வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

யுத்தம் - பாகம் 5

பத்மாபூரின் சரபேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. விதுரசேனரும், அமரகீர்த்தியும் மட்டும் அர்த்தமண்டபத்தில் நின்றிருக்க, திவ்யாங்கனும், மற்ற வீரர்களும் ஆஸ்தான மண்டபத்தில் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாவரும் வழக்கம்போல ஆஸ்தான மண்டபத்தில் நின்று தரிசனம் செய்துகொண்டிருந்தனர். விதுரசேனர் உள்ளிருந்த கருவறையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அமரகீர்த்தியின் கவனமோ, வெளியே இருந்தது.
அந்நேரத்தில் இருவர் கவனத்தையும் கவரும்படிக்கு இராஜ அடையாளங்கள் தரித்த இரண்டு பெண்கள் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தனர். தேவ கன்னிகை மண்ணில் வந்தாற்போல அழகான யுவதியும், அவளின் தாயும். அவர்களின் பின்னே உள்ளே வந்த திவ்யாங்கன், “வேந்தே, துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் வந்துள்ளனர்” என்று விளக்கினான். விதுரசேனர் மரியாதை நிமித்தம் புன்னகைக்க, மகாராணியாரும், புன்னகையோ என்று சந்தேகிக்கும்படி ஒரு பாவனை செய்துவிட்டு, கருவறை நோக்கித் திரும்பிக்கொண்டார்.

விதுரசேனர் தரிசனம் செய்து முடித்துவிட்டபடியால், “மகனே.. வெளியேறலாமா?” என்றார். அதற்குத்தான் காத்திருந்தவனாய் உடனே “சரி தந்தையே..” என்று கூறிவிட்டு வெளியே வந்தான். இருவரும் பிரகாரத்தை சுற்றிவிட்டு, மகா மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு சிறிது தூரத்தில் திவ்யாங்கனும் அவன் வீரர்களும் நின்று காவல்புரிந்தனர். விதுரசேனர் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் வண்ண ஓவியங்களும் நிறைந்த அந்த மண்டபத்தின் அழகை இரசித்துக்கொண்டிருக்க, இளவரசர் இரசனை வேறு விதமாய் இருந்தது.

அந்நேரத்தில், துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் அவர்களை நோக்கி வர, இருவரும் எழுந்து நின்றனர். மகாராணி நீலாம்பாள் விதுரசேனரிடம் வந்து, “வேந்தர் எம்மை மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு தரிசிக்க இருப்பதை நாங்கள் அறியவில்லை. தினமும் சரபேஸ்வர மூர்த்தியை தரிசிப்பது எங்கள் வழக்கம். அதன்படியே இங்கு வந்தோம். சன்னிதியில் வைத்து ஒருவருக்கு மரியாதை செய்வது தெய்வநிந்தனை. ஆதலால்தான் என்னால் ஏதும் கூறவில்லை. தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

“அதனால் என்ன மகாராணியாரே.. நாங்கள் ஏதும் தவறாக நினைக்கவில்லை.” என்றார் விதுரசேனர்.

“நல்லது வேந்தே.. உங்கள் உறைவிடம் சௌகர்யமாக இருக்கிறதா?”

“சௌகர்யத்திற்கு என்ன குறைச்சல் மகாராணியாரே.. துர்காபுரியின் விருந்தோம்பல்பற்றி உலகமே அறியுமே..”

“அது எங்கள் பாக்கியம் அரசே.. நாங்கள் இப்போது விடைபெறுகிறோம்”

அந்தப் பெண்டிர் இருவரும் வாயிலை நோக்கிச் சென்றனர். செல்லும்போது இளவரசி தன் மிரட்சியான கயல் விழிகளினால் திவ்யாங்கனை ஓரப்பார்வை ஒன்று பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள். திவ்யாங்கன் அதை கவனிக்கவில்லை. ஆனால் அமரகீர்த்தி கவனித்துவிட்டான். அவன் உள்ளம் கொதித்தது. இளவரசியின் மீது வேறுப்படைந்தான்.

அவர்கள் இருவரும் கண்ணைவிட்டு மறைந்ததும், “ஏன் தந்தையே.. நாம் இங்கு தரிசிக்க வருவதுகூட தெரியாது என்று கூறுகின்றனரே.. இந்த தேசத்தின் மகாராணிக்குத் தெரியாமலா ஏற்பாடு செய்திருப்பார்கள்?” என்றான் அமரகீர்த்தி.

“அவர் பெயரளவுக்குதான் மகாராணி.. அவரிடம் எந்த அதிகாரமும் பொறுப்பும் இல்லை. மன்னர் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பு முழுதும் மகாமந்திரியாரிடம்தான் இருக்கிறது. காலஞ்சென்ற மன்னருக்கு ஆண்வாரிசு இல்லையாதலால் இளவரசிக்குத் திருமணம் ஆகும்வரை ஆட்சி, அதிகாரம் முழுதும் மகாமந்திரியார் வசம்தான்.” என்று கூறியவர், இரகசியமான குரலில், “அவர் மகாராணியை மதிப்பதில்லை என்றும், எந்த விவகாரத்திலும் மகாராணியின் கருத்தைக் கேட்கவோ ஆலோசிக்கவோ மாட்டார் என்றும் கூறுகிறார்கள்” என்றார்.

“அவ்வளவு செருக்குள்ள மனிதரா அவர்?” என்று இளவரசன் கோவத்துடன் கேட்க, அவனை அமைதியாயிருக்க சைகை காட்டிய மன்னர், சன்னமான குரலில், “தனயன் முன்பாகவே தகப்பனைப் பற்றிக் குறைவாய்ப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? அமைதியாய்ப் பேசு மகனே” என்றார்.

இளவரசன் குழப்பமாய்ப் பார்க்கவும், “ஆம் மகனே.. மகாமந்திரியாரின் புதல்வன்தான் தளபதி திவ்யாங்கன்” என்றார்.

சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு, “இளவரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மகனே?” என்று கேட்டார் விதுரசேனர்.

“அடக்கமான பெண். நல்ல குணவதியாய்த் தெரிகிறாள். புத்திசாலியாகவும் இருப்பாள் என்று தோன்றுகிறது”

“அவளை அடையப்போகும் வாலிபன் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?”

“கண்டிப்பாக தந்தையே.. “ என்று கூறியவன், சில கணங்களுக்குப் பின்தான் தன் தந்தையின் மனதிலிருந்த கணக்கைப் புரிந்துகொண்டான். “போரை இப்படியா முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?” என்று நினைத்து அதிர்ச்சியுடன் அவன் நின்றிருக்க, “சரி மகனே.. கிளம்பலாம்.. “ என்று சொல்லி அவர் முன்னே செல்லலானார்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics