செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

யுத்தம் - பாகம் 4

துர்காபுரியின் மிகப் பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் அரச விருந்தினரின் பட்டாளம் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இளவரசன் அமரகீர்த்தியால் அந்த சாலையின் நேர்த்தியான வடிவமைப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இரதமும், புரவியும் விரைந்து செல்வதற்கேற்ற கற்தளம் அமைக்கப்பட்ட சாலை, இரண்டு காதத்திற்கு ஒரு பயணியர் சத்திரம், ஐந்து காதத்திற்கு ஒரு சோதனைச்சாவடி, ஆங்காங்கே காவலர்கள் என மிக பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு என்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரப் பயணிகளின் வசதிக்காக என சீரான இடைவெளியில் விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

துர்காபுரியின் தலைநகர் நோக்கிய இரண்டு நாள் பயணம் விதுரசேனனுக்கும் அமரகீர்த்திக்கும் எவ்வித சிரமமும் இன்றி இருந்தது. ஒரு சிறிய பட்டாளத்துடன் பிரயாணிப்பதால் இத்தனை தாமதம். இல்லையேல் ஒரு பகலில் கூட இந்த தூரத்தைக் கடந்திருக்கலாம். இன்னும் ஒரு நாழிகையில் பத்மாபூருக்குள் நுழைந்துவிடலாம்.

பத்மாபூர் – துர்காபுரியின் தலைநகர். தாமரை போன்ற இதழமைப்புடைய கோட்டைச்சுவரும், அடுக்கடுக்கான கோட்டையின் உட்பிரிவுகளும் கொண்டதால் இந்தப் பெயர் பெற்றது இந்த ஊர். மூன்று அடுக்குகள் கொண்ட அந்தக் கட்ட்மைப்பின் வெளி அடுக்கில் சுற்றுச்சுவரைப் பாதுகாக்கும் படைவீரர்களின் இல்லங்களும், குதிரை, யானை உள்ளிட்ட படை விலங்குகளும், அதைப் பராமரிக்கும் பணியாளர்களின் இல்லங்களும் இருந்தன. மிகப்பெரியதான நடு அடுக்கில் அரச மாளிகை உட்பட மற்ற அனைவரின் உறைவிடம், அங்காடிகள் எல்லாம் இருந்தன. இவற்றின் மையத்தில் இருந்த உள்ளடுக்கில் மிகப் பிரம்மாண்டமான சரபேஸ்வரர் கோயிலும், போர்க்கால உறைவிடம், தானியக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு, கருவூலம் ஆகியவையும் இருந்தன. ஒவ்வொரு அடுக்கும் வலிமையான சுற்றுச் சுவர் மற்றும் பலமான கதவுகளுடன் முந்தைய அடுக்கை விட உயரத்திலும் இருந்தது. ஒருவேளை ஒரு வெளி அடுக்கை தாக்கும் படைகள் கைப்பற்றிவிட்டால்கூட, உள்ளடுக்குக்குப் பின்வாங்கி, அங்கிருந்து அம்பு உள்ளிட்ட எய்தல் வகை ஆயுதங்களால் தாக்கவும், நிலைகளைக் கண்காணிக்கவும் முடியும்.

கோட்டை வாயிலை அடைந்த அமரகீர்த்தி அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தான். வீரசேனனைப் பார்த்து, “தந்தையே.. யாழிகளின் பாதுகாப்பு இல்லாவிடினும்கூட இந்தக் கோட்டையைக் கைப்பற்றுவது மிக கடினமான காரியமாயிருக்கும்போல இருக்கிறதே” என்றான். அவர் சிறிதாய் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு முன்னேறினார்.

கோட்டை வாயிலில் இவர்களை வரவேற்க ஒரு சிறிய பட்டாளம் நின்றுகொண்டு இருந்தது. முன் வரிசையில் ஒரு வீரன் தாம்பாளத்தில் பரிவட்டத் துண்டையும் மலர் மாலையையும் வைத்திருந்தான். அவன் அருகில், கழுத்தில் இரத்தின ஆரமும், இடையில் உடைவாளும் தரித்த ஒரு யுவன் நின்றுகொண்டிருந்தான். அந்த யுவன் துர்காபுரியின் தலைமைத் தளபதி, திவ்யாங்கன். கற்சிலைக்கு உயிர்வந்தாற்போல கட்டான உடல், வீரத்தை வெளிப்படுத்தும் மிடுக்குடன், புன்னகை சிந்தும் முகத்துடன் இருந்தான். ஆனால் புன்னகை சிந்தியது அவன் இதழ்கள் இல்லை. கண்களால் புன்னகைத்தான்.

விதுரசேனனும், அமரகீர்த்தியும் குதிரையில் இருந்து இறங்கி திவ்யாங்கனை நோக்கி வந்தனர். திவ்யாங்கன் அந்தப் பரிவட்டத்தை எடுத்து விதுரசேனனின் தலையில் அணிவித்தான். பின்பு அந்த மலர் மாலையை எடுத்து அமரகீர்த்தியின் கழுத்தில் சூட்டினான். அவ்வளவு நெருக்கத்தில் புன்னகைக்கும் அந்தக் கண்களின் பிரகாசம் தாங்காமல், அமரகீர்த்தி சட்டென குனிந்துகொள்ள, திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. இருந்தும் சமாளித்துக்கொண்டு, “பத்மாபூரிற்கு வருகை தந்தமைக்கு நன்றி வேந்தே.. உங்கள் வருகை இரு தேசத்திற்கும் நல்வரவாகுக.. உங்களுக்கான ஜாகை தயாராக உள்ளது. தாங்கள் தயைகூர்ந்து என்னைப் பின்தொடர்ந்து வரவும்” என்று சொல்லிவிட்டு, கோட்டையின் உள்ளே செல்லலானான்.

விதுரசேனர் மீண்டும் குதிரையில் ஏறினார். ஆனால் அமரகீர்த்தி நின்ற இடத்திலேயே உறைந்து சிலையாகி இருந்தான். விதுரசேனர் அழைக்கவும், கனவில் இருந்து விழித்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் குதிரையில் ஏறினான். அவன் என்ன கனாக் கண்டானோ?

விருந்தினர் அவர்களின் மாளிகைக்குச் சென்றடைந்ததும், திவ்யாங்கன், “வேந்தே.. உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே பொழுது சாய்ந்துவிட்டதால், தாங்கள் இளைப்பறுங்கள். நீங்கள் விரும்பினால், நாளை காலை மகாமந்திரியாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

“மிக்க மகிழ்ச்சி தளபதியாரே.. ஆனால் நான் நாளை சரபேஸ்வரர் பூசையைக் காண விழைகிறேன். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? மந்திரியாருக்கு சம்மதமானால், அவரை நாளை மாலை சந்திப்பதாகக் கூறவும்” என்றார் வீரசேனன்.

“அப்படியே ஆகட்டும் வேந்தே.. தங்கள் விருப்பப்படியே ஏற்பாடு செய்கிறேன். அதோடு, மன்னர் என்னை திவ்யாங்கன் என்று பெயரிட்டே அழைக்கலாம்”

“இல்லை தளபதியாரே.. தங்கள் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறதல்லவா..”

“எப்படியோ.. தங்கள் சித்தம் வேந்தே.. இப்போது தாங்கள் அனுமதித்தால் நான் வெளியேறுகிறேன்”

“நல்லது தளபதியாரே.. சென்று வாருங்கள்”

செல்லும் முன் அமரசேனனைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன் இளவரசே..” என்று சொல்லி புன்னகைத்தான். பின்பு வாயிலை நோக்கிச் சென்றான்.

இளவரசனின் மனம் ஏனோ “திவ்யாங்கா.. போகாதே..” என்று அலறியது. ஆனால் அவன் வாயிலிருந்து ஒலி ஏதும் எழ மாட்டேன் என்றது.. வாயிலை அடைந்த திவ்யாங்கன், இளவரசனின் மனவொலியைக் கேட்டவன் போல, பின்னால் திரும்பி அவனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, பதிலாக அமரகீர்த்தியின் தூக்கத்தை அள்ளிக்கொண்டு சென்றான்.
(தொடரும்)

2 கருத்துகள்:

Web Analytics