செவ்வாய், செப்டம்பர் 24, 2013

யுத்தம் - பாகம் 8

பத்மாப்பூரின் வானம் நீலத்திலிருந்து கருமைக்கு நிறம் மாறிக்கொண்டிருந்த அந்தி வேளை. விதுரசேனரின் மனம் தெளிவின் பிரகாசத்திலிருந்து குழப்பத்தின் அந்தகாரத்திற்குள் விழுந்த்கொண்டிருந்தது. மனதின் எண்ணத்தை முகத்தின் பாவத்தால் அறிந்த்கொள்ளும் மதியூகம் உள்ள அவரால், ஆதித்ய விக்ரமரின் மனதிலிருப்பவற்றைப் படிக்க முடியவில்லை. உரையாடலின் போது எதிராள் எதிர்பாராத நேரத்தில் முக்கிய முடிவுகளைக் கூறி, அவர்களின் மன ஓட்டத்தை கணிப்பது அவரின் வழக்கம். ஆனால் அதித்ய விக்ரமனிடம் இந்த வேலை செல்லுபடியாகவில்லை. அவர் உணர்ச்சிகளுக்கு மூடிபோட்டு மூடியிருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் திருமணக் கோரிக்கை உட்பட முக்கியக் காரணிகள் குறித்த மந்திரியாரின் எண்ணத்தை அவர் அறிய முடியவில்லை. குறைந்தபட்சம் அவர் இவற்றை ஒப்புக்கொள்வார அல்லது முட்டுக்கட்டை போடுவாரா என்பதே மர்மமாயிருந்தது.

இவ்வாறு அவர் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தபோது, வாட்டத்துடன் சென்ற தன் மகன் மிகுந்த குதூகலத்துடன் உள்ளே நுழைந்ததைக் கவனித்தார் விதுரசேனர். இந்த அளவுக்கு அவன் உற்சாகமடையும்படி என்ன நடந்திருக்கும் என்ற குழப்பமும் அவரின் குழப்பப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. தன்னை நோக்கித் துள்ளலுடன் வந்த மகனிடம், “என்ன மகனே! இவ்வளவு உற்சாகமாய் இருக்கிறாய்.. என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

“அதைப் பின்னர் கூறுகிறேன் தந்தையே… மந்திரியாருடன் நிகழ்ந்த சந்திப்பு எப்படி? சுமூகமாய் முடிந்ததா?”

விதுரசேனர் நிகழ்ந்த உரையாடல் முழுதையும் விரிவாகக் கூற அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், திருமண விஷயம் பற்றிக்கூறியபோது ஆத்திரமடைந்தான்.

“தந்தையே! நான் தங்களின் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் இப்படி நடந்துகொண்டீர்களே? என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் என் திருமணம் குறித்து எப்படி நீங்கள் முடிவெடுக்கலாம்? எனக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை”

“ஒரு தந்தையாக நான் செய்தது தவறுதான் மகனே... ஆனால் ஒரு தேசத்தின் அரசனாக, கூடும்ப நலத்துக்காக தேச நலத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அது இராஜநீதியாகாது. நாட்டின் நலனுக்காக இந்தத் தியாகத்தை நீ செய்தே ஆக வேண்டியிருக்கிறது”

“உங்களுக்குப் புரியவில்லை அப்பா.. என் இதயம் இப்போது என் வசம் இல்லை. என் காதல் வேறொரு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, இராஜநீதி என்ற பெயரில் ஒரு பெண்ணுக்குத் துரோகம் இழைக்க என்னால் இயலாது.”

விதுரசேனர், ஆகாயம் நொறுங்கி அவர் தலை மீது விழுந்தது போலவும், தன் காலடியில் தரைபிளந்து பாதாளத்தில் விழுந்தது போலவும் உணர்ந்தார். அவர் திகைத்து நிற்க, அமரகீர்த்தி தொடர்ந்தான்: “ஆமாம் தந்தையே! நான் மகாமந்திரியார் ஆதித்ய விக்ரமரின் புதல்வனும், துர்காபுரியின் தளபதியுமான திவ்யாங்கனைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் என்னால் மனதால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான்.

விதுரசேனர் தான் கண்ட கனவிற்குப் பல இடையூறுகள் நேரும் என்று எதிர்பார்த்திருந்தாலும், இந்த ரூபத்தில் ஒரு பிரச்சினை வரக்கூடும் என்று நினைக்கவில்லை. அவரின் மகாசாம்ராஜ்ஜியக் கனவு பொலபொலவெனத் தகர்ந்து விழுந்தது.

“எத்தனையோ எத்தர்களை சமாளித்த என்னால் இந்த ஒருவனைச் சரிகட்ட முடியாதா? கண்டிப்பாக ஒரு வழி இருக்கும்.” விதுரசேனரின் நரிப்புத்தி சிந்திக்கத் துவங்கியது. அதட்டி, மிரட்டித் தன் மகனை வழிக்குக் கொண்டுவர முடியாது. இது விவேகத்தால் சாதிக்க வேண்டிய காரியம். கார்மேகத்தைப் பிளந்து வரும் மின்னலைப் போல அவர் மனதில் ஒரு தீர்வு தென்பட்டது. சிக்கலான, ஆனால் கண்டிப்பாய் அனுகூலம் தரக்கூடிய ஒரு தீர்வு. அவர் நேரே தன் மகனைத் தேடிச் சென்றார்.

“மகனே! என் மீது கோவமா?”

அமரகீர்த்தி பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“உன் மகிழ்ச்சியும் நல்வாழ்வும்தான் எனக்கு முக்கியம் மகனே! உன் காதலுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால் உன் காதல் வெற்றியடைய வேண்டுமல்லவா?”

அமரகீர்த்தியின் கண்கள் கோவத்தையும் அதேசமயம் குழப்பத்தையும் வெளிப்படுத்தின.

“நீ சுபர்ணராஷ்டிரத்தின் இளவரசன். நம் நாட்டை ஆளப்போகிறவன். உன்னை நம்பித்தான் நம் நாட்டின் எதிர்காலமே இருக்கிறது. இல்லையா?”

“ஆமாம்”

“திவ்யாங்கன் துர்காபுரியின் தளபதி. அவன் உன்னை மணந்து உன்னுடன் – நம்முடன் – வர சம்மதிப்பானா? அவனால் உனக்காகத் தன் நாட்டைத் தியாகம் செய்ய முடியுமா?”

அமரகீர்த்தி ஏதோ சொல்லத்துவங்க, அவனைக் கையமர்த்தி, “எனக்குப் பதிலளிக்கவேண்டி இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை மகனே! இது உன்னை நீயே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. உன் காதலனைக் கேட்கவேண்டிய கேள்வி. நன்கு யோசித்து முடிவெடு.”

காரியம் கச்சிதமாய் முடிந்த்தை எண்ணி மகிழ்ந்த்தாய் விதுரசேனர். முடிவு எப்படியாயினும், அது அவருக்கு இலாபமாகவே முடியும். ஒருவேளை திவ்யாங்கன் சம்மதித்துத் தன் மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினால், துர்காபுரியின் தெய்வீகப் பாதுகாப்பு அழியும். வெளியேற மறுத்தால் அவர்கள் காதல் அழியும். எப்படியாயினும், அவர் விரும்பியது நடந்துவிடும்.
மகன் பரிசாய் அளித்த குழப்பத்திற்கு வட்டி சேர்த்து, அவனிடமே திருப்பித் தந்துவிட்டுப் போனார் விதுரசேனர். அமரகீர்த்திக்கு இன்றும் தூக்கம் முள்படுக்கையின் மீதே விதிக்கப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics