகம் 2

6

நம் நாயகர்கள் இருவரையும் ஆபத்தில் விடிவிட்டு நாம் மிக நீண்ட நேரம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். அவர்களுக்கு என்னவாயிற்றோ? காமிராவின் கண்களுக்குப் படாமலிருக்கக் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்த நம் நாயகர்கள் என்ன ஆனார்கள் என்று போய்ப் பார்க்கலாம்…

சப்தம் எழும்பாமல் அடிமேல் அடிவத்து உள்ளே நுழைந்தான் விஜய். அவனைப் பின்தொடர்ந்தான் விக்னேஷ். அவர்கள் உள்ளே நுழையவும் மித்ரா அதன் திரையில் ஒரு சிறிய அம்புக்குறியைக் காட்டியது. அது சுட்டிய திசையில் சென்ற விஜய், சுவற்றில் ஒரு இடத்தில் சென்று விரலால் மெல்ல அழுத்தினான். அந்த இடத்தில் குறுந்தட்டு இயக்கி (CD player) திறப்பதுபோலச் சதுரமாக ஒரு சிறிய பெட்டி வெளிவந்தது. அதை எடுத்து தரையில் ஓங்கி அடிக்க அது சிதறுகாய் போல உடைந்து தெரித்தது.

பதறிய விக்னேஷ், சப்தம் செய்யாதே என்பது போல சைகை காட்டினான். லேசாக சிரித்த விஜய், “பயப்படாத டா.. நான் இப்ப உடைச்சது தான் இந்த அறையில் எழும் ஒலிகளை கண்காணிக்கற கருவி. இனிமே பிரச்சனை இல்ல” என்றான்.

“சரி டா.. ஆனால் நாம இப்படியே எவ்ளோ நேரம் இருக்க முடியும்? அடுத்து என்ன பண்ணலாம்” என்று கேட்டான். அதற்கு விஜய் பதில் கூறும் முன், அங்கிருந்த ஒலிப்பெருக்கிகள் ஒலித்தன.

“மனோ, உதய்! கவனியுங்க.. புலி கூப்பிடுது.. ரவி புலியோட பேசப்போறான். எல்லோரும் கேட்கட்டும். ஸ்பீக்கர்ல ரிலே பண்ணறேன்” என்று அந்தக் குரல் கூறியது. புலி தமிழ்த்தேசத்தின் பிரதமருக்கு அவர்கள் வைத்த பட்டப்பெயர்.

 சிறிது நேரத்தில் ரவியுடைய குரல் ஒலிப்பெருக்கியில் வந்தது. ரவிதான் இந்தக் குழுவுக்குத் தலைவன். சரித்திரத்தின் முதல் விண்கலக் கடத்தலை நிகழ்த்திய சாதனையாளன்.

“சொல்லுங்க பி.எம். சார்… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”

“தீவிரவாதிக்ளோட அச்சுறுத்தலுக்கு எப்பவும் தமிழ்த்தேசியம் அடிபணியாது. உங்கள் நிபந்தனைகளை நிறைவேத்த முடியாது.”

“200 வருஷமா ஒரே வசனத்தை மாத்தாம பேசறீங்களே சார்.. ஒருவேளை உங்களுக்கு தாக்கிக் கைப்பற்றும் (Boarding and Capturing) கமாண்டோக்களைக்  கொண்டு எங்களைப் பிடிக்கற எண்ணம் இருந்தா அதைக் கைவிட்டுடுங்க.. அது நடக்காது. இந்த விண்வெளி நிலையம் முழுக்க எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கு. இதுக்குள்ள வெளி ஆட்கள் யாரும் எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது. இதை உங்க ஆட்கள் சொல்லியிருப்பாங்க..  எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர உங்களுக்கு வேற வழி இல்ல”

“உங்கள் கோரிக்கைகளை நிறைவேத்துறது என் நாட்டையே அழிக்கறதுக்கு சமம். அது கண்டிப்பா நடக்காது”

“இப்படி விவாதம் பண்ணிட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல. உங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் தரேன். அதுக்குள்ள அந்த இராணுவத் தொழில்நுட்பத்தை ஒப்படைக்கலைனா அடுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு உயிர் போகும்”

“அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு நான் 1 மணி நேரம் தர்ரேன். சரணடையறதுக்கு. சரணடையலைனா ஒரு மணி நேர முடிவில அந்த விண்வெளி நிலையத்தை நோக்கி எங்கள் மோதி அழிக்கும் தானியங்கி விமானம் (Kamikaze Drone  )  கிளம்பும். இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க”

அத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த விண்வெளி நிலையத்திலிருந்த தீவிரவாதிகள், பயணிகள், நம் நாயகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“அப்ப இன்னும் 1 மணி நேரத்துக்குள்ள நாம எப்படியாவது தப்பிக்கணும் டா” என்றான் விக்னேஷ்.

“எப்ப இருந்து டா இவ்வளவு சுயநலவாதியா ஆன? நாம இந்த விண்வெளி நிலையத்தில இருக்கற எல்லோரையும் காப்பாத்த முயற்சி செய்வோம்” என்றான் விஜய்.

“நம்மால முடியுமா டா?”

“முயற்சி செய்வோம். நம்மால முடியும் நம்பு. நம்பிக்கைதான் வெற்றிக்கு முதல்படி”

“தத்துவம் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா நாம இத எப்படி செய்யப் போறோம்?”

“பொறு. சொல்ரேன்”

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் அதே நேரம், கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்த ரவி, சிபியிடம் “புலி பேசுனத மறுபடியும் பிளே பண்ணு” என்று கேட்டான்.

“இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க” என்று ஒலித்தது.

“மனோ மொத்தம் 236 கைதிகள் இருக்கறதாத் தான் சொன்னான். பட்டியலைச் சரிபார்த்து சொல்லு” என்றான் ரவி. சிபியும் கணிணித் திரையில் பார்த்து, “238 பயணிகள் இருக்கறதா இங்கயும் பதிவாகி இருக்கு. இரு. யார் அந்த இரண்டு பேர்னு கண்டுபிடிச்சு சொல்ரேன்” என்றான்.

கான்ஃபரன்ஸ் அறையின் காமிராப் பதிவுகளை எடுத்த சிபி, முக ஒப்பறியும் அமைப்பின் (Face Recognition System) மூலம் ஆய்ந்தான். சில நொடிகளில் அது விஜய்யையும், விக்னேஷையும் காட்டிக்கொடுத்தது.

“இந்த இரண்டு பேரைத் தான் காணல” திரையில் அவர்கள் நிழற்படத்தைக் காட்டினான் சிபி.

“எங்க ஒளிஞ்சு இருக்காங்க? கண்டுபிடிச்சயா?” என்றான் ரவி

“அவங்க எந்த கேமிராவிலும் தெரியல. ஒருவேளை பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சு இருக்கலாம்”

“பதிவான வீடியோல கடைசியா எங்க இருக்காங்கனு பாரு”

ஓரிரு நிமிடங்களில் அதைக் கண்டுபிடித்தான் சிபி.

“கடைசியா 12 ஆம் பகுதியில் இருக்கும் பாத்ரூமுக்குள்ள போறது பதிவாகி இருக்கு.”

“அவங்க விவரங்கள உதய்க்கு அனுப்பு.“

7

“மித்ரா! இந்த விண்வெளி நிலையத்தோட வயர்லெஸ் கண்காணிப்புக் காமிரா கனெக்ஷன் எல்லாம் என்க்ரிப்ட்(Encrypt : மறைமொழியாக்கம் ) செய்யப்பட்டிருக்கா?” என்று தன் மின்னணுக் காரியதரிசியிடம் கேட்டான். அது ஒரு பெருக்கல் குறியைக் காட்டியது. “முழு இயங்குநிலைக்கு மாறு” என்று கட்டளையிட, “இயங்குநிலை மாற்றப்பட்டது” என்று பதிலளித்தது. “சரி. அந்த என்கிரிப்ஷன்?” என்று விஜய் கேட்க, “எதுவும் இல்லை. ப்ளைன் ஆகத்தான் இருக்கிறது” என்று பதிலளித்தது.

விக்கி மிக ஆச்சரியமாக, “இது பேசுமா டா?” என்று கேட்டான்.

“பாடவே செய்வேன். என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டது மித்ரா.

“இவ்ளோ நேரம் அது பேசிக் மோடில் இருந்தது டா. இது பெரிய வாயாடி. பாக்கத்தான போற..” என்றான் விஜய். விக்கி வாய்பிளந்து நின்றான்.

“நீங்க பாக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு” என்று அறிவித்துவிட்டு, மித்ரா தன் திரையில் ஒரு காணோளியைக் காட்டியது. அதில் ஒரு நபர் கையில் லேசர் துப்பாக்கியுடன் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். “பெயர் உதய். டோவப் தீவிரவாதி.” என்றும் அறிவித்தது.

விக்கி ஆச்சரியத்தில் உறைந்து போனான். “உயிரோட இருந்தா பின்னால ஆச்சரியப்பட்டுக்கலாம். இப்ப வர்றவன கவனிக்கணும்.” என்றான் விஜய்.

“சரி என்ன பண்ணலாம்?”

“ஏன் எப்பவும் என்னயே கேக்குற? ஆக்ஷன் எல்லாம் உனக்குத்தான் நல்லா வரும் நீயே இத சமாளி.”

“ஆக்ஷனா? அது நல்லா வரும்.. நீ எங்கயாச்சும் பாதுகாப்பா போய் ஒளிஞ்சுக்க. இத நான் பாத்துக்கறேன்.”

“அவன் கைல துப்பாக்கி இருக்கு. வீரத்த கொஞ்சம் கட்டுப்படுத்திக்க.”

“எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ வேகமா பொய் ஒளிஞ்சுக்க.”

“பேசுனது போதும். அவன் வந்துட்டான். போய் ஒளிஞ்சுக்குங்க.” இடைமறித்தது மித்ரா.

சில நொடிகளில் உதய் உள்ளே நுழைந்தான். “நீங்க இரண்டு பெரும் இங்கதான் ஒளிஞ்சு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். வெளிய வாங்க.”

எந்த சலனமும் இல்லை.

“ஒழுங்கா வெளிய வாங்க. நானா கண்டுபிடிச்சா உடனே கொன்னுடுவேன்.”

“வர்றோம். சுட்டுடாத” என்று கேட்டது விஜயின் குரல். விஜய், விக்கி இருவரும் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்தனர். துப்பாக்கி அவர்கள் மார்பைக் குறிபார்த்துக்கொண்டிருந்தது. மெல்ல உதயை நோக்கி வந்தனர். அவர்கள் அவனை நெருங்கவும், வாசலில் இருந்து அதிகாரமாக ஒரு குரல் “உதய்” என அழைத்தது. இருவர் முகத்திலும் அதிர்ச்சி.. என்ன என்பது போல உதய் திரும்பிப் பார்த்தான்.

அவ்வளவுதான்..  ஒரே நொடியில் விக்கியின் கால்கள் காற்றில் சுழன்றன. துப்பாக்கி எகிறிப் பறந்தது. அடுத்த உதை உதயின் தலையில் விழ, அவன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தான்.

“இவனை என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் விக்கி.


“அவன் இங்கதான் வந்தான்னு இவன் கூட்டாளிகளுக்குத் தெரியும். வேற எங்கயாச்சும் ஒளிச்சு வைக்கணும்.”

“எங்க?”

“இரு வர்றேன்”

நேராக வாசல் அருகில் சென்றவன், நிலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த மித்ராவை எடுத்து கைகளில் மாட்டிக்கொண்டான்.

“எப்படி.. சரியான நேரத்தில குரல் கொடுத்தேனா”


“கரக்டா செய்த மித்ரா.. இப்ப நம்ம இந்த காமிராவ எல்லாம் குருடாக்கணும்.”

“அத எல்லாம் ஆப் பண்ணிட்டா நம்மள கண்டுபிடிச்சுடுவாங்களே”

“ஆப் பண்ணாத. இந்த நிமிஷம் நடக்கற வீடியோவையே லூப் பண்ணிக்கிட்டு இரு”

“பண்ணிட்டேன்”

“குட் மித்ரா.. அப்படியே இவன் மயங்கிக் கிடக்குறத ஒரு போட்டோ எடு” என்று கூறி கையை தரையில் கிடக்கும் உதயை நோக்கி நீட்டினான். “ம்ம். எடுத்தாச்சு.” என்றது மித்ரா.

“சரி விக்கி.. வா. இவன தூக்கிட்டுப் போய் வேற எதாச்சும் ஒரு ரூம்ல போடணும். அந்த லேசர் துப்பாக்கியையும் எடுத்துக்க. தேவைப்படும்”

இருவரும் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.

__________

கன்ட்ரோல் ரூமில் இருந்த ரவியும் சிபியும் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் நின்றனர். அவர்கள் முன்னிருந்த எல்லாத் திரையிலும் மயங்கிக் கிடக்கும் உதயின் நிழற்படம் பளிச்சிட்டது.

“அவங்க சாதரணமான ஆட்கள் இல்லை. உடனே மனோவுக்கு எச்சரிக்கை அனுப்பு. கன்ட்ரோல் எல்லாத்தையும் சரிபண்ணி அவங்க எங்கன்னு கண்டுபிடி” என்றான் ரவி.

சிபி கான்ஃபரன்ஸ் ரூமின் ஒளிப்பெருக்கிகளை ஆன் செய்து, “மனோ! உடனடியா ரிப்ளை பண்ணு. அவசரம்.” என்றான். உடன் காமிரா திரைகள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பின. காமிராவின் முன் விக்கியும் விஜயும் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர்.

விக்கி காமிராவை நோக்கி, “மனோ இப்ப பேசும் நிலைல இல்லை. உங்களுக்கு என்ன வேணும்?” என்றான். அவன் பின்னால் மனோ பிணமாகக் கிடந்தான்.

8

கான்பிரன்ஸ் ரூமில் மனோ பிணமாகக் கிடப்பதைப் பார்த்து சிபியும் ரவியும் மிகவும் குழம்பிப் போயினர்.. நமக்கும் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா? கொஞ்சம் பின்னோக்கி செல்லலாம்..

மயக்கத்தில் இருந்த உதயை வேறொரு அறையில் வைத்து பூட்டிய பின், இருவரும் நேரே கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றனர். ரகசியமாக அறையின் உள்ளே நுழைந்தவர்கள், மனோ சுதாரிக்கும் முன் அவனை சுட்டு வீழ்த்தினர். அதன்பின் விஜய், தன ஏற்கனவே வைத்திருந்த, உதய் மயக்கத்திலிருக்கும் நிழற்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினான். அதைப் பார்த்தபின்தான் சிபியும் மனோவும் மனோவை அழைத்தனர். சரி.. இப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

சிபியும் ரவியும் மனோவின் உடலைப் பார்த்திருப்பார்கள் என்று உறுதியானவுடன் விஜய் அந்த அறையின் எல்லா காமிராவையும்,ஒலிவாங்கியையும்(mic) உடைத்தான்.

“என்னடா பண்ணற? இப்ப எதுக்கு அவங்கள உசுப்பேத்தி விடற” என்று கேட்டான் விக்கி. அந்த அறையில் இருந்த பயணிகள் எல்லோரும் குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பத்தான் வெளிய வருவாங்க.. நம்மால அவங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் ரூமுக்குள்ள வெச்சு  ஒண்ணா சமாளிக்க முடியாது. கன்ட்ரோல்ஸ்ல எதாச்சும் பண்ணி இந்த விண்வெளி நிலையத்தையே அழிச்சுடுவாங்க. அதான் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க இப்படி பண்ணினேன். இப்ப அவங்களில் ஒருத்தன் மட்டும் இங்க வருவான்” என்றான் விஜய்..

“அப்ப அவன நம்ம சுட்டுட்டு அடுத்தவன கவனிச்சுக்கலாம்னு சொல்றியா?”

“அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இன்னும் 20 நிமிஷத்தில இந்த இடத்த அழிக்க ட்ரோன (drone) அனுப்பிடுவாங்க. 25 ஆவது நிமிசத்தில இந்த இடமே இருக்காது”

“அப்ப ஷட்டில்ல ஏறி தப்பிச்சு போயிடலாம்”

“முடியாது. ஷட்டில கன்ட்ரோல் ரூமில இருந்துதான் எஜெக்ட்(eject) பண்ணனும்.”

“அப்ப என்னதான் பண்ணறது”

“நான் கன்ட்ரோல் ரூமுக்கு போறேன். நீ இவங்க எல்லோரையும் ஷட்டிலுக்கு கூட்டிட்டு போ”

“சரி”

“போகும்போது இந்த டோர் பேனல உடைச்சுடு. வீடியோவைப் பாத்துட்டு அவன் நேரா இங்கதான் வருவான். டோரை உள்ளிருந்து திறக்க முடியாது. உள்ளேயே மாட்டிக்குவான். இந்தா இத வெச்சிக்க. இது ஷட்டில திறந்து உள்ள போக உதவி செய்யும்” என்று சொல்லி மித்ராவைக் கழற்றிக் கொடுத்தான். அது அவன் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என அப்போது அவனுக்குத் தெரியாது.

“கவனமா இரு டா.. உள்ள ஒருத்தன் இருப்பான்ல. இதையும் கொண்டு போ” என்று மனோவின் துப்பாக்கியை எடுத்தது கொடுத்தான் விக்கி.

“நீயும் பத்திரம் டா” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விஜய். ஏற்கனவே எல்லா காமிராவையும் செயலிழக்க செய்திருந்தாலும் நேர்வழியாக கன்ட்ரோல் ரூமை நோக்கி சென்றால் எதிரே வருபவனிடம் சிக்க நேரிடும் என எதிர்திசையில் சுற்றிக்கொண்டு சென்றான்.

கன்ட்ரோல் ரூமின் வாசலை அடைந்தான். அந்த அறையில் நுழைய கடவுச்சொல்லை(passsword) பதிவு செய்ய வேண்டும். ஆனால் அங்கு நான்கு விசைப்பலகைகள் இருந்தன. தவறான கடவுச்சொல்லை தந்தாலோ அல்லது தவறான விசைப்பலகையில் விசையை(key) அழுத்தினாலோ தரை திறந்து அடியில் இருக்கும் காப்பறையில் விழ நேரிடும் என அவன் அறிவான். ஏற்கனவே கடவுச்சொல்லையும் சரியான விசைப்பலகை எது என்பதையும் மித்ரா மூலம் கேட்டுத் தெரிந்துவைத்து இருந்தான். அதை உள்ளிட்டு, உள்ளே நுழைந்தான். அங்கு சிபி மிகத் தீவிரமாக காமிராவின் கட்டுப்பாடுகளை திரும்பக்கொண்டுவர கணினியுடன் போராடிக்கொண்டிருந்தான். எனவே விஜய் வந்தததை கவனிக்கவில்லை. விஜய் எளிதாக சிபியை சுட்டு வீழ்த்தினான். எல்லாம் எளிதாக முடிந்தது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

கதவை மீண்டும் மூடிவிட்டு சென்று கணினியில் அமர்ந்தவன், காமிராக்களை மீண்டும் இயங்கச் செய்தான். பின் ஷட்டிலை எஜெக்ட் செய்யும் வேலைகளில் இறங்கினான். சிறிது நேரம் சென்று, வாசலை நோக்கி யாரோ வருவதை காமிரா திரையில் கவனித்தான். விக்கிதான் தன்னைத் தேடி வந்திருப்பான் என்று நினைத்து திரையை உற்று கவனித்தான். ஆம். விக்கிதான் வந்து நின்றிருந்தான். ஆனால் தனியாக இல்லை.

9

கான்பிரன்ஸ் அறைக்கு பணயக் கைதிகளைத் தேடிச் சென்ற ரவியைக் கொஞ்சம் தேடிச் செல்வோம்.. மனோ கொல்லப்பட்டதைப் பார்த்து கோவத்துடன் அவர்களைத் தேடிச் சென்றவன் அந்த அறையில் யாருமே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அறை முழுவதும் சுற்றித் தேடியவன், யாரும் ஒளிந்திருக்கவில்லை என உறுதி செய்துகொண்டு, வெளியேறச் சென்றான். அப்போதுதான் கவனித்தான்.. அந்தத் தானியங்கிக் கதவைத் திறக்கும் விசை (button) சிதைக்கப்பட்டிருந்தது. அவனை உள்ளேயே அடைத்துவைக்க நம் நாயகர்கள் செய்த வேலை என்பதை நாம் அறிவோம்.. அனால், தாளை நீக்கித்தான் கதவைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவர்களுக்குத் தோன்றவில்லை.. தன் லேசர் துப்பாக்கியால் கதவின் தாளைச் சுட, அது தெறித்துத் திறந்தது.

அனைவரும் தப்பித்து எங்கு செல்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். நேரே விண்கலத்தை நோக்கிச் சென்றான்.. கவனமாக, முயலைக் குறிவைக்கும் நரியைப் போல, பதுங்கி மறைந்து சென்றான்..  ஷட்டிலின் வாயிலில், விக்கி நின்றுகொண்டு இருந்தான். ஒவ்வொருவராக ஷட்டிலினுள் செல்ல உதவிக்கொண்டு இருந்தான். இன்னும் நான்கு பேர் தான் ஷட்டிலில் ஏற வேண்டும். அனைவரும் உள்ளே நுழையும் வரை காத்திருந்த ரவி, தனியாக விஜய் வருவதற்காக நின்றிருந்த விக்கியின் பின்புறமாக சென்று, அவன் முதுகில் துப்பாக்கியை அழுத்தி, கைகளை மேலே தூக்கக் கட்டளையிட்டான். பின்பு, நாயகன் முதுகில் வில்லன் துப்பாக்கியை வைத்தவுடன் என்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் நடந்தன. நாயகன் துப்பாக்கியைத் தட்டிவிட்டு வில்லனைத் தாக்குதைத் தவிர. ஷட்டிலின் கதவைப் பூட்டி, பயணிகளை உள்ளே அடைத்தான். விஜய் எங்கு இருப்பான் என்று ரவிக்குத் தெரியும். விக்கி இல்லாமல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விஜயை வெளியே கொண்டுவர முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். விக்கியைக் கூட்டிக்கொண்டு, மன்னிக்கவும், இழுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான்..

கட்டுப்பாட்டு அறையில் ஷட்டிலை அனுப்பும் வேலைகளில் இருந்த விஜய், காமிராவில் ரவி விக்கியை துப்பாக்கி முனையில் அழைத்து வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தான். முதல் முறையாக அவன் திட்டம் தோல்வி அடைந்தது. விக்கி இப்படி சிக்குவான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், அப்படியே உறைந்து நின்றான்.


கட்டுப்பாட்டு அறையின் வாசலை அடைந்த ரவி, கதவைத் திறப்பதற்கான கடவுச்சொல்லை விசைப்பலகையில் உள்ளிடச் சென்றான். ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்குத் தான் விக்கி காத்திருந்தான். அருகில் இருந்த மற்றொரு விசைப்பலகையில் அவன் விசையை அழுத்தினான். தவறான விசைகளை அழுத்தினால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமே.. தரை திறந்து, அதன் அடியில் இருந்த காப்பறையில் அவர்கள் இருவரும் விழுந்தனர். மேலே கதவு மீண்டும் மூடிக்கொள்ள, அவர்கள் அந்தப் அறையில் சிறை வைக்கப்பட்டனர்.

கோவத்தின் உச்சத்தில் இருந்த ரவி, விக்கியின் வயிற்றில் ஓங்கி உதைக்க, அவன் வலுவிழந்து தரையில் சரிந்தான். மற்றொரு சமயமாக இருந்தால் இந்நேரம் விக்கியின் உயிர் போயிருக்கும். ஆனால், இப்போது விக்கிதான் ரவியும் துருப்புச்சீட்டு. அவனை வைத்துத்தான் ரவி தப்பிக்க வேண்டும். அந்த அறையிலும் காமிராவும் ஒலிவாங்கியும் இருக்கும் என அவனுக்குத் தெரியும். காமிராவைப் பார்த்து, “ஒழுங்கா கதவைத் திற.. இல்லைனா உன் நண்பன் இங்கயே உயிரை விட்டுடுவான்” என்று கத்தினான். அவன் பின்னால் தரையில் விழுந்து கிடந்த விக்கி, “வேண்டாம் விஜய்.. கதவத் திறக்காத.. எல்லா பயணிகளும் ஷட்டில்ல ஏறிட்டாங்க. நீயும் தப்பிச்சு போய்டு. என்னைப் பத்திக் கவலைப்படாத” என்றான். அவன் வயிற்றில் மீண்டும் ஓர் உதய் விழ, மயக்கமடைந்தான். இதையெல்லாம் காமிராவில் பார்த்த விஜய், ஒரு முடிவுக்கு வந்தான்.

ஷட்டிலைத் தொடர்புகொண்டு, ஷட்டில் ஆப்பரேட்டரிடம்( shuttle operator) அதை இயக்கி தப்பிக்குமாறு  கூறிவிட்டு, ஷட்டிலை எஜெக்ட்(eject) செய்தான். பின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்டு, ஷட்டிலில் பயணிகள் தப்பி வரும் விவரத்தைக் கூறிவிட்டு, திட்டமிட்டபடி, டிரோன்(drone) மூலம் அந்த விண்வெளி நிலையத்தை அழிக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வின்கலத்தைத் தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோக்கள் (boarding அண்ட் capturing commandos) வரும்வரை காத்திருக்கக் கூறினர்.

பின்பு, காப்ப்பரையின் ஒலிப்பெருக்கிகளை இயக்கி, “ரவி, அந்த ஷட்டில் தப்பிச்சுப் போயாச்சு. இனிமே நீ ஒன்னும் பண்ண முடியாது. காமன்டோஸ் வந்துட்டு இருக்காங்க. நீ தப்பிக்க வழியே இல்லை” என்றான்.

ரவி இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தான். கோவத்தில் விக்கியை சுட்டுக்கொல்ல எத்தனித்தான்.. அப்போதுதான் அவனுக்கு அது நினைவுக்கு வந்தது.. காமிராவை நோக்கி, “இல்லை.. நான் தப்பிக்க முடியும். நான் வந்த ஷட்டில் (சிறையில் இருந்து கைதிகளை தப்புவித்த விண்கலம்) இருக்கு. நான் அதுல தப்பிக்க உதவி பண்ணினா உன் நண்பன் பிழைப்பான். நீ உதவலைனா , நான் எப்படியும் சாக வேண்டியதுதான்.அதனால உன் நண்பனையும் கொன்னுடுவேன்” என்றான்.

விஜய் குழப்பமடைந்தான். ரவியைத் தப்பிக்கச் செய்வது கொஞ்சம் ஆபத்தான காரியம்தான். ஆனால் அவனால் எப்படியும் அந்த விண்கலத்தில் ஏறி தப்பிச் செல்ல முடியாது. தரையிறங்கும் முன்னர் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் ரவியின் மனதிலிருந்த திட்டங்களை விஜய் அறிந்திருக்கவில்லை..
10

மகேந்திரகிரியில் உள்ள தேசிய விண்வெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம், வழக்கத்தை மீறி இன்னும் அதிகப் பரபரப்பாகக் காணப்பட்டது. அனைவரும் எதோ உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்போல உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர். காரணம், “மிதக்கும் சொர்க்கத்தில்” இருந்த பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விண்கலம் ஏறி திரும்ப வருகின்றனர் என்று விஜய் அனுப்பிய செய்தி. எல்லோரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்தாலும், ஒருவர் மட்டும் அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர் தலைமை ஆணையர் அநிருத்தன். எதோ ஓர் முடிவுக்கு வந்தவராக,  தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அருள்மொழியை தன் அறைக்கு வருமாறு தகவல் அனுப்பினார்.

“வணக்கம் சார்..” என்று சொல்லியவாறே உள்ளே நுழைந்தார் அருள்மொழி. அனிருத்தனின் முகவாட்டத்தைக் கவனித்தவர், “என்ன சார், மறுபடியும் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரச்சனையே இன்னும் முடியலை அருள்மொழி.. ஆதாரமில்லாத அந்தத் தகவலை நம்ப  முடியாது. இதுவும் அந்தத் தீவிரவாதிகளோட சதியா இருக்கலாம்”

“நானும் அதை நம்பலை சார்.. தரையிறங்கற விண்கலத்தை மட்டக்களப்பில் உள்ள இராணுவ தளத்தில் இறக்கனும்னு உத்தரவு அனுப்பியாச்சு.. மட்டக்களப்பில் கமாண்டோக்கள் தயாரா இருக்காங்க.. விமானப் படையும் தயாரா இருக்கு.. திட்டமிட்ட பாதையில் இருந்து விண்கலம் மாறி, வேற திசைல போச்சுன்னா, அதைத் தாக்கவும் உத்தரவு கொடுத்திருக்கேன்..”

“நல்லது அருள்மொழி.. பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்காவா பண்ணி இருக்கிங்க.. ஆனா, டிரோன்ஸயும் தயாரா வெச்சிக்கோங்க.. எந்த நேரத்திலும் அதை செலுத்தத் தயார்பண்ணி வையுங்க..”

“சரி சார்”

“தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோ படை என்ன ஆச்சு?”

“10 நிமிடத்துக்கு முன்னாலத்தான் அவங்க விண்கலம் புறப்பட்டு இருக்கு.. இன்னும் 20 நிமிஷத்துல மிதக்கும் சொர்க்கத்த அடைஞ்சுடுவாங்க சார்..”

“நல்லது அருள்மொழி.. கவனமா இருங்க.. முடிஞ்சவரை அந்தத் தீவிரவாதிகளை உயிரோட பிடிக்க முயற்சி பண்ணனும்..”

“சரி சார்”

இவர்கள் இப்படித் திட்டம் போட்டுக்கொண்டு இருக்க, அங்கே ரவியின் திட்டங்களோ கொடூரமானதாக இருந்தது.

கட்டுப்பாட்டு அறையினுள் கையும் காலும் கட்டப்பட்டு தரையில் மயங்கிக் கிடந்தான் விக்கி..

“உன்னால தப்பிக்க முடியாது.. அந்த விண்கலதில் போய் நீ தரையிரங்கறதுக்குள்ள அதை தாக்கி அழிச்சுடுவாங்க.. பேசாம சரணடைஞ்சுடு” என்றான் விஜய்.

“கண்டிப்பா அவங்களால நான் போற விண்கலத்தத் தாக்க முடியாது. ஏன்னா நான் விண்கலத்த என் நாட்டுல தரையிறக்கப் போறேன்.. அதையும் மீறி அவங்க என் நாட்டு வான் எல்லைல நுழைஞ்சு தாக்குனா அதையே காரணமா வெச்சு உங்க நாட்டு மேல பொருளாதாரத் தடை கொண்டு வந்துடுவாங்க.. எப்படி ஆனாலும் எனக்கு சந்தோசம் தான்..” என்றான் ரவி.

ரவி சொல்வதும் ஒருவகையில் உண்மைதான்.. அவன் எதிரி நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் பிறகு எதுவும் செய்ய முடியாது.. விண்கலத்தை அழிப்பதாக இருந்தால் உயர் காற்று மண்டலத்திலேயே (Upper Atmosphere) அழித்தால்தான் உண்டு.. அதற்கு விஜயும் மனதுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான்.

“என்ன? எங்க நாட்டு எல்லைக்குள்ள நுழைஞ்சாதான.. அதுக்குள்ளே தகவல் சொல்லி என்னை போட்டுதள்ளிடலாம்னு யோசிக்கிறியா?” என்றான் ரவி.. விஜய்க்கு இதயமே நின்றுபோனது.. இந்த பாதகன் மனதுள் நினைத்ததை அப்படியே சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டே, இல்லை என்று தலையை ஆட்டினான்.

“நீ அப்பட்டித்தான் யோசிப்பன்னு எனக்குத் தெரியும்.. அதுக்கும் என்கிட்ட ஒரு ஏற்பாடு இருக்கு. இதோ இவன என்னோட அழைச்சுட்டு போறேன்.. ஷட்டில் கிளம்பத் தேவையான கட்டளைகளை கணினிக்கு கோடு. நான் பத்திரமா போய்ச் சேர்ந்ததும் இவன பத்திரமா திருப்பி அனுப்புறேன்” என்று விக்கியைக் கைகாட்டினான் ரவி.

விஜய்க்கு உலகமே காலடியில் நொறுங்கியதுபோல் இருந்தது. தான் உயிருடன் இருக்கும்போது விக்கியை அவனால் பலிகொடுக்க முடியாது.

“நீ என்ன அரிச்சந்திரனா? நீ கண்டிப்பா அவனத் திருப்பி அனுப்ப மாட்ட. உன்ன நம்ப முடியாது” என்றான் விஜய்.

“என்ன நம்பறதத் தவிர உனக்கு வேற வழி இல்லை”

“வேற வழி இருக்கு. நீ கிளம்பின பிறகு நான் எங்க நாட்டுக்கு தகவல் கொடுத்துடுவேன்னு தான விக்கிய கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. விக்கி வேண்டாம். நானே உன்கூட வர்றேன்”

“நீ என்கூட வந்துட்டா அப்புறம் ஷட்டில யார் எஜெக்ட் பண்ணுவா?”

“டைம் படி எல்லாம் தான நடக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறேன்.. விக்கி இப்படியே இருக்கட்டும். கமாண்டோஸ் வந்து அவன விடுவிச்சுக்குவாங்க. அதுக்குள்ளே நம்ம உன் நாட்டு வான் எல்லைக்குள்ள போய்டலாம்.”

ரவிக்கு விஜய் சொல்வது சரி என்றுதான் பட்டது. விஜயை இங்கு விட்டால் அவன் விக்கி இறந்தாலும் பரவாயில்லை என்று தகவல் சொல்லிவிடுவானோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் சரி என்று நினைத்தான். இருந்தாலும் இதில் ஏதும் சதி இருக்குமோ என சந்தேகப்பட்டான். மயக்கம் தெளிந்தாலும் விக்கியால் இயங்க முடியாதபடிக்கு கட்டப்பட்டிருக்கிறான். எனவே அவன் பிரச்சனை இல்லை.. எதாவது செய்வதானால் விஜய்தான் செய்ய முடியும். எனவே விஜயை அழைத்துசெல்லத் தீர்மானித்தான்.

“சரி.. நீ என்கூட வா.. ஷட்டில் எஜெக்ட் பண்ண வேண்டிய கமாண்ட்ஸ் எல்லாம் கொடு” என்றான் ரவி.

விஜய் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.. விசைப்பலகையில் புயலென இயங்கி விண்கலம் கிளம்பத் தேவையான கட்டளைகளைக் கொடுத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஷட்டிலில் போய் ஆட்டோமேடிக் எஜெக்சன் மோடை ஆன் பண்ணினாத் தான் நான் இங்க டைமர செட் பண்ண முடியும். நான் போய் அத ஆன் பண்ணிட்டு வரேன். இரு” என்றான் விஜய். ரவியும் ஷட்டிலை இயக்கும் பயிற்சி பெற்றவன்தான் என்பதால் இது உண்மைதான் என அவனுக்குத் தெரியும். எனவே, “வேண்டாம். நானே போய் ஆன் பண்ணிட்டு வரேன். நீ மற்ற வேலைகளை பாரு” என்று சொல்லிவிட்டு ஷட்டிலை நோக்கிச் சென்றான் ரவி.

அவன் கண்களை விட்டு மறந்ததும் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பின்வரும் செய்தியை தட்டச்சு செய்தான்:

தலைமை விண்வெளி பாதுகாப்பு அதிகாரிக்கு,
தீவிரவாதக் கூட்டத்தின் தலைவன் ரவி, விண்வெளி சிறையில் இருந்து தப்பப் பயன்படுத்திய விண்கலத்தில் தப்பி அவன் நாட்டுக்குள் சென்றுவிட திட்டமிட்டுள்ளான்.. அவன் அந்நாட்டு வான் எல்லைக்குள் நுழையும் முன் வின்கலத்தைத் தாக்கி அழிக்கவும்

விஜய்

கடிதத்தை மீண்டும் வாசித்து சரிபார்த்துவிட்டு அனுப்பினான். மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை உறுதி செய்துகொண்டு, அது அனுப்பப்பட்டதற்கான பதிவை அழித்து, அஞ்சல் பெட்டியை மூடினான். பின்பு மயங்கியிருந்த விக்கியின் அருகில் சென்று அமர்ந்து, “இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள எப்படியாவது சொல்லனும்னு இருந்தேன். இப்ப சொல்லிடுறேன்.. விக்கி.. ஐ லவ் யூ டா..” என்று சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டான்.. பின்பு, தன் கண்களின் ஓரத்தில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஷட்டில் செலுத்தப்பட வேண்டிய வேலைகளை கவனித்தான். எல்லாம் முடியவும், ரவி திரும்ப வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஷட்டிலை நோக்கச் சென்றனர்.
அது ஒரு சிறிய ரக விண்கலம். எனவே அதை இயக்க ஒரே ஒரு ஷட்டில் ஆபரேட்டர் போதுமானது. காக்பிட்டில் (cockpit) ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்கும். சிறைக்குக் கைதிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுசெல்ல வடிவமைக்கப்பட்டது என்பதால், ஷட்டிலில் இருக்கும் கைதிகள் ஆப்பரேட்டரைத் தாக்கி ஷட்டிலைக் கைப்பற்றாமல் இருக்க, இரண்டு பகுதிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியான வெளி வாயில்களுடன் இருக்கும். அதன் பயணிகள் வாயில் வழியாக விஜயை உள்ளே அனுப்பி பூட்டிவிட்டு, முன்பிருந்த ஆபரேட்டருக்கான வாயில் வழியாக ரவி உள்ளே நுழைந்தான். பயணிகள் வாயில், வெளிப்புறத்தில் இருந்தோ, அல்லது ஆபரேட்டர் கட்டளையின் மூலமோ மட்டும்தான் திறக்கும். உள்புறத்தில் இருந்து திறக்க முடியாது. கைதிகளை கொண்டுசெல்வதால் இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் அதில் இருந்தது. எனவே, ரவி தைரியமாக இருந்தான்.

ஷட்டில் எஜெக்ட் செய்யப்படுவதற்கான கவுண்ட்-டவுனை துவக்கினான் ரவி. இன்னும் 5 நிமிடத்தில் புறப்படும் என்று கணினித் திரை காட்டியது. 4 நிமிடம்.... 3 நிமிடம்....2 நிமிடம்....1 நிமிடம்.... என நேரம் ஓடியது.. இன்னும் 40 வினாடிகள் என்று திரையில் ஓடிக்கொண்டிருந்த போது, அதை மிக ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்த ரவி, திரையின் ஓரத்தில், பயணிகள் வாயில் திறப்பதைக் குறிக்கும் குறியீடு ஒளிர்வதை கவனிக்கவில்லை..

பின்புறம், பயணிகள் வாயில் திறப்பதைப் பார்த்த விஜய், மிகவும் குழப்பமடைந்தான். எதோ பிரச்சனையாக இருக்கும் என நினைத்து வெளியே வந்தான். அவன் வெளியேறவும் மீண்டும் அந்தக் கதவு மூடிக்கொண்டது. அடுத்த 10 வினாடிகளில் விண்கலம் எஜெக்ட் ஆனது. அது எப்படி நடந்தது? நமக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று பார்ப்போம்..

விஜயும் ரவியும் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியரவும், மித்ரா விக்கியை மயக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஷட்டிலை திறக்க முன்பு விஜய் மித்ராவை விக்கியிடம் தந்தது நினைவிருக்கலாம். மித்ரா திருடப்பட்டால், அதை அணிபவனை செயலிழக்கச் செய்ய, ஒரு மின்னதிர்ச்சி தரும் அமைப்பு இருந்தது. இப்போது விக்கியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர, அந்த மின்னதிர்ச்சியை சிறிய அளவில் மித்ரா பயன்படுத்தியது. விக்கி பதறி எழுந்தான். மித்ரா நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியது.

விக்கி கட்டுகளை அவிழ்த்துகொள்ள முன்றான்.. முடியவில்லை.அவன் கட்டுகளை விடுவிப்பதற்குள் ஷட்டில் புறப்பட்டுவிடும் போல இருந்தது.

“ஷட்டில புறப்படாம நிறுத்து மித்ரா” என்றான் விக்கி.

“என்னால முடியல.. என்னால தடுக்க முடியாதபடிக்கு விஜய் அதை லாக் பண்ணியிருக்கான்”

“நான் அந்த ரவிகிட்ட பேசணும்.. அதாச்சும் முடியுமா?”

“இல்லை. அதுவும் முடியாது”

விக்கி யோசித்தான்.. எதுவும் புலப்படவில்லை.. “இப்ப அவன எப்படி வெளிய கொண்டுவர?”

“கதவைத் திறந்துதான்”

“ஜோக் அடிக்க இதுவா நேரம் மித்ரா?” என்று கோபித்தவன், உடனே பிரகாசமானான்.. “கரெக்ட்.. கதவைத் திறக்கனும். மித்ரா, அந்த ஷட்டில் டோர..” என்று விக்கி முடிப்பதற்குள், “திறந்துட்டேன்” என்றது மித்ரா. விஜய் கதவைத் தண்டி வெளியேறியதை காமிராவில் பார்த்ததும் மீண்டும் கதவை மூடியது. இது எதுவும் தெரியாத ரவி, எஜெக்ட் ஆனதும் விண்கலத்தை கிளப்பிக்கொண்டு ‘போய்ச்சேர்ந்தான்’. அவன் நிலை என்ன ஆகி இருக்கும் என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அதுபோக, பிற்பாடு நம் நாயகர்களால் துவக்கத்தில் அடைத்துவைக்கப்பட்ட உதய், கமாண்டோக்களால் கைதுசெய்யப்பட்டு, சர்வதேசே நீதிமன்றத்தில் ஆஜராகி, அவன் நாட்டு உளவுத்துறைக்கும் இந்த தாக்குதலுக்கும் இருந்த தொடர்பை ஒப்புக்கொள்ள, அந்த நாட்டின் மீது பொருளாதார, தொழில்நுட்ப தடைகள் கொண்டுவரப்பட்டது தனிக்கதை. இப்போது நாம் ஷட்டிலில் இருந்து வெளியே வந்த விஜய் என்ன செய்தான் என்பதைக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

விஜய் ஓடிச்சென்று விக்கியின் கட்டுகளை விடுவித்தான். கட்டுகள் விடுபட்டதும் விஜயின் கன்னம் பழுக்க ஓர் அறை விட்டான் விக்கி..

“ஏன்டா இப்படி பண்ணின? எண்ணக் காப்பாத்த முயற்சி பண்ணாத.. தப்பிச்சு போய்டுன்னு சொன்னேன் இல்லை.. அந்த தீவிரவாதி தப்பி அவன் நாட்டுக்கு போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்றான் விக்கி. விஜய் பேசவில்லை. தலைகுனிந்து மௌனமாயிருந்தான். விக்கி அவனை நெருங்கி வந்தான். அவன் தாடையை விரல்களால் உயர்த்தி, அவன் கண்களைப் பார்த்தான்..

“நான் மயங்கியிருந்தப்ப என்கிட்ட எதோ சொன்னியாமே.. மித்ரா சொல்லுச்சு”

“அது வந்து....”

“அத நீ சொல்ல மாட்டியான்னு தான் நான் இத்தன நாளா காத்துட்டு இருக்கேன்.. என் கண்களைப் பார்த்து சொல்லு”

“விக்கி.. ஐ லவ் ....”

அந்த வார்த்தைகளை விஜய் முடிக்கும்வரை விக்கி காத்திருக்கவில்லை.. அதற்குள் அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்..

--முற்றும்--

யுத்தம் - பாகம் 2

 கதையை மேற்கொண்டு தொடரும் முன்னர், சில அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. அந்த வெண்புரவியில் வந்த இருவரைத் தான் சொல்கிறேன். அந்த வயதான இளைஞர், ‘சுபர்ணராஷ்டிரம்’ தேசத்தின் அரசர், விதுரசேனன். சிறந்த மதியூகி, மிகச் சிறந்த வீரர். இரண்டாமவர், அவரது ஒரே புதல்வன், இளவரசர் அமரகீர்த்தி. தந்தையின் வீரத்தை முழுதாகவும் விவேகத்தை ஓரளவும் பெற்றவர். அவர்கள் இருவரும் ஒரு முக்கியமான இராஜாங்க விஷயத்தை விவாதிக்க அவர்களின் அண்டை நாடான துர்காபுரிக்கு வந்துள்ளனர்.

தோரண வாயிலைத் தாண்டி, ஒரு காத தூரம் வந்ததும், ஸ்ரீதுவார் என்ற ஒரு அழகிய, பிரம்மாண்டமான நகரம் இருக்கிறது. பெயருக்கேற்றார் போல, ஒவ்வொரு அங்குலமும் செல்வத்தால் நிரம்பி வழியும் செல்வநகரம் அது. அங்குதான் நம் அரச விருந்தினர் இருக்கின்றனர். காட்டு வழியில் நீண்ட பிரயாணம் செய்த களைப்பு நீங்க, அன்று ஒரு நாள் அங்கு தங்கி இளைப்பறிவிட்டு, பின் பயணத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.

அரசரும் இளவரசனும் மதியம் உணவருந்த அமர்ந்திருந்தனர். துர்காபுரியில் மட்டுமே காணக்கூடிய, இராஜாலம் மரத்தின் வட்ட வடிவ இலைகளில் விருந்து பரிமாறப்பட்டது. இராஜ விருந்தை உண்ட பின், ஓய்வறைக்கு இருவரும் வந்தனர்.

“நமக்காகவேண்டி, நம் நாட்டில் விளையும் இளஞ்சாமை தானியத்தைத் தருவித்து சமைத்திருக்கிறார்கள். அருமையான விருந்தோம்பல்” என்றான் இளவரசன். மன்னர் விதுரசேனர் கிண்டலாகப் புன்னகைத்தார்.

“என்ன அப்பா.. உங்கள் புன்னகையே சரியில்லையே.. உண்மை என்ன?”

“நமக்காக எதுவும் தருவிக்கப்படவில்லை அமரகீர்த்தி.. இந்த நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக எல்லாரும் இளஞ்சாமை உணவைத்தான் உண்ணுகிறார்கள்”

“என்ன சொல்கிறீர்கள் தந்தையே..  துர்காபுரியின் செவ்வரகு தானியம்  சுபர்ணாஷ்டிரத்தில் கூட பிரசித்தி பெற்றதாயிற்றே.. இவர்களின் பாரம்பரிய உணவை விடுத்து இவர்கள் ஏன் வேறொரு தானியத்திற்கு மாறினர்?”

“நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமல்லவா?”

“நாம் ஏற்றுமதி செய்யும் இளஞ்சாமையில் விலை குறித்து ஒப்பந்தம் செய்வதற்கு”

உனக்கு வேடிக்கையாய் இல்லையா?”

“நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன்”

“எல்லாம் காரணமாகத் தான். சொல்கிறேன். பொறுமையாக்க் கேள். இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இருபது வருடங்களாக இதைத் திட்டமிட்டு வருகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இவர்கள் இளஞ்சாமையைப் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். செவ்வரகு ஏற்றுமதியை இவர்கள் துவக்கும் வரை.

 நான் தான் செவ்வரகை இங்குள்ள உள்ளூர் வணிகர்களிடம் இருந்து சந்தை விலையைப் போல இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க ஏற்பாடு செய்தேன். செவ்வரகு நம் நாட்டுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு சந்தையில் அதன் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதற்கு மாற்றாக, இளஞ்சாமையை அதைவிட குறைவான விலைக்கு இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இளஞ்சாமைக்கு மாற ஆரம்பித்தனர். அதோடு வருடாவருடம் செவ்வரகு வாங்கும் விலையை ஏற்றி, இளஞ்சாமை விற்கும் விலையை குறைத்துக்கொண்டே வந்தேன். இப்போது இன்னாட்டில் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே செவ்வரகை உண்ணுகின்றனர். சாதாரண மக்களின் உணவு இளஞ்சாமை தான்.

இந்த வருடம் இளஞ்சாமையின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அதனால்தான் ஒப்பந்தம் செய்ய அழைத்திருக்கிறார்கள்”

 “ஆனால் இதெல்லாம் எதற்காக?”

“எதற்காக என்றா கேட்கிறாய்? இந்த நாட்டைக் கைப்பற்றத்தான்”

“அதற்கேன் தந்தையே இந்தப் பகீரத பிரயத்தனம்? நேரடியாகப் படையெடுத்து வந்திருக்கலாமே.. நம்மிடம் இல்லாத படைபலமா? இங்குள்ள வீரர்களின் விரல்களின் எண்ணிக்கையை விட, நம் வீரர்களின் தலைகளின் எண்ணிக்கை அதிகமாயிற்றே.. கால்விரல்களையும் சேர்த்தால் கூட…”

“நான் தான் ஏற்கனவே கூறினேனே.. துர்காபுரிக்குள் ஆயுதத்துடன் நுழைவது சாத்தியமில்லை என்று”

“ஒரு மூட நம்பிக்கைகாகவா இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறீர்கள்?”

“அது மூட நம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை இன்று மாலை தெரிந்துகொள்வாய் அமரகீர்த்தி”

“சரி. அப்படியே வைத்துக்கொண்டாலும், நாம் தானிய விலையை உயர்த்துவதால் அவர்கள் பணிந்து விடுவார்களா? நம்மைவிட குறைவான விலைக்கு விற்கும் தேசத்திடம் வாங்க முற்பட்டால்?”

“இப்போதைக்கு துர்காபுரியுடன் வாணிகத்தில் ஈடுபடும் ஒரே நாடு நாம்தான். அவர்களுக்கு இருக்கும் ஒரே அண்டை நாடும் நாம்தான். நம்மை விட்டு வேறொரு நாட்டிடம் வாங்க முயன்றாலும் அதை நம் நாட்டின் வழியேதான் கொண்டுவர வேண்டும். அதை நான் அனுமதிப்பேன் என்றா நினைக்கிறாய்?”

“சரி. அவர்கள் மீண்டும் செவ்வரகுக்கே மாறிவிட்டால்? அதுதான் அவர்கள் நாட்டிலேயே போதுமான அளவு விளைகிறதே.. நம்மிடம் அதை விற்கத் தடை செய்துவிட்டால்? அப்போது அவர்களுக்கு உள்ளூர் சந்தையில் குறைந்த் விலைக்கு அது கிடைக்குமே..”

“செவ்வரகு கடினமான தானியம். எளிதில் செரிமானம் ஆகாது. நீண்ட காலமாக இளஞ்சாமை போன்ற மெலிதான தனியத்தை உண்ட அவர்களால் எளிதாக செவ்வரகுக்கு மாற முடியாது”

“இது மிகவும் சிக்கலான தீர்வாக இருக்கிறது தந்தையே”

“இதில் ஒரு சிக்கலும் இல்லை மகனே.. படையெடுப்பின் முதல் படி என்ன?”

“முற்றுகை”

“அதைத்தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். துர்காபுரி நாடும் ஒரு வலிமையான கோட்டையைப் போலத்தான். அதைகைப்பற்ற முற்றுகை இட்டிருக்கிறோம். முற்றுகையிடப்பட்ட கோட்டை எதனால் வீழும்?”

“கோட்டைப்பாதுகாப்பு தகர்ந்தாலோ அல்லது உள்ளிருக்கும் குடிகளின் வாழ்வாதாரம் அழிந்து, மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டாலோ மட்டுமே கோட்டை வீழும்”

“அதேதான். துர்காபுரியின் பாதுகாப்பு தகர்க்க முடியாதது. அதனால்தான் நாம் இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுகிறோம்”

“அப்படியானால் ஒரு யுத்தத்தைத் துவங்கிவைக்கத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோமா?”

“இல்லை மகனே.. இருபது ஆண்டுகளாக நடக்கும் நிழல் யுத்தத்தை முடித்து வைக்கத்தான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். நீ சென்று சிறிது ஓய்வெடு. மாலை உனக்கான ஆச்சரியம் காத்திருக்கிறது.”

குழப்பம் அறிவை முற்றுகையட, இளவரசன் அவ்விடம் விட்டு அகன்றான். இளவரசனைக் கொண்டு எளிதாய் இந்த நாட்டை அடைய விதுரசேனன் கணக்கிட்டிருக்க, விதி வேறுவிதமாய் இவற்றை முடிவுக்குக் கொண்டுவர கணக்கிட்டிருந்தது. இப்போதைக்கு நம் இளவரசன் மாலையின் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கிறான். அவனுடன் நாமும் சிறிது காத்திருப்போம்.

(தொடரும்)

யுத்தம் - பாகம் 1

‘துர்காபுரி’ என்றால் “ஊடுறுவ முடியாத அரணை உடைய தேசம்” என்று பொருள். அந்தப் பெயருக்கு மிகவே பொருத்தமாய், மிக்க பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடன் இருந்தது அந்த நாடு. மறையில் கூறப்பட்டுள்ள அரணின் அம்சங்கள் யாவும் அமையப் பெற்று, மூன்று புறம் மலையாலும், ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிருந்தது. அந்த நாட்டினுள் செல்லும் ஒரே பாதை, “மேலவாயில்” என்று அழைக்கப்பட்ட, இரண்டு மலைகளின் ஊடேயிருந்த ஒரு கணவாய். அங்குதான் நாம் இப்பொழுது நின்றுகொண்டு இருக்கிறோம்.

பத்து தேர்கள் இணையாகப் பயணம் செய்யும் அளவுக்கு அகலம் கொண்ட இருவழிப் பாதை, அறுங்கோண வடிவ கற்கள் பதிக்கப்பட்டு, வெளிப்புறம் நோக்கி இலேசான சரிவுடன், அமைதியான நீர்ப்பரப்பைத் தோற்கடிக்கும் சமதளமாய் இருந்தது. அந்த இராஜபாட்டைக்கு கிரீடம் வைத்தாற்போல, அம்பாரியுடம் அதன்மேல் கொடியும் தாங்கிய யானைகள் கடக்கும் அளவுக்கு உயரமாய், அழகிய வேலைப்பாடுகளுடன் நின்றது அந்தத் தோரண வாயில். தோரண வாயிலின் முன்பு, வீரர்களுடன் நூறு குதிரைகளும், ஆயிரம் காலாள் வீரர்களும் கொண்ட ஒரு சிறுபடை நின்றுகொண்டிருந்தது.

அந்தப் படையின் முன்புறம் அவற்றினை தலைமை தாங்கி, மூன்று புரவிகள் நின்றன. நடுவே நின்ற வெண்புரவியின் மீது, அகன்ற மார்பின் மீது நீலக்கற்கள் கொண்ட ஒரு ஆரமும், வலிமையான புஜங்களின் மீது, பொன்னாலான ஒரு காப்பையும் அணிந்த கம்பீராமான ஒரு மத்திம வயது ஆள் இருந்தார். அவருக்கு வலப்புறத்தில் மற்றொரு வெண்புரவியில், தேவாதி தேவர்களும் பார்த்து பொறமை கொள்ளும்படியான அழகுடனும், அமைதியும் தீர்க்கமும் ஒருங்கே அமைந்த வட்ட முகத்துடனும் கூடிய ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனும் புஜங்களில் பொன் காப்பும், கழுத்தில் மரகதக் கற்களாலான ஒரு மாலையும் அணிந்திருந்தான். இடது ஓரத்தில் இருந்த, வெள்ளிக்காப்பும், முத்துமாலையும் அணிந்திருந்த இளைஞனை நோக்கி, “தூதுவரே.. இவர்கள் போர் வீரர்கள் அல்லவே.. எங்கள் மெய்க்காவல் படையினர்தானே.. இவர்களையும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்வது எதற்காக?” என்று கேட்டான்.

மத்தியில் இருக்கும் அந்த நபர், “மகனே.. பதற்றப்படாதே. இது இவர்களின் சம்பிரதாயம். நாம் இதை மீறலாகாது. தூதுவரே.. நீங்கள் வாயில்பிரதானியிடம் சென்று ஆயுதங்களை வரன்முறைப்படுத்தி ஒப்படைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

“நன்றி வேந்தே!” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த வாயிற்கோட்டையை நோக்கிச் சென்றார் அந்தத் தூதுவர். அவர் கண்ணிலிருந்து மறைந்ததும், “தந்தையே, எல்லா ஆயுதங்களையும் ஒப்படைப்பது சரியா? இதற்குப் பின் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ?” என்றான் அந்த இளைஞன்.

“இல்லை மகனே.. இந்தத் தோரணவாயிலை ஆயுதத்துடன் கடக்கலாகாது. இது புனிதமானது. மீறிக் கடப்பவர்கள், மாய்ந்துபோவார்கள் என்பது ஐதீகம்”

“இது மூடநம்பிக்கையாகத் தெரிகிறது அப்பா” “மூடநம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை நீயே விரைவில் அறிந்து கொள்வாய். அதுவும் போக, நம் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை தோரண வாயில் தாண்டியதும் தருவிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்”

இதற்குள் தூதுவர் திரும்பிவிட, அவர்கள் அமைதியாகினர். தூதுவன், “அரசே, ஆயுதங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்தாயிற்று” என்றார். அரசரும், இளவரசரும் முன்னே செல்ல, அந்த மெய்க்காவலர் படை வீரர்கள் அவர்களைத் தொடர்ந்து வாயிற்கோட்டை நோக்கிச் சென்றனர். வாயிற்கோட்டையில், அரசர் உட்பட அனைவரின் ஆயுதங்களும் வகையும் எண்ணமும் குறிக்கப்பட்டு ஒரு அறையில் வைத்து இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டப்பட்டது. வாயிற்பிரதானி ஒரு சாவியை அரசரிடம் ஒப்படைத்துவிட்டு, மற்றொரு சாவியை தன்வசம் வைத்துக்கொண்டார்.

வெளியேறிய பின், இளவரசன் தன் தந்தையைப் பார்த்து, “இந்த வாயில்பிரதானி, அண்டை நாட்டின் அரசன் என்று கூட பாராமல் உங்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துவிட்டாரே? துர்காபுரியின் முதன்மை மந்திரி உங்கள் ஆயுத்தையாவது விட்டுவைக்க உத்தரவிட்டு இருக்கலாம்” என்றான்.

“அவர் எங்கே பறிமுதல் செய்தார்? நானாகத் தானே ஒப்படைத்தேன்.. இந்த விதியில் யாருக்கும் விலக்கில்லை. அதுபோக வாயிற்பிரதானிக்கு உத்தரவிடும் உரிமை இந்நாட்டு மன்னருக்கே கிடையாது. அவரின் அனுமதி இல்லாமல் மன்னரே ஆயினும் எதையும் இந்த வாயிலைத் தாண்டி கொண்டுசெல்ல முடியாது.”

“என்னவோ.. எல்லாம் விசித்திரமாயிருக்கிறது” “பொறு மகனே.. இது இப்போது தான் துவங்கி இருக்கிறது”

இன்னும் துர்காபுரி இந்த இளவரசனுக்கும் நமக்குமாய் ஒளித்துவைத்திருக்கும் விசித்திரங்களைக் காண நாமும் அவர்களுடன் அந்த வாயிலைக் கடந்து பின் தொடர்வோம்.. நீங்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பின்னே வாருங்கள். நான் முன்னே அவர்களுடன் செல்கிறேன்…
(தொடரும்)

புதன், ஆகஸ்ட் 07, 2013

கருப்பு தினம்

Image

ஆகஸ்டு 6 – குரூரத்தின் உச்சத்தை மானுடம் கண்ட நாள். ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள். அணு ஆயுத எதிர்ப்பின் சின்னமாக விளங்கும் நாள். ஆனால், அத்துடன் இந்த விஷயம் அடங்கி விட்டதா? ஜப்பான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

மேம்போக்காகக் கூறப்படும் காரணம் ஜப்பானைத் தோற்கடிக்க. ஆனால் வரலாறு அவ்வாறு கூறவில்லை. ஐரோப்பாவில் யுத்தம் எப்ரலிலேயே ஓய்ந்துவிட்டது. ஜப்பானும் ஏற்கனவே தோல்வியின் விளிம்புக்கே சென்றுவிட்டது. பிறகு எதற்காக இந்தப் பேரழிவு?

அமெரிக்காவுக்கு அவர்கள் ஆயுதத்தை, அது ஏற்படுத்தக் கூடிய அழிவின் எல்லையை பரிசோதித்துப் பார்க்க ஒரு களம் தேவைப்பட்டது. அதன் வலிமையை நிலைநாட்ட, எதிரிகளை அச்சுறுத்த ஒரு களம். அது ஜப்பான்.

ஏன் ஜப்பான்? ஏனெனில் அவர்கள்தான் நிராதரவாய், அவர்களுக்கு உபயோகமற்றவராய் இருந்தனர். நலிந்தவனைத் தாக்கி தன் பலத்தை காட்ட நினைத்த ‘வீரச்செயலே’ அது.
நலிந்தவனை வலியோன் அழிப்பது, பணமும் பலமும் படைத்தவன் அது இல்லாதவனை நசுக்குவது, எண்ணிக்கையில் அதிகம் இருப்பவன் குறைந்தவனை விரட்டுவது எல்லாம் காலம் காலமாக நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், அவ்வளவு ஏன், நிம்மதியாக சாகக்கூட முடியாமல் வாழும் ஈழ மக்களாகட்டும், சொந்த வீட்டிலேயே வாழ முடியாமல் அகதியாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவராகட்டும், எங்கேயும் நலிந்தோர் நசுக்கவே படுகின்றனர். ஒரு சாரார், நம்மிடம் ஒற்றுமை எனும் வலிமை இல்லாததால் அழிக்கப்படுகின்றனர் என்றால், மற்றவர், தங்களின் மனவலிமை குன்றுவதால் அழிகின்றனர்.

இந்த நாளை வெறுமனே ஒரு போர்ச்சுவடாகப் பார்க்காமல், நலிந்தோரை அரவணைக்க அறிவுறுத்தும், ஒற்றுமையைப் பேண வழிவகுக்கும் ஒரு நாளாகப் பார்ப்போம். அகத்தாலும், புறத்தாலும் நம் வலிமையைப் பெருக்கிக் கொள்ள ஒரு நாளாகப் பார்ப்போம்.

[ படத்தில்: ஹிரோஷிமா அமைதிப் பூங்காவின் மத்தியில் இருக்கும் கட்டிடம். இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே அந்த அணு ஆயுதத் தாக்குதலில் இடியாமல் நின்றது. அந்தப் பேரழிவின் சின்னமாக அந்நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது ]

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

Hello World!

"The world will not be destroyed by those who do evil, but by those who watch them without doing anything."
- Albert Einstein

Web Analytics