ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

யுத்தம் - பாகம் 9



கொட்டித் தீர்த்த மழையின் விளைவாய் பத்மாபூரின் முன்னிரவு குளிர்ந்திருந்தது. அதற்கு மாறாக ஆதித்ய விக்ரமரின் மனம் அனலைக் கக்கிக்கொண்டிருந்தது. நிகரற்ற அதிகாரத்தின் இருசியைக் கண்ட அவர் அதைப் பறிக்க ஒரு பகைவன் வந்ததும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. இதுவரை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி துர்காபுரியின் அரண்மனை அவர் பிடிக்குள் இருந்தது. இப்போது முளைத்திருக்கும் இந்தப் புதிய அபாயத்தை அவர் முளையிலேயே கிள்ளி ஏறிய உறுதிகொண்டார்.

எப்பொழுதும் புன்னகையும் கர்வமும் குடியிருக்கும் தன் தந்தையின் முகம் கோவத்தை வெளிப்படுத்துவதைக் கண்ட திவ்யாங்கன் குழப்பமடைந்தான். அமைதியாய் அவர் அருகில் சென்று அமர்ந்தான். அவன் ஏதும் கேட்கும் முன்னதாகவே விதுரசேனர் விடுத்த திருமணக் கோரிக்கையைக் குறித்துக் கூறினார்.

“இதில் நாம் வருந்துவதற்கு என்ன இருக்கிறது தந்தையே? மகாராணியாரும் இளவரசியும் அல்லவா இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

“இது வெறும் திருமணம் குறித்த விஷயம் அல்லவே மகனே.. இந்த நாட்டின் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப்போவது யார் என்பதையும் இது தானே தீர்மானிக்கப் போகிறது?”

“அப்படியே ஆனாலும் இதில் நாம் வருந்த என்ன இருக்கிறது தந்தையே? அரசாளும் வாரிசு யார் என்பதை அரச குடும்பம் தானே தீர்மானிக்க வேண்டும்? இளவரசியார் அமரகீர்த்தியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதைத் தடுக்க நாம் யார்?”

இவ்வாறு கூறும்போது திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. திவ்யாங்கன் ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டான் எனத் தெரிந்திருந்தாலும், இந்த வார்த்தைகளைத் தன் வாயால் வேதனையாகவே இருந்தது. அல்லது அமரகீர்த்தி ஒருவேளை சம்மதித்து விடுவானோ?

“யாரோ ஒரு வந்தேறி ஆட்சி செலுத்துவதற்காக இந்த அரியாசனத்தை இத்தனை காலம் நான் கட்டிக் காக்கவில்லை மகனே..அதில் நீ அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். அதுவே என் எண்ணம்”

தான் கேட்ட வார்த்தைகளின் வீரியம் திவ்யாங்கனை நிலைகுலையச் செய்தது. தன்னை முன்னிருத்தி இத்தனை பெரிய திட்டத்தை தன் தந்தை திட்டியிருப்பார் என திவ்யாங்கன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன அபத்தம் இது தந்தையே? என் மனதில் அவ்வாறு எந்த எண்ணமும் இல்லை. இந்த நாட்டை ஆளும் ஆசை எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது.”

“பொய்யுரைக்காதே மகனே.. இந்தத் திருமணப் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும்போது உன் முகம் வேதனையில் வாடுவதை நான் பார்த்தேன். அரசாட்சியை விடு. இளவரசியின் மீது உனக்கு ஆசையில்லை? அவளைத் திருமணம் செய்துகொள்ள நீ விரும்பவில்லை?”

“சத்தியமாக இல்லை தந்தையே”

“பின்னர் ஏன் திருமணம் குறித்த விவாதத்தின் போது வாடினாய்?”

“ஆம் தந்தையே.. அந்தத் திருமணப் பேச்சு எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அது இளவரசியைக் குறித்தல்ல. இளவரசரைக் குறித்தது.”

ஆதித்ய விக்ரமரின் முகத்தில் குழப்ப ரேகைகள் எட்டிப் பார்த்தன.

“ஆம் தந்தையே.. நான் இளவரசர் அமர்கீர்த்தியைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் மணமுடித்துக்கொள்ள என்னால் இயலாது.”

ஆதித்ய விக்ரமர் நொறுங்கிப் போனார். திவ்யாங்கனின் வார்த்தைகள் உணர்த்தியதைவிடத் தெளிவாக அவன் குரலில் இருந்த உறுதி அவன் காதலை உணர்த்தியது. கோவத்துடன் அவ்விடம் விட்டுச் சென்றுகொண்டுருந்த தன் மகனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இது வேகத்தாலோ வலிமையாலோ தீர்க்ககூடிய சிக்கலில்லை. இதைத் தந்திரத்தால் வெல்ல அவர் தீர்மானித்தார்.

1 கருத்து:

Web Analytics